TNPSC Thervupettagam

தமிழ்நாடு மாநில குழந்தைகளுக்கான கொள்கை

May 8 , 2023 364 days 960 0

FOR ENGLISH VERSION TO THIS ARTICLE, PLEASE CLICK HERE

  • எல்லாக் குழந்தைகளும் வன்முறை, சுரண்டல், தவறாக நடத்தப் படுதல் (சொல், உடல், மனம், பாலியல் ரீதியாக உள்ளிட்ட அனைந்து விதத்திலும்) புறக்கணிப்பு, அடிப்படைத் தேவைகள் கிடைக்காமல் இருப்பது மற்றும் பாகுபாடு ஆகியவற்றிலிருந்துப் பாதுகாப்பாகவும் மகிழ்ச்சியானதொரு குழந்தைப் பருவத்தை அனுபவிப்பதற்கும் தகுதியுடையவர்கள் ஆவார்.
  • அதைப் போலவே குழந்தைகள் எதிர்கொள்ளும் அச்சுறுத்தல்கள் சவால்களுடன் வாய்ப்புகளும் மாறி வருகின்றன.
  • உலகெங்கிலும் உள்ள குழந்தைகள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் பெரும்பாலும் ஒன்றோடொன்று தொடர்புடையவை மற்றும் உலகளாவியவை ஆகும்.
  • இந்திய அரசியலமைப்பு சாசனம் நிர்ணயித்த கோட்பாடுகளின் அடியொற்றி ஒட்டுமொத்த நாடு சீராக முன்னேறிச் சென்று கொண்டிருக்கும் போது, தமிழ்நாடு ஒட்டு மொத்தக் குறியீடுகளின் அடிப்படையில் மிகப்பெரிய எல்லைகளை வெகு விரைவாகக் கடந்து வந்து உள்ளது.
  • குழந்தைகளின் தேவைகளைப் பூர்த்தி செய்ய, குழந்தைப் பாதுகாப்பு மற்றும் நலன் சார்ந்த சேவைகளை செயலூக்கத்துடன் வழங்கச் செய்வதில், தமிழகம் முன்மாதிரியாகவும், முன்னோடியாகவும் பார்க்கப் படுகிறது.
  • கல்வியில் ஏற்கனவே இருக்கும் சமத்துவமின்மை, கணிணி தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவதில் உள்ள (டிஜிட்டல் வசதியில்) ஏற்றத்தாழ்வு. கற்றல் நெருக்கடி. குழந்தைகளுக்கு எதிரான வன்முறைகள், வறுமை ஆகியவற்றைத் தீவிரப்படுத்தி, குழந்தைகளுக்கு நேரும் பாதிப்பை கோவிட்-19 மேலும் அதிகப்படுத்தியுள்ளது.

தமிழ்நாடு மாநில குழந்தைகளுக்கான கொள்கை ஒரு பார்வை

  • தேசிய அளவில் ஒப்பிடும் போது தமிழ்நாடு அரசு மேற்கொண்ட பல்வேறு நடவடிக்கைகளால் குழந்தைகளின் வளர்ச்சி மற்றும் பாதுகாப்பில் நமது மாநிலம் முன்னேற்றத்தைக் கண்டுள்ளது என்பதை தமிழ்நாடு புள்ளி விவரங்கள் அட்டவணை தெளிவாகக் காட்டுகிறது, எனினும் குழந்தைத் திருமணம், குழந்தைத் தொழிலாளர் முறை குழந்தைத் தொழிவாளர் முறையிலிருந்து மீட்கப் பட்டவுடன் அந்தக் குழந்தைகளின் நிலை, குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் சட்டத்துக்குப் புறம்பாக செயல்படுகின்ற குழந்தைகளின் எண்ணிக்கை போன்ற பல விடயங்களில் குழந்தைகள் பாதுகாப்பை உறுதி செய்ய தமிழ்நாடு அரசு மேற் கொண்டிருக்கும் நடவடிக்கைகளை இன்னும் தீவிரப்படுத்த வேண்டியிருக்கிறது.
  • மேலே கூறப்பட்ட விடயங்கள், அரசு, குழந்தைகளின் நலனோடு தொடர்புடைய அனைத்துத் தரப்பினர் மற்றும் கொள்கை வகுப்பாளர்களின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.
  • தேசியச் சராசரியுடன் ஒப்பிடும்போது குழந்தைகளின் நலனை மதிப்பிடுவதற்கான பல்வேறு குறியீடுகளில் தமிழ்நாடு சிறப்பாகச் செயல்பட்டாலும், அதனைத் தடுக்கக் கூடிய மற்றும் தமிழக அரசின் கவனம் தேவைப்படும் சில பிரச்சனைகள் இங்கு உள்ளன. அவை ஊட்டச்சத்துக் குறைபாடு, குழந்தைகள் இறப்பு விகிதம், குழந்தைகள் பாலின விகிதம், உடல் எடை குறியீட்டெண், திறந்தவெளியில் மலம் கழித்தல், இரத்த சோகை, ஐந்து வயதுக்குட்பட்ட குழந்தைகள் இறப்பு விகிதம், முழுநோய்த் தடுப்பு, உயர் மற்றும் மேல்நிலைக் கல்வி நிலைகளில் மொத்த மாணவர் சேர்க்கை விகிதம் போன்றவையாகும்.
  • 1974 மற்றும் 2013 ஆம் ஆண்டுகளில் குழந்தைகளுக்கான தேசியக் கொள்கையில் வலியுறுத்தப் பட்டுள்ள படி "தனது குழுந்தைகளே மாநிலத்தின் மிக முக்கியமானச் சொத்து" என்பதை தமிழக அரசு மீண்டும் உறுதிப்படுத்துகிறது.
  • தமிழக அரசின் மாநில குழந்தைகளுக்கான கொள்கை, வளரிளம் பருவத்தினரின் சுகாதாரம் மற்றும் அவர்களின் நிலை குறித்து சிறப்புக் கவனம் செலுத்துவதோடு, மாநிலத்தின் குழந்தைகளின் பாதுகாப்பையும் நலனையும் உள்ளடக்கியுள்ள மேலே குறிப்பிடப்பட்டுள்ள பிரச்னைகளுக்குத் தீர்வு காண வேண்டும் என்பதைத் தனது நோக்கமாகக் கொண்டுள்ளது. குழந்தைகளை நேரடியாகவோ மறைமுகமாகவோ பாதிக்கும் அனைத்து அம்சங்களும் இந்தக் கொள்கையை வகுக்கும் போது கவனத்தில் எடுத்துக் கொள்ளப் பட்டுள்ளன.
  • அதிகமான துன்பங்கள் நேரக் கூடிய மனிதாபிமானமற்ற சூழலில் இருக்கும் குழந்தைகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டிய அவசியத்தையும் இந்த ஆவணம் வலியுறுத்துகிறது.

வழிகாட்டும் கோட்பாடுகள்

  • தமிழ்நாடு அரசின் குழந்தைகள் கொள்கையின் வழிகாட்டும் கோட்பாடுகளானது கீழ்க் காண்பவற்றை அடிப்படையாகக் கொண்டுள்ளது. அவையாவன குழந்தைகள் உரிமைகளுக்கான ஐக்கிய நாடுகள் சடையின் உடன்படிக்கை 1989 (UNCRC), தேசியக் குழந்தைகள் கொள்கை 2013 (NPC 2013), தேசிய செயல் திட்டம் 2016 மற்றும் நமது உலகத்தை உருமாற்றும் (NPA 2016), ஐ.நா.வின் நீடித்த வளர்ச்சி குறித்த 2030 ஆம் ஆண்டுக்கான திட்டம் (UN-SDG).

இலக்கு

  • ஒரு பாதுகாப்பான சூழலில்  ஆண் / பெண் குழந்தைகள் தங்களுடைய முழுத் திறனையும் அடையும் வகையில், ஒவ்வொரு குழந்தையின் முழுமையான வளர்ச்சியை உறுதி செய்தல் மற்றும் குழந்தைகளுக்கான நீடித்த வளர்ச்சிக்கான இலக்குகளை அடைதல்.

செயல்திட்டம்

  • ஒவ்வொரு குழந்தையும், அனைத்து விதமான வன்முறை, தவறாக நடத்தப்படுதல் மற்றும் சுரண்டலிலிருந்துப் பாதுகாக்கப்படவும், அவர்களுக்குத் தரமான சுகாதாரப் பராமரிப்பு மற்றும் கல்வி கிடைப்பதை உறுதி செய்யவும் அவர்கள் சம்பந்தப்பட்ட எந்தப் பிரச்சனைகளிலும் அவர்களுடைய கருத்தை சுதந்திரமாக வெளிப்படுத்தும் சூழலை உருவாக்கவும், மேலும் “எந்த ஒரு குழந்தையும் விடுபடாமல் பாதுகாக்கப்பட வேண்டும்" என்ற கொள்கை கடைபிடிக்கப் படுவதை உறுதி செய்யவும், தமிழ்நாடு அரசு அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்ளும்.

இலக்கு நோக்கிய திட்டமிட்ட அணுகுமுறை

  • ஐக்கிய நாடுகளின் குழந்தை உரிமைகள் மீதான உடன்படிக்கை 1989, குழந்தைகளின் உரிமைகளை சந்தேகத்துக்கிடமின்றிப் பட்டியலிட்டு, அவற்றை நிலைநாட்டுவதற்கான ஒரு விரிவான செயல்திட்டத்தையும் அளித்துள்ளது.
  • ஒரு குழந்தையின் வாழ்க்கைச் சுழற்சியில், உயிர்வாழ்தல், வளர்ச்சி, மேம்பாடு, பாதுகாப்பு மற்றும் பங்கேற்பு ஆகியவற்றின் அனைத்து அம்சங்களிலும், ஒட்டு மொத்த முன்னேற்றத்தை உறுதி செய்வதற்கான கருத்தியலை தமிழ்நாடு மாநில குழந்தைகளுக்கான கொள்கை ஆதரிக்கிறது.

1.வாழ்வு (பிறத்தல்), உயிர் வாழ்தல், உடல்நலம் மற்றும் ஊட்டச்சத்து

  • தமிழ்நாடு அரசு அனைத்துக் குழந்தைகளுக்கும் சமமான வாழ்க்கைக்கான வழியில் உயிர் வளர்த்தல், உடல்நலம் மற்றும் ஊட்டச் சத்தை அளிக்க உறுதி பூண்டிருக்கிறது.
  • இந்த இலக்குகளை அடைய குழந்தையின் அனைத்து வாழ்க்கை நிலையிலும் உடல்நலம் சார்ந்த தேவைகளைப் பூர்த்தி செய்வது அவசியம் என்ற அணுகுமுறையை அரசு கவனத்தில் கொண்டுள்ளது.
  • ஒவ்வொரு குழந்தைக்கும் அவர்களது வாழ்வின் பல்வேறு நிலைகளிலும் வளர்ச்சிக்கான தேவைகளை நிறைவேற்றிக் கொள்ளவும் பசி, ஊட்டச்சத்துக் குறைபாடு, பற்றாக்குறை போன்றவற்றிலிருந்துப் பாதுகாப்பாக இருக்கத் தேவையான ஊட்டச்சத்தை வழங்க வேண்டும் என்பதில் அரசு உறுதியாக  இருக்கிறது.
  • சுகாதாரத் திட்டங்களுக்கிடையே கவனம் மற்றும் இணக்கத்தை அதிகரிக்க, தமிழ்நாடு மாநில, குழந்தைகளுக்கான கொள்கை பின்வரும் அணுகுமுறைகளை கண்டறிந்து கட்டாயப் படுத்துகிறது.
  • ஒரு பெண் கருவற்ற நாள் முதல், அந்த குழந்தையின் இரண்டாவது பிறந்த நாளுக்கிடையே உள்ள காலம் வரை, ஆரோக்கியமான மற்றும் வளமான எதிர்காலத்தைக் கட்டமைக்க தனித்துவமான வாய்ப்பை வழங்குவதால், குழந்தையின் முதல் 1000 நாட்களில் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்கு அதிக முன்னுரிமை வழங்குதல்.
  • குழந்தைகளுக்கு உடல்நலம், ஊட்டச்சத்து, பாதுகாப்பான குடிநீர் மற்றும் தரமான உயர் ககாதாரச் சூழலை ஏற்படுத்திக் கொடுக்க முக்கியத்துவம் அளிப்பதோடு கருக்கொலை, குழந்தை இறப்பு மற்றும் நோயுற்றத் தன்மை போன்றவற்றைத் தீர்மானிக்கும் முக்கியக் காரணிகளை கண்டறிந்து சரி செய்தல்.
  • பிறப்பு, குழந்தைப் பிறப்பிற்கு இடையேயான இடைவெளி மற்றும் உடல்நலத்தில் அதன் தாக்கம் குறித்து தகவல்களை அறிந்து அதற்கேற்றவாறு செயல்படச் சமூகத்திற்கு உதவும் வகையில் அனைத்துப் படிநிலைகளிலும் தகவல்கள் மற்றும் சேவைகள் கிடைப்பதை அதிகரிக்கச் செய்வது.
  • கர்ப்பகாலப் பராமரிப்பு, பாதுகாப்பான மருத்துவமனைப் பிரசவம், மற்றும் பிரசவத்திற்கு பிந்தையப் பராமரிப்பு உட்பட இனப்பெருக்கம் மற்றும் தாய்சேய் (RMNCH) நலம் மற்றும் ஊட்டச் சத்து சார்ந்த சேவைகளை மேம்படுத்தப் பட்ட வகையில் வழங்கும் வண்ணம் பொதுச் சுகாதாரக் கட்டமைப்பை வடுப்படுத்துதல்.
  • இன்றைய மேம்பட்டத் தொழில்நுட்ப முன்னேற்றத்தைப் பயன்படுத்தி சுகாதாரப் பராமரிப்பு மற்றும் ஊட்டச்சத்துக்கான சிறப்பு வழிமுறைகளைக் கையாளுதல், கர்ப்பிணிப் பெண்களுக்கு ஆரோக்கியம் சார்ந்த ஊட்டச்சத்து குறித்த கல்வி, குழந்தைகளைப் பராமரிக்கும் தாய்மார்கள் மற்றும் பதின்பருவப் பெண்களைப் பேண சிறப்பு நடவடிக்கைகளை எடுத்தல்.
  • அங்கன்வாடிகளைப் பலப்படுத்துவதன் மூலம் ஆறு வயதுக்குக் கீழ் உள்ள அனைத்துக் குழந்தைகளும் தரமான குழந்தைப் பருவப் பராமரிப்பு மற்றும் வளர்ச்சியையும் உலகளாவிய அளவில் சமமான அளவில் பெறுவதை உறுதி செய்தல்.
  • பிறப்பில் எச்ஐவி பாதிப்பைத் தவிர்த்தல் மற்றும் அவ்வாறு தொற்றுள்ள குழந்தைகளுக்கு சரியான பராமரிப்பு வழிமுறைகள், ஊட்டச்சத்து மற்றும் தொடர் பராமரிப்பு ஆகியவற்றை உறுதி செய்தல்.
  • குடும்பம் மற்றும் சமூக அளவிலுள்ள, சிசு மற்றும் குழந்தைப் பராமரிப்பு நடைமுறைகளை மேம்படுத்தத் தேவைப்படும் நடத்தை மாற்றத்தில் கவனம் செலுத்துதல், ஆதரவளித்தல் மற்றும் ஊக்குவித்தல்.
  • பிரசவத்திற்கு முன்னும், பிரசவத்தின் போதும், அதற்குப் பின்னரும் தாய் மற்றும் சேய்க்கு ஏற்பட்டுள்ள குறைபாட்டை (உடல் மற்றும் மனம் தொடர்பான) தடுக்க உரிய நேரத்தில் தலையீடு செய்தல்.
  • வளர்ந்து வரும் தேவைக்கேற்ப குழந்தைகளின் நோய்த் தடுப்பு அட்டவணையை மறு கட்டமைத்தல் மற்றும் நோய்த் தடுப்பு மருந்துகளை எடுத்துக் கொள்வதை அதிகரிப்பதற்கான விழிப்புணர்வு செயல்பாடுகளைத் தீவிரப்படுத்தல்.
  • சுகாதாரம் சார்ந்த புதுமையான செயல்பாடுகளுக்கு ஆதார  அடிப்படையிலான ஆராய்ச்சியை கட்டமைத்தல்.
  • குழந்தைகளின் உடல்நிலையில் குறைந்த அளவுருக்கள்/தரநிலைகள் உள்ள பகுதிகளில் உரிய கவனத்துடன் தலையீடு செய்தல்.
  • அனைத்துக் குழந்தைகளுக்கும் போதுமான உணவுப் பாதுகாப்பு கிடைப்பதை உறுதி செய்தல்.
  • வளரிளம் பருவத்தினர் பாலின ஆரோக்கிய உரிமை மற்றும் சேவையைப் பெற உறுதி செய்தல்,  நுண்ணூட்டச் சத்துகள் மற்றும் செறிந்த உணவுகள் குறித்த விழிப்புணர்வு மற்றும் அவை கிடைக்கப் பெறுதலை மேம்படுத்துவதன் மூலம் நுண்ணூட்டச் சத்துக் குறைபாடுகளைத் தவிர்த்தல்.
  • 0 முதல் 18 வயது வரையிலான குழந்தைகள் புலம்பெயர்ந்த தொழிலாளர்களின் குழந்தைகள் தெருவோரக் குழந்தைகள், குடிசைப் பகுதிகளில் உள்ள குழந்தைகள், மூன்றாம் பாலினம் மற்றும் மாற்றுத் திறனாளி குழந்தைகள் உட்பட அனைத்துக் குழந்தைகளையும் கண்காணித்தல்.

2.கல்வி

  • ஒவ்வொரு குழந்தைக்கும் கற்றல், அறிவு மற்றும் கல்விக்கான சம உரிமை உள்ளது என்பதை தமிழக அரசு அங்கீகரிக்கிறது.
  • சர்வதேசத் தரத்திற்கு இணையாக குழந்தையின் கல்வித் தேவைக்கும் நல்வாழ்வுக்கும் உகந்த அமைப்பைக் குழந்தைக்கு கிடைக்கச் செய்வதில், தனது பொறுப்பை அரசு மீண்டும் உறுதிப் படுத்துகிறது.
  • கீழே குறிப்பிட்டுள்ளவற்றை உறுதி செய்ய, மாநில அரசு தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கும்.
  • குழந்தைகளின் முழுமையான வளர்ச்சிக்கு அவர்களைப் பலமாக வைத்திருப்பதற்கு முக்கியத்துவம் தருவது: அவர்களின் வாழ்க்கை, உடல் மற்றும் நடத்தையைத் தாங்களே நிர்வகிக்கும் அளவுக்கு அவர்களை முழுமையாக ஆற்றல்படுத்துவதற்கான வசதி செய்தல்.
  • குழந்தையின் உடல், மனம் மற்றும் உணர்வைப் பாதுகாக்கும் மற்றும் அவர்களின் நல்வாழ்வை உறுதி செய்யும் பாதுகாப்பான, பத்திரமான கற்றல் அமைப்பைத் தருதல்.
  • 5 வயது முடிந்த அனைத்துக் குழந்தைகளுக்கும் அவர்களுக்கு அருகாமையில் பள்ளியை அமைத்து குழந்தைகளின் ஆரம்பக் கல்வியை உறுதி செய்தல்.
  • மிகச் சிறப்பான இடைநிலைக் கல்வியை குறைந்த செலவில் அனைத்துக் குழந்தைகளுக்கும் கிடைக்கச் செய்தல், அதன் மூலம் அவர்கள் உயர்கல்வியை அடைவதற்கான உரிமை உடையவர்களாக்குதல்.
  • பாலினச் சமத்துவம், அறம் சார்ந்த மதிப்பீடுகள் குறித்த கல்வி, வாழ்க்கைத் திறன் மற்றும் தற்காப்பு ஆகியவற்றிற்கு முக்கியத்துவம் கொடுப்பது, இதற்காக வயதுக்கு ஏற்ற அனைவரும் பங்கேற்கும் விதத்திலான குழந்தைகளுக்குப் பிடித்த கற்றல் மற்றும் கற்பித்தல் செயல்முறைகளை உருவாக்குதல்.
  • அனைவருக்கும் தரமான கல்வியை வழங்கும் அமைப்புகளை வளர்த்தெடுத்து அவற்றின் வளர்ச்சி மற்றும் அடிப்படையை நிலைநாட்டுதல்.
  • அனைத்துக் குழந்தைகளுக்கும் பாதுகாப்பான, மகிழ்ச்சியான மற்றும் வயதுக்கு ஏற்ற கணிணி வழிக் (டிஜிட்டல்) கல்வி வழங்குதல்.
  • மது, புகையிலை மற்றும் அனைத்து போதைப் பொருள் போன்ற தீங்குகள் நெருங்காத வண்ணம் பள்ளி குழந்தைகளைப் பாதுகாத்தல்.
  • கல்விச் சேவைகள் கிடைப்பதில் உள்ள இடைவெளியை நிரப்புதல் மற்றும் அது தொடர்பான வரைவுத் திட்டத்தை உருவாக்க உள்ளாட்சிகளுடனும் சமூக அமைப்புகளுடனும் இணைந்து செயல்படுத்ததல்.
  • இடைநிற்றல் மற்றும் அதற்கான காரணங்களை ஆய்வு செய்ய பள்ளிகளில் குழந்தைகளைத் தொடர்ந்து கண்காணித்தல்.
  • அனைத்துக் குழந்தைகளையும் பொறுப்புள்ள குடிமக்களாக மேம்படுத்த வழக்கமான பள்ளிப் பாடத் திட்டத்தின் ஒரு பகுதியாக அரசியலமைப்பு உரிமைகளை அறிமுகப்படுத்துதல்.
  • உள்ளாட்சி அமைப்புகளுடன் பல்துறையினரின் ஆதரவு மற்றும் ஒருங்கிணைந்து பணிகளைச் செய்து சமூகம் சார்ந்த அமைப்புகளை வலுப்படுத்துதல்.
  • புலமபெயர் தொழிலாளர்களின் குழந்தைகளை பகுதிவாரியாக இனம் கண்டு அவர்கள் கல்வியைத் தொடர ஏற்பாடுகள் செய்தல் மற்றும் அவர்கள் தங்கள் தாய்மொழியில் கல்வி கற்க வாய்ப்பு வழங்குதல், அவர்கள் தடையின்றி தங்கள் கல்வியைத் தொடர வேண்டிய அனைத்து உதவிகளையும் செய்தல்.

3. பாதுகாப்பு

  • அனைத்து குழந்தைகளும் மகிழ்ச்சியான குழந்தைப் பருவத்தை அனுபவிக்கவும் மற்றும் வன்முறை, கரண்டல், புறக்கணிப்பு, பற்றாக்குறை மற்றும் பாகுபாட்டிலிருந்துப் பாதுகாக்கப் பட்ட ஒரு கண்ணியமான வாழ்க்கையை நடத்துவதற்கான வாய்ப்பைப் பெற தகுதி உடையவர்கள் என்பதை அங்கீகரிக்கும் அதே நேரத்தில், மாநிலத்திலுள்ள அனைத்துக் குழந்தைகளும் தங்கள் உரிமைகளைப் பெறவும் அவர்களுக்குப் பாதுகாப்பான குழந்தைநேய சுற்றுச்சூழலை உருவாக்க தேவையான அடித்தளத்தை அமைக்கவும் தமிழ்நாடு அரசு உறுதி பூண்டுள்ளது.
  • எனவே மாநில அரசு பின்வரும் அவசியமான நடடிக்கைகளை மேற்கொள்ளும்.
  • பல்வேறு வகையில் தவறாக நடத்தப் படுதல் (உடல், உணர்வு, பாலியல், புறக்கணிப்பு, மறுப்பு மற்றும் இணையவழி சார்ந்தது), பாகுபாடு, சுரண்டல், வன்முறை அல்லது அவர்களுக்குத் தீங்கு விளைவிக்கும் அல்லது அவர்களின் பராமரிப்பு, பாதுகாப்பு மற்றும் ஒட்டுமொத்த வளர்ச்சிக்கு ஊறு விளைவிக்கும் எல்லா செயல்பாடுகளிலிருந்தும் குழந்தைகளைப் பாதுகாப்பதற்காக சமூகம் சார்ந்த கட்டமைப்புகளை வலுப்படுத்துதல் மற்றும் நிலைநிறுத்துதல்.
  • தமிழ்நாடு அரசு, குழந்தைகளுக்கு எதிரான எந்த விதமான வன்முறைக்கும் முற்றிலும் சகிப்புத் தன்மையற்ற" (Zero Tolerance) எனும் கொள்கையை கடைப்பிடிக்கிறது. மேலும் குழந்தைகளின் பாதுகாப்பிற்கும் குழந்தைகளுக்கு எதிரான அனைத்து வகையான வன்முறைகளைத் தடுப்பதற்கும் சமமான முக்கியத்துவத்தினையும் அளிக்கிறது.
  • தமிழ்நாடு முழுவதும் குழந்தைகளுக்குப் பாதுகாப்பான இடங்களை உருவாக்குவதற்காக அனைத்து ஊராட்சிகள் மற்றும் நகர்ப்புற அமைப்புகளில் குழந்தைகள் பாதுகாப்புக் கொள்கையை அறிமுகப்படுத்துதல் மற்றும் கடைபிடித்தல்.
  • அனைத்துப் பள்ளிகளையும் குழந்தைகள் பாதுகாப்புக்கு உகந்ததாக மாற்ற குழந்தைப் பாதுகாப்புக் கொள்கையை அனைத்துப் பள்ளிகளிலும் அறிமுகப்படுத்துதல்.
  • பள்ளி அளவில் எழும் புகார்களை விசாரிக்க, பாலியல் ரீதியாக தவறாக நடத்தப்படுவதிலிருந்து பாதுகாப்புச் சட்டத்திலிருந்த (POSH) சட்டத்தின் கீழ் அனைத்துப் பள்ளிகளிலும் புகார்க் குழுவை அமைத்தல்.
  • தற்போதுள்ள குழந்தைப் பாதுகாப்பு அமைப்புகளை, குறிப்பாக கிராம அளவிலான குழந்தைகள் பாதுகாப்புக் குழு (VLCPC) மற்றும் அருகாமை குழந்தைகள் பாதுகாப்புக் குழுக்களை (NCPC} வலுப்படுத்துதல்.
  • பாதுகாப்பான மரியாதையான பராமரிப்பு, குழந்தை நேயம், பொதுக் கற்றல், ஊடகம் மற்றும் இணைய வெளிகளை உருவாக்குதல்.
  • சிறப்புக் கவனம் மற்றும் பாதுகாப்பு தேவைப்படும் குழந்தைகளின் உரிமைகள் மற்றும் அவர்களுக்கு உரித்தானவற்றை அவர்கள் பெறுவதை உறுதிப்படுத்த பல்வேறு சிறப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளல்.
  • குடும்பப் பராமரிப்பு/மாற்றுப் பராமரிப்பை வலுப்படுத்துதல் மற்றும் நிறுவனப் பராமரிப்பை கடைசி முயற்சியாகக் கருதுதல்.
  • அனைத்துக் குழத்தைப் பராமரிப்பு நிறுவனங்களிலும் பாதுகாப்பு மற்றும் பொறுப்புறுதியை மிக உயர்ந்த தரத்தில் அமல்படுத்ததுதல்.
  • குழந்தைகளைப் பாதுகாப்பதற்கென்றே பிரத்தியேகமாக பேரிடர் மற்றும் அவசரநிலை மேலாண்மை அமைப்பை உருவாக்கிச் செயல்படுத்துதல்.
  • பல்வேறுபட்ட நிலைகளில் குழந்தை உரிமைகளைப் பாதுகாப்பதற்கான குறைதீர் அமைப்புகளை மேம்படுத்துதல் மற்றும் வலுப்படுத்துதல்.

4.பங்கேற்பு

  • தமிழ்நாடு அரசின் கொள்கையின் பொருத்தப் பாடு, தாக்கம், கூடுதல் மதிப்பு மற்றும் நடைமுறையில் பொருந்தும் தன்மை ஆகியவற்றை உறுதிப்படுத்துகையில், குழந்தைகள் தங்கள் கருத்துக்களை உருவாக்கும் திறன் கொண்டவர்கள் என்பதைத் தமிழ்நாடு அரசு அங்கீகரிக்கிறது.
  • குழந்தைகளை மதிப்பதும் அவர்கள் சம்பந்தப்பட்ட விஷயங்களில் பங்கேற்க அவர்களுக்கு வாய்ப்புகளை வழங்குவதும் அரசு மேற்கொள்ளும் விரிவான சில நடவடிக்கைகள் ஆகும்.
  • அதற்குத் தேவையான பிற நடவடிக்கைகள் பின்வருவனவற்றை உள்ளடக்கியது:
  • குழந்தைகளின் வயது, முதிர்ச்சி மற்றும் திறன்களுக்கு ஏற்ப அவர்களின் திறன்களை வளர்த்துக் கொள்ளவும், அவர்களின் இலட்சியத்தை வளர்த்துக் கொள்ளவும், அவர்களின் கருத்துக்களை வெளிப்படுத்தவும், அவர்களுக்கு வாய்ப்புகள் வழங்கப்படுவதுடன் அவர்களின் உரிமைகள் பற்றி அவர்கள் அறிந்து கொண்டனர் என்பதையும் உறுதிப்படுத்துதல்.
  • குழந்தைகள் தங்களின் கருத்துக்களையும் தேவைகளையும் வெளிப்படுத்துவதற்கான தளங்களைப் பலப்படுத்துதல் மற்றும் அவற்றிற்கிடையே இணைப்பை ஊக்குவித்தல்.
  • குழந்தைகள் தங்கள் தொடர்பான பல்வேறு விடயங்களில் ஈடுபடுவதற்கான வாய்ப்புகளை உருவாக்குதல்.
  • குழந்தையின் குறிப்பாக பெண் குழந்தையின் கருத்துக்களுக்கு மிகுந்த மதிப்பளிப்பதை ஊக்குவித்தல்.
  • குடும்பம், பள்ளிகள் மற்றும் சமூகத்தில் குழந்தைகள் எந்த அளவுக்கு பங்கேற்கிறார்கள் என்பதை அளவிடுவதற்கான அளவுகோல்களை நிறுவ வேண்டிய அவசியத்தை அரசு உணர்கிறது. மேலும் ஆதார அடிப்படையிலான ஆராய்ச்சி மற்றும் சுயேச்சையான மதிப்பீடுகளுடன் இவை அமைய வேண்டும் என்பதையும் ஆதரிக்கிறது.
  • குழந்தைகள் கலந்துரையாடவும் ஆலோசனைகள் பெறவும் சமூக ஆரவுக் குழுவை உருவாக்குவதன் மூலம் சமூக அமைப்புகள், சர்வதேச அரசு சாரா நிறுவனங்கள் (INGO) / அரசு சாரா நிறுவனங்கள் (NGO), அமைப்புகளின் கூட்டமைப்புகள், பெருநிறுவனங்கள் (கார்ப்பரேட்கள்) மற்றும் கல்வி நிறுவகளுடன் வலிமையான கூட்டணியை உருவாக்குதல்.
  • பல  துறை நடவடிக்கைகளை ஒருங்கிணைக்க உள்ளாட்சி அமைப்புகள், சமூகம் சார்ந்த அமைப்புகள், துறைகளுக்கிடையேயான ஒருங்கிணைப்புக்கள் ஆகியவற்றைப் பலப்படுத்துதல்.
  • மிகவும் பின்தங்கிய குழந்தைகளைக் கண்டறிதல், புதிய நிரூபிக்கப்பட்ட செலவு குறைந்தச் செயல்பாடுகளில் ஈடுபடுதல், தடைகளைச் சமாளித்தல், சர்வதேச தேசிய அமைப்புகளுடனும் மற்றும் சமூகங்களுடனும் இணைந்து செயல்படுவதன் மூலம் அணுகுமுறைக்கான தமிழ்நாடு மாதிரி குழந்தைகளுக்கான கொள்கையின் அடிப்படையில் குழந்தைகளுக்கான வலிமையான நிலையான மாதிரி வடிவமைப்பை உருவாக்குதல்.
  • 12 முதல் 18 வயதுக்குட்பட்ட அனைத்துக் குழந்தைகளும் உறுப்பினர்களாக இருக்கும் அனைத்து கிராமப் பஞ்சாயத்துகளிலும் பாலர் சபைகளை உருவாக்குதல்.
  • வருடத்திற்கு நான்கு முறையாவது பாலர் கிராம சபையாகக் கூடி, குழந்தைகள் தொடர்பான விடயங்களில் தீர்மானங்களை நிறைவேற்றி, கிராமச் சபையில் சமர்ப்பித்து, அவற்றின் மீது உரிய நடவடிக்கை எடுத்தல்.

முடிவுரை

  • 2021 ஆம் ஆண்டுக்கான தற்போதையக் கொள்கையின் படி, தமிழ்நாடு அரசு தன் மாநிலத்தின் குழந்தைகளுக்கான தனது கடமையைத் தெளிவுபடுத்துகிறது. இதன் மூலம் மாநிலத்தில் உள்ள அனைத்துக் குழந்தைகளும் அவர்களின் வளர்ச்சி மற்றும் மேம்பாட்டிற்கான சூழலைப் பெற்றிருப்பதை உறுதி செய்கிறது. அவர்களின் உரிமைகள் அவர்களின் குழந்தைப் பருவம் முழுவதும் தொடர உத்தரவாதமும் அளிக்கிறது.
  • இந்த அடிப்படையில், தமிழ்நாடு மாநிலக் குழந்தைகளுக்கான கொள்கை (TNSCP-2021) குழந்தைகள் தொடர்பான அனைத்துச் சட்டங்கள், கொள்கைகள், திட்டங்கள் மற்றும் நிகழ்ச்சிகள் தொடர்பாக அதில் பங்கேற்போருக்கு வழிகாட்டத் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கும். மாநிலத் திட்டத்தில் குழந்தைப் பாதுகாப்புக்கு முன்னுரிமை அளிக்கும் நடவடிக்கை தேவை என்பதை இந்த ஆவணம் வெளிப்படுத்துகிறது.
  • ஆதாரங்களின் அடிப்படையிலான மதிப்பிடு, நீடித்த வளர்ச்சிக்கான இலக்குகளின் அளவீடுகள் ஆகியவற்றின் மூலம் இந்தக் காலக்கட்டத்தில் கிடைத்த விளைவுகள் / தாக்கத்தை மதிப்பாய்வு செய்வதன் மூலம் ஒவ்வொரு ஐந்து வருடங்களுக்கும் கொள்கை திருத்தப்படும்.
  • திட்டமிட்டு ஒத்துழைப்பை அதிகரிப்பதால் அனைத்து மட்டங்களிலும் இது முறையான ஒருங்கிணைப்பைப் பலப்படுத்தும் என எதிர்பார்க்கப் படுகிறது. இந்தக் கொள்கைச் சுருக்கத்தில் கோடிட்டுக் காட்டப்பட்டுள்ள இலக்குகள், மாற்றத்துக்குட்பட்ட வழிமுறைகள் / உத்திகள் மற்றும் செயல்படுத்துவோர் குழந்தைகளுக்கான நிலைத்து நிற்கும் முடிவுகளை வழங்க உதவுவார்கள். இவையன்றி எந்தக் குழந்தையும் தனியாக விடப்படவில்லை என்கிற அரசியலமைப்புச் சட்டச் செயல்திட்டத்தின் இலக்கைத் தமிழ்நாடு அரசு விரைவில் நனவாக்கும்.

- - - - - - - - - - - - - - - - - - - - - - - -

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்