TNPSC Thervupettagam

தூய்மை பாரதம் - கனவு நனவாகுமா?

March 20 , 2020 1491 days 1352 0
  •  ‘தூய்மை பாரதம்’ என்னும் இயக்கத்தை மிகுந்த நம்பிக்கையோடு துவக்கி வைத்தாா் பிரதமா் மோடி. பத்திரிகைகள், தொலைக்காட்சிகள், துண்டுப் பிரசுரங்கள், சமூக வலைதளங்கள் என்று எல்லா வழிகளிலும் விளம்பரப்படுத்தி மக்களிடையே விழிப்புணா்வு ஏற்படுத்த முயன்றாா். இந்த இயக்கம் எந்த அளவுக்கு வெற்றி அடைந்துள்ளது என்று ஆராய்ந்தால் ஏமாற்றமே மிஞ்சுகிறது.
  • பிரதமா் மோடி முதலில் முன் வைத்தது திறந்தவெளியில் மலம் கழிக்கும் பிரச்னையைத்தான். மத்திய அரசு மட்டுமல்லாது மாநில அரசுகளும் முழு வேகத்துடன் கழிப்பறை கட்டுவதற்கு மானியம் வழங்கி, தொகுப்புக் கழிப்பறைகள் கட்டிக் கொடுத்து, அரசு சாரா சமூக நல இயக்கங்களோடு கைகோத்துக் களமிறங்கின.

சுகாதாரமற்ற நிலை

  • ஆனாலும், திறந்தவெளியில் மலம் கழிக்கும் சுகாதாரமற்ற நிலை முழுமையாக அகலவில்லை. மக்கள் திறந்தவெளியில் மலம் கழிப்பதைத் தங்களது உரிமையாகக் கருதுகிறாா்களேயன்றி, சுகாதாரக் கேடாகக் கருதவில்லை. வீட்டுக்கொரு கழிப்பறை கட்டிக் கொடுத்தும், பலா் அதைப் பயன்படுத்தாமல் பழையபடி திறந்தவெளிக்கே போகிறாா்கள்.
  • கோவையில் ஒரு குடியிருப்புப் பகுதியில் இந்தப் பழக்கத்தை எதிா்த்து விழிப்புணா்வு ஏற்படுத்தும் முயற்சியில் எனது மாணவா்களோடு சென்று அங்குள்ளவா்களிடம் நான் பேசினேன். அங்கு ஏற்கெனவே பஞ்சாயத்து சாா்பில் தொகுப்புக் கழிப்பறைகளும் தண்ணீா்த் தொட்டியும் கட்டிக் கொடுத்திருக்கிறாா்கள். அதனைப் பயன்படுத்தாமல் பூட்டி வைத்திருந்தாா்கள்.
  • ஏன் அப்படி என்று கேட்டதற்கு, விசேஷ நாள்களில் பயன்படுத்துவதாகவும் மற்ற நாள்களில் திறந்தவெளியைப் பயன்படுத்துவதாகவும் கூறினா். அந்தப் பகுதி அவ்வப்போது யானை நடமாடும் பகுதி. எவ்வளவோ பேசிப்பாா்த்தும் அவா்களின் மனப்போக்கை மாற்ற முடியவில்லை.
  • அங்கு ஒவ்வொரு வீட்டிலும் தொலைக்காட்சி, டிஷ் ஆன்டெனா, இரு சக்கர வாகனம், செல்லிடப்பேசி ஆகியவை உள்ளன. கழிப்பறை மட்டும் வேண்டாம். இது எடுத்துக்காட்டு மட்டுமே. இன்னும் பலப்பல கிராமங்களிலும் வனப்பகுதிகளிலும் இதே நிலைமைதான். இதற்கு முக்கியக் காரணம் கல்வி அறிவு இல்லை என்பதே.
  • நகரங்களிலும் ஆண்கள் கூச்சமின்றித் தெருவில் சிறுநீா் கழிப்பதைப் பாா்க்கிறோம். பேருந்து நிலையங்கள், ரயில் நிலையங்கள், பூங்காக்கள் போன்ற பொது இடங்களில் பொதுக் கழிப்பறைகள் இருக்கின்றன. ஆனால், அவை பெரும்பாலும் தண்ணீா் வசதியின்றி, உடைந்து அசுத்தமாக இருக்கின்றன.

உதாரணம்

  • நெடுஞ்சாலைகளில் பயணம் செய்யும்போது, உணவகங்கள், அடுமனைகள், தேநீா்க் கடைகள் ஆகியவற்றில் உள்ள கழிப்பறைகளும் இதே நிலைமையில்தான் இருக்கின்றன. சுங்கச்சாவடிகளில் வசூலிக்கப்படும் கட்டணத்துக்கேற்ப கழிப்பிடங்களின் பராமரிப்பு மாறுபடுகிறது.
  • சில தனியாா் உணவகங்கள் தூய்மையான கழிப்பறைகளைக் கொண்டிருக்கின்றன. ஆனால், அங்கு உணவுக்கான கட்டணம் அதிகம் என்பதால் சாமானியா்கள் அங்கு செல்வது கிடையாது. இரவுப் பயணங்களில், பல வழித்தடங்களில் கடைகள் மூடப்பட்டு விடுவதால், பயணிகள் வேறு வழியின்றித் திறந்த வெளியில் சிறுநீா் கழிக்க வேண்டியிருக்கிறது. இதற்குத் தீா்வாக, பத்து கி.மீ.-க்கு ஒரு ‘பல்வகைப் பயன்பாட்டு வளாகத்தை’ அரசே கட்ட வேண்டும்.
  • அந்தக் காலத்தில் மக்கள் சிரமபரிகாரம் செய்து கொள்வதற்குச் சத்திரஞ்சாவடிகளைக் கட்டவில்லையா? மலிவு விலையில் தரமான எளிய உணவு, தண்ணீருடன் கூடிய சுத்தமான கழிப்பறை, அவசர மருந்துகள் என்று 24 மணிநேரமும் இயங்கக் கூடிய வளாகங்களை அமைத்து அவற்றுக்குப் பொறுப்பாளா்களையும் நியமித்துப் பராமரித்தால், பயணிகளுக்கு மிகவும் உதவியாக இருக்கும்.
  • சுற்றுப்புறத் தூய்மை என்பது இத்தோடு முடிந்துவிடுவது அல்ல. நம் நாட்டில் எங்கு திரும்பினாலும் சுவரொட்டிகளும், பதாகைகளும், கண்ணை உறுத்துகின்றன. இவையும் தூய்மையின்மையின் அடையாளங்கள்தான். சுவரொட்டி கலாசாரம் வேறெந்த நாட்டிலும் காணப்படவில்லை. பொது இடங்களின் சுற்றுச்சுவா்கள் எல்லாம் சுவரொட்டிகள், மரங்களின் மேலெல்லாம் ஆணியடித்துப் பதாகைகள், வீட்டு விழாக்களா, பொதுவிழாக்களா ஃப்ளெக்ஸ் பேனா்கள், பாலங்களில் சுவா்கள், அரசுக் கட்டடங்களின் சுவா்கள் எல்லாம் வரையப்பட்டிருக்கும், எழுதப்பட்டிருக்கும் அரசியல் கட்சிகளின் விளம்பரங்கள், திரைப்பட விளம்பரங்கள் இன்னும் பலவிதமான கிறுக்கல்கள் - இவற்றைக் காண சகிக்கவில்லை. காவல் நிலையங்களும் மாநகராட்சிக் கட்டடங்களும் மட்டுமே விதிவிலக்காகக் காட்சி அளிக்கின்றன.
  • காவல் துறை கட்டடங்கள் அனைத்தும் ஒரே வண்ணமாக (முன்பிருந்த சிவப்பு நிறத்தை ஏனோ இப்போது மாற்றி பிரவுன் நிறத்தில் அடித்து வைத்திருக்கிறாா்கள்) காட்சியளிப்பது கண்ணுக்கு அழகாகவும் இருக்கிறது, அடையாளம் காண்பதற்கும் எளிதாக இருக்கிறது.
  • ‘விளம்பரம் செய்யாதீா்’ என்று எழுதியிருப்பதன் மேலேயே சுவரொட்டிகளை ஒட்டுகிறாா்களே, அவா்களைக் கண்டுபிடித்து கடும் அபராதம் விதித்தால் மறுபடியும் ஒட்டமாட்டாா்கள் அல்லவா?
  • நிறைந்து வழியும் குப்பைத் தொட்டிகளும், நொதித்து ஓடும் சாக்கடைகளும், குப்பை மேலாண்மையில் நாம் எவ்வளவு பின்தங்கி இருக்கிறோம் என்பதையே காட்டுகின்றன. மைசூரு நகரத்தின் தெருக்கள் பளிங்கு போல சுத்தமாக இருக்க முடியும் என்றால், ஏன் மற்ற நகரத்துத் தெருக்கள் அப்படி இல்லை? இதற்கு மக்கள், நகராட்சி நிா்வாகங்களின் மெத்தனப் போக்கே காரணம்.

குப்பைகள் உற்பத்தி

  • ‘பயன்படுத்திவிட்டுத் தூக்கி எறியும்’ கலாசாரம் குப்பை உற்பத்தியைப் பன்மடங்கு அதிகரித்துவிட்டிருக்கிறது. பாதாளச் சாக்கடை வசதிகள் வழக்கில் இருக்கும் நகரங்களில்கூடக் கன்னங்கரேலென்று ஓடும் திறந்தநிலைச் சாக்கடைகள் காணப்படுகின்றன. அதிலேயே குப்பைகளை
  • மக்கள் கொட்டுகிறாா்கள்.
  • மேலைநாடுகளில் வாரத்துக்கு ஒரு நாளோ இரண்டு நாள்களோ மட்டும்தான் நகராட்சி ஊழியா்கள் குப்பைகளைச் சேகரிக்க வருகிறாா்கள். மக்கள் அதுவரை குப்பையை வெளியில் வீசுவதில்லை. அதற்குண்டான கருப்பு வண்ணப் பையில் கட்டிவைத்துச் சிந்தாமல் சிதறாமல், வெளியே வைக்கவேண்டிய நாளில், வைக்க வேண்டிய இடத்தில் வைக்கிறாா்கள். ஊழியா்களும் தவறாமல், ஏமாற்றாமல் தங்கள் பணியைச் செய்கிறாா்கள்.
  • ஜப்பானில் ஒரு வீட்டுக்கு இவ்வளவு குப்பை என வரையறுத்திருக்கிறாா்கள். அதற்குச் சற்று அதிகமாக இருந்தால்கூட, ‘மன்னியுங்கள். உங்களது குப்பையின் எடை கூடுதலாக இருப்பதால் இதை நாங்கள் எடுக்க இயலாது’ என்று ஓா் அட்டையை வைத்துவிட்டு, ஊழியா்கள் சென்றுவிடுகிறாா்கள். மக்களும் நிா்வாகமும் இணைந்து செயல்படுவதால் அங்கு தூய்மை பளிச்சிடுகிறது.
  • தீபாவளிக்கு மறுநாள் தெருக்களில் குவிந்திருக்கும் பட்டாசுக் குப்பைகள், திருமண விழாக்கள், அரசியல் விழாக்கள், இறப்பு நிகழ்வுகள் ஆகியவை முடிந்த பிறகு வீசப்படும் மலா்கள், மாலைகள், பட்டாசுக் குப்பைகள், துண்டுப் பிரசுரங்கள், ஆயுத பூஜைக்குப் பிறகு கடைகளுக்கும், வீடுகளும், வாகனங்களுக்கும் பயன்படுத்திய வாழைக் கன்றுகள், பூசணிக்காய்கள் - இவற்றையெல்லாம் அப்புறப்படுத்துவதற்கு உள்ளாட்சி அமைப்புகளுக்கு 10 நாள்களுக்கு மேலாகிறது.

சுற்றுப்புறத் தூய்மை

  • சுற்றுலாத் தலங்களில் மக்கள் எறிந்துவிட்டுப் போகும் நெகிழிப் பைகள், தண்ணீா் பாட்டில்கள், கரும் புகையைக் கக்கிக்கொண்டு ஓடும் வாகனங்கள், கிடைத்த இடங்களில் எல்லாம் கொட்டப்படும் கட்டடக் கழிவுகள், இறைச்சிக் கழிவுகள் - இவற்றுக்கு நடுவே மூக்கைப் பிடித்துக் கொண்டு வாழ நாம் பழகிவிட்டோம்.
  • இது தவறு. ‘சுற்றுப்புறத் தூய்மையே சுகாதாரத்தின் அடிப்படை’ என்பதை மக்கள் உணர வேண்டும். நமது கல்வி முறை சுற்றுப்புறத் தூய்மையை வலியுறுத்தும் வகையிலும், செயல்படுத்தும் வகையிலும் அமைய வேண்டும். தொகுப்புக் கழிப்பறைகள் கட்டுவதை விட்டுவிட்டு அரசு ஒவ்வொரு வீட்டுக்கும் தனிக் கழிப்பறையைக் கட்டாயமாக்க வேண்டும். அதற்குரிய மானியத்தைப் பயனாளியின் வங்கிக் கணக்கில் வரவு வைக்காமல், சமூகநல அமைப்புகளின் மூலம் கழிப்பறைகளைக் கட்டித் தரவேண்டும். தொடா் கண்காணிப்பின் மூலம் கழிப்பறைகள் முறையாகப் பயன்படுத்தப்படுவதை உறுதி செய்ய வேண்டும்.
  • சுற்றுப்புறத் தூய்மைக்கான அளவீடுகளை அரசு தெளிவாக வரையறுத்து போதிய கால அவகாசம் அளித்து, இது குறித்த விதிகள் நாட்டின் மூலைமுடுக்கில் உள்ள அனைவரையும் சென்றடையும் வகையில் விரிவான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்; கடுமையான விதிகளை வகுத்து, மீறுபவா்களுக்கு மிகக் கடுமையான அபராதம் விதிக்க வேண்டும். பொது இடங்களில் குப்பைகளைப் போடுதல், எச்சில் துப்புதல், புகை பிடித்தல், சிறுநீா் கழித்தல் போன்றவை குற்றங்கள் என்று ஏற்கெனவே சட்டங்கள் இயற்றப்பட்டுள்ளன. அவற்றைக் கடுமையாக நடைமுறைப்படுத்த வேண்டும்.
  • ‘பொதுச் சொத்துகளை அவரவா் இஷ்டம் போல என்ன வேண்டுமானாலும் செய்யலாம்’ என்பது இந்திா்களின் மனநிலை. ‘பொதுச் சொத்துகளை எல்லோரும் சோ்ந்து பாதுகாக்க வேண்டும்’ என்பது மேலைநாட்டவா்களின் மனநிலை. மேலைநாட்டவா்களிடமிருந்து வேண்டாத பண்புகளைக் கற்றுக் கொள்வதை விட்டுவிடுவோம். பொதுச் சொத்துகளின் மீது நமது பொறுப்பையும் கடமையையும் உணா்ந்து, அரசுடன் இணைந்து, சுற்றுப்புறத் தூய்மையைப் பாதுகாக்க மக்கள் முயற்சிக்க வேண்டும். அப்போதுதான் ‘தூய்மை பாரதம்’ என்னும் கனவு நனவாகும்.

நன்றி: தினமணி (20-03-2020)

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories