TNPSC Thervupettagam

தமிழ்நாடு நிதிநிலை அறிக்கை 2019–2020

February 15 , 2019 1922 days 1854 0
  • தமிழ்நாடு துணை முதல்வர் ஓ. பன்னீர் செல்வம் அதிமுக அரசின் மூன்றாவது நிதிநிலை அறிக்கையான 2019-20-ஆம் ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கையை சட்டமன்றத்தில் தாக்கல் செய்தார்.

  • தமிழக அரசு 2019-20 ஆம் நிதியாண்டுக்கான மாநில நிதிநிலை அறிக்கையில் புதிய வரி எதையும் பரிந்துரைக்கவில்லை. மேலும் தமிழக அரசானது வரும் நிதியாண்டுகளில் நிதிப் பற்றாக்குறை குறையும் என்றும் உறுதியளித்துள்ளது.
முக்கிய அம்சங்கள்
விவசாயிகள்
  • இயற்கை விவசாயத்தை ஊக்குவிப்பதற்காக அனைத்து மாவட்டங்களிலும் இயற்கைப் பொருள் சான்றளிப்பு மையங்கள் அமைக்கப்படும்.
  • விவசாயத் துறைக்காக 2019-20-ஆம் நிதியாண்டில் பயிர்க் காப்பீட்டின் கீழ் அதிகப் பயிர்கள் அறிவிக்கப்படும் என்றும் காப்பீட்டின் வரம்பு விரிவாக்கப்படும் என்றும் தமிழக அரசு அறிவித்துள்ளது.
  • மேலும் ஆலங்கட்டி மழை, நிலச்சரிவு மற்றும் வெள்ளப்பெருக்கு ஆகியவற்றைத் தவிர மேக வெடிப்பு மற்றும் இயற்கையாக நிகழும் தீ விபத்துகள் ஆகியவையும் உள்ளூர் பேரிடர்களாக அறிவிக்கப்பட இருக்கின்றன.
  • விவசாயிகளுக்கு நெல் கடன் அளிப்பதற்காக ரூ.1000 கோடியை தமிழக அரசு ஒதுக்கியுள்ளது.
  • விவசாயிகளுக்கு ரூ.84 கோடி மதிப்பில் 2000 நீர் இறைக்கும் இயந்திரங்களுக்கு மானியம் அளிக்கப்படும்.
  • 5 இலட்சம் மக்களுக்கு நில உரிமைப் பத்திரம் வழங்கப்படும்.
  • 2019-20-ஆம் நிதியாண்டில் சொட்டுநீர்ப் பாசனத்தின் கீழ் 2 இலட்சம் ஹெக்டேர் நிலங்கள் கொண்டு வரப்படும்.

 

ஆற்றல் துறை
  • ஆற்றல் துறையில், மாநில நிறுவனமான TANGEDCO (Tamil Nadu Generation and Distribution Corporation) ஆனது தேனி, சேலம் மற்றும் ஈரோடு ஆகிய மாவட்டங்களில் 250 மெகாவாட் திறனுள்ள மிதக்கும் சூரிய ஆற்றல் திட்டங்களை உருவாக்க உள்ளது. இதன் மதிப்பு ரூ.1125 கோடியாக இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

  • சமீபத்தில் வெளியிடப்பட்ட 2019-20-ஆம் ஆண்டின் தமிழ்நாடு சூரிய ஒளி மின்சார ஆற்றல் கொள்கையானது சூரிய ஒளி மூலம் உற்பத்தி செய்யப்படும் மின்சார ஆற்றலானது 2023-ஆம் ஆண்டு 9000 மெகாவாட் எனும் இலக்கை அடைய எண்ணுகின்றது.
  • அம்மா பசுமை கிராமம், சிறிய ஊரக புதுப்பிக்கத்தக்க ஆற்றல் பூங்காக்களுடன் கூடிய நீடித்த ஆற்றல் வள கிராமங்கள் ஆகியவை அமைக்கப்படும்.

 

சுகாதாரத் துறை
  • சுகாதாரம் மற்றும் குடும்பநலத் துறைக்கு ரூ.12,563.83 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. சுகாதாரத் துறையின் ஒவ்வொரு மட்டத்திலும் நோய்களைக் கண்டறியும் பரிசோதனைகளின் தொகுப்பான “அத்தியாவசிய நோய்ப் பரிசோதனைப் பட்டியல்” அமைக்கப்படும்.
  • ஏழைகள் மற்றும் பின்தங்கிய மக்கள் ஆகியோர் அரசு சுகாதார வசதிகளை அணுகுவதை மேம்படுத்துவதற்காக உலக வங்கியின் உதவியுடன் தமிழ்நாடு சுகாதார அமைப்பு சீர்திருத்தத் திட்டம் அறிமுகப்படுத்தப்பட இருக்கின்றது.

 

சென்னை மெட்ரோ இரயில் சேவை
  • 45 கிலோ மீட்டர் தொலைவுள்ள சென்னையின் இரு பெருவழிப் பாதைகளை இணைக்கும் மெட்ரோ இரயில் திட்டத்தின் நிலை 1-ஆனது பிப்ரவரி மாதத்தில் முடிவடைந்துச் செயல்பாட்டுக்கு வரவிருக்கிறது. மேலும் இதன் நீட்டிப்பானது ஜுன் மாதத்தில் முடிவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

  • தெற்கு புறநகர்ப் பகுதிகளான மீனம்பாக்கம் விமான நிலையத்திலிருந்து கீழம்பாக்கம் வரை மெட்ரோ இரயில் சேவையை விரிவுபடுத்த செயலாக்க ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

 

சுற்றுலாத் துறை
  • சுற்றுலாத் துறையில் மேற்கத்திய நாடுகள், ஆசியான் மற்றும் உள்நாட்டு சுற்றலாப் பயணிகளுக்காக தரமான சேவைகள் மற்றும் கட்டமைப்புகளுடன் குறிப்பிட்ட சுற்றுலாத் தளங்களைக் கண்டறிவதற்காக “மிகப்பெரிய” அளவிலான ஊக்கமளிப்புத் திட்டத்தை அரசு தொடங்க இருக்கின்றது.

  • சுற்றுலாத் துறையை அடிப்படையாகக் கொண்ட கட்டமைப்புகளான விடுதிகள் போன்றவை தனியார்-பொது பங்களிப்பு முறையின் மூலம் மேம்படுத்தப்படும்.

 

மதுபான விற்பனை
  • தமிழ்நாடு மாநில வாணிபக் கழகத்தால் நிர்வகிக்கப்படும் இந்தியத் தயாரிப்பு வெளிநாட்டு மதுபான சில்லறை வணிக கடைகளின் எண்ணிக்கையானது 7896-லிருந்து 5198-ஆகக் குறைக்கப்பட்டுள்ளது என்று நிதியமைச்சர் கூறியுள்ளார்.
  • தற்செயலாக அரசால் நிர்வகிக்கப்படும் கடைகளின் மூலம் மேற்கொள்ளப்படும் விற்பனையானது அரசுக்கு பெரும் வருவாயாக உள்ளது.

 

மின்சார வாகனங்கள்
  • தமிழக அரசு 2000 புதிய மின்சார பேருந்துகளை வாங்க இருக்கிறது. மேலும் கேஎப்டபிள்யூ வங்கிக் கடன் உதவியுடன் ரூ.5,890 கோடி மதிப்பிலான 12,000 புதிய பாரத்-6 நிலையிலான வாகனங்களை அரசு வாங்க இருக்கிறது.
  • தமிழக அரசு, மாநிலத்தில் பாரத்-6 நிலையிலான 2000 பேருந்துகளை அறிமுகப்படுத்த இருக்கிறது. மேலும் முதல் கட்டமாக சென்னை, கோயம்புத்தூர் மற்றும் மதுரை ஆகிய நகரங்களில் 500 மின்சார வாகனங்கள் அறிமுகப்படுத்தப்பட இருக்கின்றன.

 

வீட்டு வசதித் துறை
  • கடந்த நவம்பர் மாதத்தில் நிகழ்ந்த கஜா புயலால் பாதிப்படைந்த குடிசைகளுக்குப் பதிலாக 1 இலட்சம் கற்காரை (கான்கிரீட்) வீடுகளை தமிழக அரசு அமைக்க இருக்கிறது. மத்திய அரசின் ரூ.720 கோடி பங்களிப்புடன் இதன் மொத்த மதிப்பு ரூ.1,700 கோடி என்று மதிப்பிடப்பட்டுள்ளது.
  • ஒருங்கிணைந்த திடக் கழிவு மேலாண்மை மற்றும் நகரத்தில் வாழும் ஏழைகளுக்கான வீட்டு வசதித் திட்டம் ஆகியவையும் நிதியமைச்சரால் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
  • 2019-20-ஆம் நிதியாண்டில் 20,000 பசுமை இல்லங்கள் கட்டப்பட இருக்கின்றன.
அத்திக்கடவு – அவினாசி கூட்டுக் குடிநீர்த் திட்டம்
  • தமிழக அரசானது மிகவும் புகழ்பெற்ற அத்திக்கடவு – அவினாசி கூட்டுக் குடிநீர்த் திட்டப் பணிகளை விரைவில் தொடங்க இருக்கிறது என்று நிதியமைச்சர் அறிவித்துள்ளார். இதற்காக அடுத்த ஆண்டின் நிதி நிலை அறிக்கை மதிப்பீட்டில் 1000 கோடி ரூபாய்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.

முக்கிய அறிவிப்புகள்
  • சென்னை மாநகரத்தில் ரூ. 2000 கோடி மதிப்பிலான ஒருங்கிணைந்த வாகன நிறுத்த மேலாண்மைத் திட்டத்தை செயல்படுத்துதல் உள்ளிட்ட அதிக எண்ணிக்கையிலான முன்னெடுப்புகளை பல்வேறு துறைகளில் அரசு அறிவித்துள்ளது.
    • இது 2 இலட்சம் நான்கு சக்கர வாகனங்கள் மற்றும் அதற்கு சமமான இரு சக்கர வாகனங்களை தரைக்கு அடியில் நிறுத்தும் வசதி, பல நிலைகளில் வாகனம் நிறுத்தும் வசதி மற்றும் பாதையில் வாகனத்தை நிறுத்தும் வசதி ஆகியவற்றைக் கொண்டிருக்கும்.

  • மறைந்த ஏ.பி.ஜே. அப்துல் கலாமின் நினைவாக, இராமேஸ்வரத்தில் அவரது பெயரில் ஒரு புதிய கலை மற்றும் அறிவியல் கல்லூரி அமைக்கப்படும்.
  • மாற்றுத் திறனுடைய மக்களுக்காக 3000 ஸ்கூட்டர்கள் வழங்க திட்டமிடப்பட்டுள்ளது.
  • ஹார்வேர்டு பல்கலைக்கழகத்தைப் போன்ற சர்வதேச பல்கலைக்கழகங்களில் தமிழ் இருக்கைகள் அமைக்கப்படும்.
  • அண்ணாப் பல்கலைக்கழகத்தின் உள்கட்டமைப்பை மேம்படுத்துவதற்காக ரூ.100 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.
  • தமிழ் மொழியின் வளர்ச்சிக்காக ரூ.55 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.
  • பெருங்குடி, கொடுங்கையூர் ஆகிய நகரங்களில் உள்ள குப்பைக் கிடங்குகளிலிருந்து மின்சாரம் தயாரிப்பதற்காக ரூ.5,259 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.
  • அணைப் புனரமைப்புப் பணிக்காக முன்பு ஒதுக்கப்பட்ட ரூ.745 கோடியுடன் சேர்த்து ரூ.43 கோடி கூடுதலாக ஒதுக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் கீழ் 89 அணைகள் புனரமைக்கப்பட்டுள்ளன.
  • அடையாறு மற்றும் கோவலம் நதிப் புனரமைப்புத் திட்டத்திற்காக ரூ.300 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.
  • 240 நேவிக் சாதனங்கள், 160 ஐசாட்-2 செயற்கைக் கோள் தொலைபேசிகள் மற்றும் 160 நேவ்டெக்ஸ் சாதனங்கள் ஆகியவை ஆழ்கடல் மீன்பிடிப் படகுகளுக்காக வழங்கப்படும் என்று அரசு தெரிவித்துள்ளது.
  • ஆலைக் கழிவு நீரிலிருந்து மின்சாரம் தயாரிப்பதற்காக ரூ.5,269 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.
  • பழங்குடியின மாணவர்களின் நலனுக்காக பழங்குடியினப் பகுதிகளில் அரசு சாரா அமைப்புகள் புதிய பள்ளிகளைத் தொடங்குவதற்கு உதவுவதற்காக மாநில அரசு ரூ.25 கோடி ஒதுக்கியுள்ளது.
  • வளர்ந்து வரும் புதிய சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்களின் நிலத் தேவையைப் பூர்த்தி செய்வதற்காக திருமுடிவாக்கம் மற்றும் ஆலந்தூரில் உள்ள தொழிற்பேட்டைகள் மேலும் விரிவாக்கம் செய்யப்படும்.
  • தமிழ்நாடு மின்னணு முறையிலான நிர்வாக ஆணையத்தின் கீழ் செயற்கை நுண்ணறிவு, தகவல் களஞ்சியம், இயந்திரத்தைப் பற்றி அறிதல், ஆளில்லா குட்டி விமானம் மற்றும் தகவல் தொழில்நுட்பம் ஆகியவைப் பற்றி அறிந்து கொள்ள “புகழ்பெற்ற நிபுணத்துவ மையம்” ஒன்று அமைக்கப்படும் என்று தமிழ்நாடு அரசு தனது நிதிநிலை அறிக்கையில் கூறியுள்ளது.
  • இயற்கையாக உயிரிழந்தவர்களுக்கு ரூ.1 இலட்சம், விபத்தின்போது உயிரிழந்தவர்களுக்கு ரூ.4 இலட்சம் ஊனமுற்றவர்களுக்கு ரூ.1 இலட்சம் என்று கணிசமாக நிவாரணத் தொகையை அதிகரிக்க வறுமைக் கோட்டிற்குக் கீழ் உள்ள அனைத்து குடும்பத்தினருக்காகவும் விபத்து உயிர் காப்பீட்டுத் திட்டம் ஒன்று அறிமுகப்படுத்தப்பட உள்ளது.
  • சீருடைப் பணிகளுக்காக இந்த ஆண்டு 9975 நபர்கள் தேர்வு செய்யப்பட இருக்கின்றனர்.
  • ரூ.2,000 கோடி முதலீட்டில் சென்னைக்கு அருகில் ஒருங்கிணைந்த தொழிற்சாலைப் பூங்காவில் பிரெஞ்சு உணவுப் பதப்படுத்துதல் நிறுவனம் ஒன்று அமைக்கப்பட இருக்கிறது.
  • கன்னியாகுமரி மாவட்டத்தில் கடல் அரிப்புத் தடுப்பான்களுக்காக ரூ.116 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.
  • சென்னையில் உள்ள நதிக்கரையோரத்தில் வாழும் மக்களுக்காக 38,000 எண்ணிக்கையிலான வீடுகள் அமைக்கப்படும்.
  • ரூ.50 கோடி செலவில் முதலமைச்சரின் திட்டமான பழங்கள் மற்றும் காய்கறிகள் உற்பத்தியினைப் பெருக்குதல் என்ற சிறப்புத் திட்டம் செயல்படுத்தப்படும்.

 

வருவாய்ப் பற்றாக்குறை
  • 2017-18-ஆம் நிதியாண்டில் மாநிலத்தின் சொந்த வரி வருவாய் 9.07 சதவிகிதமாக வளர்ச்சியடைந்துள்ளது. மேலும் இது நடப்பு நிதியாண்டில் 14 சதவிகிதத்தைத் தாண்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
  • வரியின் மூலம் கிடைக்கும் வருமானம் நேர்மறையாக இருப்பதனால் 2019-20-ஆம் நிதியாண்டில் நிதிப் பற்றாக்குறை குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
  • அதிக அளவிலான மாநிலத்தின் சொந்த வரி வருமானத்தின் வளர்ச்சியுடன் UDAY மற்றும் சம்பள உயர்வின் தாக்கம் ஆகியவற்றின் தாக்கம் நிறைவடையும் தருவாயில் இருப்பதால் வரும் ஆண்டுகளில் மாநிலத்தின் நிதிப் பற்றாக்குறை குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

 

நிதிப் பற்றாக்குறை
  • 2019-20-ஆம் நிதியாண்டில் தமிழ்நாட்டின் நிதிப் பற்றாக்குறை ரூ 44,176 கோடியாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
  • நிர்ணயிக்கப்பட்ட 3 சதவிகித வரம்பை விடக் குறைவாக மாநிலத்தின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் நிதிப் பற்றாக்குறை 56 சதவிகிதமாக இருக்கும்.
உண்மைகளும் புள்ளி விபரங்களும்
  • 2019-20-ஆம் நிதியாண்டில் பல்வேறு நலத் திட்டங்களுக்காக ரூ.82,673.22 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.
  • அரசுப் பணியாளர் ஓய்வூதியதாரர்களுக்கு ரூ.55,000 கோடியும் ஓய்வூதியப் பயன்களுக்காக ரூ.29,627 கோடியும் ஒதுக்கப்பட்டுள்ளது.
  • தமிழ்நாட்டின் பள்ளிக் கல்வித் துறைக்காக ரூ.28,577 கோடி ஒதுக்கப்படும்.
  • மாநிலப் பேரிடர் மேலாண்மைக்காக ரூ.825 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.
  • 2018-2019-ஆம் நிதியாண்டில் தமிழ்நாடு ரூ.44,000 கோடி கடன் வாங்கியுள்ளது. 2019-20-ஆம் நிதியாண்டில் மாநில அரசு ரூ.43,000 கோடி கடன் வாங்க இருக்கின்றது.
  • மாநிலத்தின் பொருளாதார வளர்ச்சி 8.1 சதவிகிதமாக இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது.
  • வணிக வரி மூலம் பெறப்படும் வருமானம் ரூ.96,177 கோடியாக இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது.
  • வரியில்லாத வருமானம் ரூ.13,000 கோடியாக இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது.
  • 2019-20-ஆம் நிதியாண்டில் மாநிலத்தின் வருமானம் ரூ.1,97,721 கோடியாக இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது.
  • மாநிலத்தின் செலவினம் ரூ.2,08,671 கோடியாக இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது.
  • 2020 ஆம் ஆண்டின் மார்ச் மாத முடிவில் நிலுவையில் உள்ள 3,97,495.96 கோடி ரூபாயாக இருக்கும். ஒட்டுமொத்த மாநில உள்நாட்டு உற்பத்தி கடன் விகிதம் அனுமதிக்கப்பட்ட வரம்பான 25 சதவிகிதத்திற்கு உள்ளாக 02 சதவிகிதமாக இருக்கும்.
  • வரும் நிதியாண்டில் வட்டிச் செலவினங்கள் ரூ.33,000 கோடியாக இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது.
  • மாநிலத்தின் தனி நபர் வருமானமானது 2011-12-ஆம் நிதியாண்டில் 1.03 இலட்சத்திலிருந்து 2017-18-ஆம் நிதியாண்டில் 1.42 இலட்சமாக உயர்ந்துள்ளது.
  • 2019-20 நிதியாண்டில் வரி வருவாய் 14 சதவிகிதம் உயரும் என்று தமிழக அரசு எதிர்பார்க்கின்றது.

 

 - - - - - - - - - - - - - - - -

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்