TNPSC Thervupettagam

ஆயுஷ்மான் பாரத் – பிரதம மந்திரி ஜன் ஆரோக்கிய யோஜனா

January 25 , 2019 1940 days 5345 0
வரலாறு
  • இந்திய அரசாங்கம் தற்பொழுது மகப்பேறு, கர்ப்பிணி , புதிதாக பிறந்த குழந்தைகள் மற்றும் பதின்ம வயதினரின் ஆரோக்கியம் (RMNCH + A) மற்றும் தொற்றும் நோய்கள் ஆகியவற்றின் மீது கவனத்தைச் செலுத்துகிறது.
  • குடும்பங்கள் சுகாதாரத்திற்கு தங்கள் கையிலிருந்து அதிகமாக செலவிடும் நிலைக்குத் தள்ளப்படுகின்றனர். இதனால் அம்மக்கள் வறுமை நிலை மற்றும் ஏழ்மை நிலையை அடைகின்றனர்.
  • "சுவஸ்த் பாரத், சம்ரிதா பாரத்" (ஆரோக்கியமான இந்தியா, வளமான இந்தியா) என்ற வளர்ச்சிக்கான அரசின் தொலைநோக்குப் பார்வைக்கு சுகாதாரம் ஒரு முக்கிய மைல்கல்லாகும்.
  • தேசிய சுகாதாரக் கொள்கை 2017ல் குறிப்பிடப்பட்டுள்ள அனைவருக்குமான சுகாதாரம் மற்றும் அனைவரையும் உள்ளடக்கிய சுகாதாரக் காப்பீடு என்ற அரசின் தொலைநோக்குப் பார்வையைப் பூர்த்தி செய்வதற்காக பிரதம அமைச்சரின் முன்னோடித் திட்டமான "ஆயுஷ்மான் பாரத்" என்ற திட்டத்தை இந்திய அரசு தொடங்கியுள்ளது.
உருவாக்கம்
  • ஆயுஷ்மான் பாரத் யோஜனா அல்லது பிரதான் மந்திரி ஜன் ஆரோக்கிய யோஜனா (PM-JAY/Pradhan Mantri Jan Arogya Yojana) அல்லது தேசிய சுகாதாரப் பாதுகாப்புத் திட்டம் என்பது புதிய இந்தியா – 2022ற்காக மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகத்தின் ஆயுஷ்மான் பாரத் திட்டத்தின் கீழ் 2018 ஆம் ஆண்டில் தொடங்கப்பட்ட மத்திய அரசினால் நிதியுதவி அளிக்கப்படும் ஒரு திட்டமாகும்.
  • ஆயுஷ்மான் பாரத் என்பது சுகாதார சேவைகளை துறைரீதியாக அல்லது பிரிவுரீதியாக வழங்குதலிலிருந்து ஒருங்கிணைந்த தேவை என்ற அடிப்படையில் சுகாதார சேவைகளை வழங்குவதை நோக்கி நகரும் ஒரு முயற்சியாகும்.

  • இத்திட்டமானது சுகாதாரப் பிரச்சனைகளை முழுமையாகக் களைவதற்காக நோயைத் தடுப்பது மற்றும் சுகாதாரத்தை ஊக்குவிப்பது ஆகிய இரண்டையும் உள்ளடக்கிய முதல்நிலை, இரண்டாம் நிலை மற்றும் மூன்றாம் நிலை சுகாதார அமைப்புகளில் மாற்றத்தை ஏற்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • இத்திட்டம் சுகாதார நல மையம் மற்றும் தேசிய சுகாதாரம் பாதுகாப்புத் திட்டம் (NHPS – National Health Protection Scheme) ஆகிய இரண்டு முக்கிய சுகாதார முன்னெடுப்புகளின் தலைமைத் திட்டமாகும்.
  • இத்திட்டமானது ராஷ்டிரிய சுவஸ்திய பீம யோஜனா, மூத்த குடிமகன்களுக்கான சுகாதார காப்பீட்டுத் திட்டம் (SCHIS - Senior citizen health Insurance Scheme) உள்ளிட்ட முக்கியமான திட்டங்களை ஒன்றிணைத்து உருவாக்கப்பட்டதாகும்.
  • மேலும் இத்திட்டம் உருவாக்க எண்ணுகின்ற சுகாதார நல மையங்களை தேசிய சுகாதாரக் கொள்கை 2017 ஆனது இந்திய சுகாதார அமைப்பின் அடித்தளம் என்று குறிப்பிடுகிறது.
சிறப்பம்சங்கள்
  • பிரதான் மந்திரி ஜன் ஆரோக்கியத் திட்டமானது அனைவரையும் உள்ளடக்கிய சுகாதாரக் காப்பீடு மற்றும் நீடித்த வளர்ச்சிக்கான இலக்குகள் (SDG-3 - Sustainable Development Goal - 3) ஆகியவற்றை அடைவதற்கான ஒரு முக்கியமான படியாகும்.
  • பிரதான் மந்திரி ஜன் ஆரோக்கியத் திட்டத்தின் அணுகுமுறைகள் மற்றும் செயல்பாடுகளின் மீது கவனத்தை செலுத்துவதற்காக ஒரு தனிச்சுதந்திர அமைப்பான தேசிய சுகாதார நிறுவனம் (NHA – National Health Agency) என்பது அமைக்கப்பட்டுள்ளது.
  • தேசிய சுகாதார நிறுவனமானது 2018 ஆம் ஆண்டு மே 11 ஆம் தேதியன்று ஒரு சங்கமாக உருவாக்கப்பட்டுள்ளது. இது சமூகப் பதிவுகள் சட்டம் 1860-ன் கீழ் பதிவு செய்யப்பட்டுள்ளது.

  • PMJAY-யைச் செயல்படுத்துவதற்காக மாநில அரசுகள் இதே போன்ற மாநில சுகாதார நிறுவனங்களை (SHA - State Health Agencies) ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
  • தேசிய சுகாதார நிறுவனமானது பிரதான் மந்திரி ஜன் ஆரோக்கியத் திட்டத்தின் கட்டமைப்பு, செயல்படுத்துதல் மற்றும் மேலாண்மைக்காக ஒரு முழுமையான தொலைநோக்குப் பார்வையை அளிக்கும்.
சுகாதார மற்றும் நல மையங்கள்
  • இதன்கீழ் தற்பொழுதுள்ள 1.5 இலட்சம் துணை மையங்கள் சுகாதார நல மையங்களாக சுகாதார நல அமைப்புகளை ஒவ்வொரு வீடுகளில் உள்ள நபர்களுக்கும் கொண்டு செல்லும்.
  • இந்த மையங்கள் தொற்றா நோய்கள், தாய் மற்றும் குழந்தைகள் நல சேவைகள் உள்ளிட்ட ஒருங்கிணைந்த சுகாதார நலத்தை அளிக்கும்.
சுகாதாரம் மற்றும் நல மையங்களில் அளிக்கப்படும் சேவைகளின் பட்டியல்
  • கருத்தரிப்பு மற்றும் தாயின் ஆரோக்கியம் குறித்த சேவைகள்
  • பச்சிளம் குழந்தைகள் மற்றும் சிசுக்களின் நலன் குறித்த சேவைகள்
  • குழந்தைகள் நலம்
  • நாள்பட்ட தொற்றும் நோய்கள்
  • தொற்றா நோய்கள்
  • மனநோய் மேலாண்மை
  • பல் பாதுகாப்பு
  • கண் பாதுகாப்பு
  • முதியோர் நல அவசர மருந்தகம்
தேசிய சுகாதார பாதுகாப்புத் திட்டம் (AB-PMJAY)
தகுதி நிலைகள்
  • ஊரக மற்றும் நகர்ப்புற பகுதிகளில் உள்ள பல்வேறு தகுதி நிலைகளாவன.
    • தற்காலிக சுவர்கள் மற்றும் தற்காலிக கூரைகளுடன் ஒரேயொரு அறை மட்டும் உள்ள வீடுகளைக் கொண்ட குடும்பங்கள்.
    • 16 வயது முதல் 59 வயது வரை உள்ள நபர்களைக் கொண்டிராத குடும்பங்கள்.
    • 16 வயது முதல் 59 வயது வரையிலான ஆண் உறுப்பினர்கள் இல்லாமல் பெண்கள் தலைமையில் செயல்படும் குடும்பங்கள்
    • மாற்றுத் திறனாளி உறுப்பினர்கள்.
    • பட்டியலிடப்பட்ட வகுப்பினர் / பட்டியலிடப்பட்ட பழங்குடியின குடும்பங்கள்.
    • உடல் உழைப்பின் மூலம் (கூலி) வருமானம் ஈட்டும் நிலமற்ற குடும்பங்கள்.
    • ஊரகப் பகுதிகளில் உள்ள குடும்பங்கள் பின்வரும் ஏதாவது ஒன்றைக் கொண்டிருக்க வேண்டும்: வீடில்லாத குடும்பங்கள், கைவிடப்பட்டவர்கள், பிச்சை எடுப்பவர்கள், மனிதக் கழிவுகளை மனிதனே அகற்றும் தொழிலைச் செய்யும் குடும்பங்கள், மிகப் பழமையான பழங்குடியின குழுக்கள், விடுவிக்கப்பட்ட கொத்தடிமைகள்.
    • இத்திட்டத்தின்கீழ் நகர்ப்புறங்களில் 11 வரையறுக்கப்பட்ட தொழில் வகைகள் குறிப்பிடப்பட்டுள்ளன.
      • கந்தல் துணிகளைச் சேகரிப்பவர்கள்.
      • பிச்சைக்காரர்கள்.
      • வீட்டு வேலைப் பணியாளர்கள்.
      • தெருவில் விற்பனை செய்பவர்கள் / ஆதிதிராவிடர் / கூவி விற்பவர்கள் / தெருக்களில் பணியாற்றும் இதர சேவை வழங்குநர்கள்.
      • கட்டுமானத் தொழிலாளர்கள் / குழாய்களைப் பழுது பார்ப்பவர்கள் / கொத்தனார்கள் / வெள்ளை அடிப்பவர்கள் / பற்று வைப்பவர்கள் / பாதுகாவலர்கள் / கூலித் தொழிலாளர்கள் மற்றும் சுமை தூக்கும் தொழிலாளர்கள்.
      • துப்புரவுத் தொழிலாளர்கள் / சுகாதாரத் தொழிலாளர்கள்.
      • வீட்டு வேலைத் தொழிலாளர்கள் / கைவினைஞர்கள் / தையல்காரர்கள்.
      • போக்குவரத்துத் தொழிலாளர்கள் / ஓட்டுநர்கள் / நடத்துநர்கள் / ஓட்டுநர் மற்றும் நடத்துநர்களுக்கு உதவி செய்பவர்கள் / மாட்டு வண்டி இழுப்பவர்கள் / இரு சக்கர ஆள் இழுப்பு வண்டித் தொழிலாளர்கள்.
      • கடைத் தொழிலாளர்கள் / சிறு நிறுவனத்தில் துணை மற்றும் உதவியாளர்கள் / உதவியாளர்கள் / விநியோக  உதவியாளர்கள் / துனைநிலைப் பணியாளர்கள்  / உணவு விடுதிப் பணியாளர்கள்.
      • மின் பணியாளர்கள் / இயந்திரம் பழுது பார்ப்பவர்கள் / பழுது பார்க்கும் தொழிலாளர்கள்.
      • சலவை செய்பவர்கள் / காவலாளிகள்.
2011 ஆம் ஆண்டின் SECC-ன்படி, இத்திட்டத்திலிருந்துப் பின்வரும் பயனாளிகள் தானாகவே விலக்கப்படுகிறார்கள்
  • இரண்டு, மூன்று, நான்கு சக்கர இயந்திர வாகனங்கள் மற்றும் மீன்பிடிப் படகு உள்ள குடும்பங்கள்.
  • மூன்று / நான்கு சக்கர விவசாய இயந்திரங்கள் வைத்திருக்கும் குடும்பங்கள்.
  • கடன் வரம்பு 50,000ற்கு மேல் உள்ள கிஷான் கடன் அட்டை வைத்திருக்கும் குடும்பங்கள்.
  • குடும்ப உறுப்பினர் அரசாங்கப் பணியில் இருந்தால் இத்திட்டத்தின் பயனைப் பெற முடியாது.
  • அரசாங்கத்தில் பதிவு செய்த விவசாயத் துறை அல்லாத நிறுவனங்களைக் கொண்டிருக்கும் குடும்பங்கள்.
  • குடும்பத்தில் உள்ள ஏதேனும் ஒரு உறுப்பினர் மாதம் ரூ.10,000 மேல் வருமானம் ஈட்டினால் இத்திட்டத்தின் பயனைப் பெற முடியாது.
  • வருமான வரி செலுத்தும் குடும்பங்கள்.
  • தொழில் வரி செலுத்தும் குடும்பங்கள்.
  • மூன்று அல்லது அதற்கு மேற்பட்ட அறைகளைக் கொண்ட நிரந்தர வீடுகள் மற்றும் தரமான வீடுகளைக் கொண்ட குடும்பங்கள்.
  • குளிர்சாதனப் பெட்டி வைத்துள்ள குடும்பங்கள்.
  • தரைவழி தொலைபேசி வைத்துள்ள குடும்பங்கள்.
  • 1 நீர்ப்பாசன இயந்திரத்துடன் 2.5 ஏக்கருக்கு மேல் உள்ள நீர்ப்பாசன நிலத்தினைக் கொண்ட குடும்பங்கள்.
  • 5 ஏக்கர் அல்லது அதற்கு மேற்பட்ட நீர்ப்பாசன நிலத்தினைக் கொண்ட குடும்பங்கள்.
  • குறைந்த பட்சம் 1 நீர்ப்பாசன இயந்திரத்துடன் 5 ஏக்கர் நிலம் அல்லது அதற்கு மேற்பட்ட விவசாய நிலத்தைக் கொண்ட குடும்பங்கள்.
PM-JAY-ன் பயன்கள்
பயன்கள்
  • PM-JAY ஆனது ஒரு வருடத்திற்கு ஒரு குறிப்பிட்ட குடும்பத்திற்கு ரூ.5 லட்சத்திற்கான காப்பீட்டை அளிக்கிறது.

  • இத்திட்டமானது யாரும் விடுபட்டு விடாமல் அனைவரையும் உள்ளடக்கியதாக (குறிப்பாக பெண்கள், குழந்தைகள் மற்றும் முதியவர்கள்) உள்ளது.
  • இத்திட்டத்தின் கீழ் வயது மற்றும் குடும்ப உறுப்பினர்கள் ஆகியவற்றிற்கான வரம்புகள் எதுவும் இல்லை.

 

 பயனாளியின் நிலை
  • நாடெங்கிலும் உள்ள 10.74 கோடிக்கும் மேற்பட்ட ஏழ்மையான மற்றும் பாதிக்கப்படக்கூடிய குடும்பங்கள் இத்திட்டத்தில் உள்ளடங்கியுள்ளன (தோராயமாக 50 கோடி பயனாளிகள்).
  • இத்திட்டத்தில் வரையறுக்கப்பட்டுள்ள தகுதி நிலையின்படி சமூகப் பொருளாதார மற்றும் சாதிவாரி கணக்கெடுப்பில் பட்டியலிடப்பட்ட அனைத்து குடும்பங்களும் இத்திட்டத்தில் உள்ளடங்கும்.

  • பெண் குழந்தைகள், பெண்கள் மற்றும் முதியோர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.
  • தேவை ஏற்படின் அனைத்துப் பொது மற்றும் அங்கீகாரம் வாய்ந்த தனியார் மருத்துவமனைகளில் இலவச மருத்துவ உதவி அளித்தல்.
  • இரண்டாம் நிலை மற்றும் உயர்நிலை மருத்துவமனைகளை உள்ளடக்கியது.
  • இது அறுவைச் சிகிச்சை, வெளி நோயாளிகளுக்கு மருத்துவம், மருத்துவச் செலவுகள், நோயறிதல் உள்ளிட்ட 1350 மருத்துவ வகைகளை உள்ளடக்கியது.
  • தற்பொழுதுள்ள மற்றும் இதற்கு முன்பிருந்த நோய்கள் இதில் அடங்கியுள்ளன. மருத்துவமனைகள் சிகிச்சை செய்வதற்கு மறுப்பு எதுவும் தெரிவிக்க முடியாது.
  • மருத்துவச் சிகிச்சைகளுக்காக மருத்துவமனைகள் பயனாளியிடமிருந்து எந்தவொரு கூடுதலான தொகையையும் வசூலிக்க அனுமதிக்கப்படுவதில்லை.
  • இத்திட்டத்தின்படி தகுதியுள்ள பயனாளிகள் இந்தியா முழுவதும் இச்சேவைகளைப் பெற முடியும்.
  • இத்திட்டம் குறித்த தகவல்கள், உதவிகள், புகார்கள் மற்றும் குறைகளுக்கு 24 மணி நேரமும் இயங்கக்கூடிய 14555 என்ற எண்ணை அணுக முடியும்.
சுகாதார அமைப்புகள்
  • நாடு தழுவிய சுகாதாரக் காப்பீடு மற்றும் நீடித்த வளர்ச்சிக்கான இலக்குகள் ஆகியவற்றை அடைய இந்தியாவிற்கு இது உதவும்.
  • இது மருத்துவமனைகளுக்குப் பயனாளிகள் தங்கள் கையிலிருந்து செலவு செய்தலைக் கணிசமாகக் குறைக்கும்.
  • காப்பீட்டு வருவாயை உட்செலுத்துவதன் மூலம் பொதுச் சுகாதார நல அமைப்புகளை வலுப்பெறச் செய்தல்.
  • கிராமப்புற, தொலைதூரத்தில் உள்ள மற்றும் போதிய வசதிகள் எதுவுமில்லாத பகுதிகளில் புதிய சுகாதாரக் கட்டமைப்புகளை ஏற்படுத்துதல்.
  • மொத்த உள்நாட்டு உற்பத்தியின் சதவீதத்தில் அரசாங்கத்தினால் செலவிடப்படும் சுகாதாரத்திற்கானச் செலவினங்களை அதிகரித்தல்.
  • மேம்படுத்தத்தப்பட்ட நோயாளியின் மனநிறைவு.
  • மேம்படுத்தத்தப்பட்ட சுகாதார பலன்கள்.
  • மக்கள் தொகை நிலையிலான உற்பத்தித்திறன் மற்றும் செயல் திறன் ஆகியவற்றில் மேம்பாடு.
  • மேம்படுத்தத்தப்பட்ட வாழ்க்கைத் தரம்.

- - - - - - - - - - - - - - -

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்