TNPSC Thervupettagam

பிந்தேசுவரி பிரசாத் மண்டல்

September 6 , 2018 2069 days 2812 0

பிந்தேசுவரி பிரசாத் மண்டல்

- - - - - - - - - - - - - - -

இளமைக் காலம்

  • பி.பி.மண்டல் அவர்கள் பனாரஸில் உள்ள ஒரு யாதவ குடும்பத்தில் 1918ஆம் ஆண்டு பிறந்தார்.
  • அவர், வடக்கு பீகாரைச் சேர்ந்த மதேபுரா மாவட்டத்தில் (முன்னர் சகர்சா மாவட்டம் என்றிருந்தது) உள்ள முர்ஹோ என்னும் கிராமத்தில் வளர்ந்தார்.
  • அவர் தமது இளமைக்கால கல்வியை மதேபுராவில் பயின்றார். தர்பங்காவில் உள்ள ராஜ் உயர்நிலைப் பள்ளியில் அவர் தனது உயர்நிலைக் கல்வியைப் பயின்றார். பின்பு பாட்னா கல்லூரியில் கல்லூரிப் படிப்பை முடித்தார்.
  • அவர், 1945ல் இருந்து 1951 வரை கௌரவ நீதிபதியாக பணியாற்றினார்.

அரசியல் வாழ்க்கை

  • மண்டல் அவர்களின் அரசியல் பணி இந்திய தேசிய காங்கிரஸில் தொடங்கியது. ஆனால், அவர், அவசரநிலை காலத்திற்குப் பிறகு ஜனதா கட்சியில் இணைந்தார்.
  • அவர், அரசியல் நிலையற்ற தன்மை தீவிரமாக இருந்த காலமாகக் கருதப்படுகின்ற 1968ஆம் ஆண்டு, 30 நாட்களுக்கு பீகாரின் முதல்வராக பதவி வகித்தார்.
  • அவர், பீகார் மாநிலத்திற்காக, 1967ல் இருந்து 1970 வரையிலும் மற்றும் 1977இல் இருந்து 1979 வரையிலும் மக்களவையின் நாடாளுமன்ற உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டார்.
  • 2018 ஆம் ஆண்டானது மண்டலின் 100-வது பிறந்த நாளாகும். மேலும் இந்த ஆண்டானது மண்டல் ஆணைய அறிக்கை செயல்படுத்தப்பட்டதின் 25-வது ஆண்டாகும்.

சமூக உரிமைகள் குழு ஆணையம்

  • இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் ஷரத்து 340க்கு இணங்க, 1978ஆம் ஆண்டு டிசம்பர் மாதம், ஐந்து பேர் கொண்ட சமூக உரிமைகள் ஆணையமானது (முதல் ஆணையம் - 1955 – காகா கலேல்கர் ஆணையம்) பிரதமர் மொராஜி தேசாய் தலைமையிலான இந்திய அரசாங்கத்தால் அமைக்கப்பட்டது.
  • பி.பி.மண்டல் தலைவராகக் கொண்டு அமைக்கப்பட்ட அந்த ஆணையமானது ‘மண்டல் ஆணையம்’ என்று பிரபலமாக அறியப்படுகிறது.
  • இந்தக் குழுவானது, சமூகரீதியாகவும் கல்வி ரீதியாகவும் பிற்படுத்தப்பட்டோரை அடையாளம் காண்பதுடன் சாதிப் பாகுபாட்டை களையும் பொருட்டு மக்களுக்கான இட ஒதுக்கீடு பற்றிய கேள்விகளை கருத்தில் கொண்டு செயல்படும் நோக்கத்தைக் கொண்டதாகும்.
  • இந்த ஆணையமானது மூன்று பெரும் தலைப்பின் கீழ் குழுப்படுத்தக் கூடிய பதினொரு வரைகூறுகளை ஏற்றுக் கொண்டது. அவையாவன,
    • சமூக ரீதியாக
    • கல்வி ரீதியாக
    • பொருளாதார ரீதியாக
  • இது, இதர பிற்படுத்தப்பட்டோராக யார் தகுதி பெற்றார்கள் என்பதை அடையாளம் காண்பதற்காக வகைபடுத்தப்பட்டுள்ளது.
  • அவரது ஆணையத்தின் அறிக்கையானது 1980ல் நிறைவு செய்யப்பட்டது. அந்த அறிக்கையானது, அனைத்து அரசு மற்றும் கல்வி நிலையங்களின் கணிசமான விகிதத்தை இதர பிற்படுத்தப்பட்டோர் வகுப்பின் மூலம் வரும் விண்ணப்பதாரர்களுக்கு ஒதுக்கப்பட வேண்டும் என்று பரிந்துரைக்கிறது.
  • இது, இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான மக்கள் தொகையை 52% சதவிகிதமாக மதிப்பிட்டதுடன் மத்திய அரசின் கீழ் வரும் அனைத்து பதவிகளிலும் 27% இதர பிற்படுத்தப்பட்டோருக்காக ஒதுக்கப்பட வேண்டும் என்று பரிந்துரைத்தது.
  • வேலை வாய்ப்புகளில் இட ஒதுக்கீடுகளைத் தவிர, இந்த ஆணையமானது பல்வேறு பரிந்துரைகளை அளித்துள்ளது. அவை பணியுயர்வுகளில் இட ஒதுக்கீடு, இதர பிற்படுத்தப்பட்டோருக்கு சாதகமான நில சீர்திருத்தங்கள், இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினரின் தொழில் தொடர்பான தொழில் நுட்ப நிறுவனங்களை திறப்பது, இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினரின் நலனுக்காக அனைத்து அமைச்சகங்களிலும் சிறப்புப் பிரிவு, ஒவ்வொரு 20 வருடங்களுக்கு ஒரு முறை பிற்படுத்தப்பட்டோர் நலனுக்காக மேற்கொள்ளப்படும் முன்னேற்றத்தை ஆய்வு செய்தல் ஆகியனவாகும்.
  • 10 ஆண்டுகளாக புறக்கணிக்கப்பட்ட பின்னர், இந்த அறிக்கையானது, வி.பி. சிங் தலைமையிலான தேசிய முன்னணி அரசாங்கத்தால் ஏற்றுக் கொள்ளப்பட்டது. இந்த அரசானது 1990ஆம் ஆண்டு ஆகஸ்டு மாதம் 7ம் தேதி அன்று, சமூகம் மற்றும் கல்வி ரீதியில் பின்தங்கிய வகுப்புகளைச் சேர்ந்தவர்களுக்கு மத்திய அரசுப் பணிகள் மற்றும் பொது நிறுவனங்களில் 27 சதவிகித இடஒதுக்கீடு அளிப்பதாக அறிவித்தது.
  • இந்த அரசானது ஆகஸ்ட் மாதம் 13ம் தேதி அரசாங்க ஆணை வெளியிட்டிருந்த போதும், வி.பி.சிங் அவர்கள், அந்த அறிக்கையை சட்டப்பூர்வமாக நடைமுறைப் படுத்துதலை இரண்டு நாட்கள் கழித்து அவரது சுதந்திர தின உரையில் அறிவித்தார்.

இந்திரா சஹாணி வழக்கு

  • அதே வருடம் (1990), உச்சநீதிமன்றத்தின் முன் வழக்கு ஒன்று கொண்டு வரப்பட்டது. அந்த வழக்கானது, மண்டல் அறிக்கையின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்துவதற்கான அரசாங்க ஆணையின் அரசியலமைப்புச் செல்லுபடியை எதிர்த்து தொடுக்கப்பட்டதாகும்.
  • உச்சநீதிமன்றத்தின ஐந்து பேர் அடங்கிய நீதிபதிகள் அமர்வானது, அரசாங்க ஆணையை செயல்படுத்துவதற்கு தடையை விதித்தது. பின்னர், அதன் தீர்ப்பில் அரசாங்க ஆணையை உறுதி செய்தது.
  • தேசிய பிற்படுத்தப்பட்டோர் ஆணையமானது, இந்திரா சஹாணி Vs மைய அரசு வழக்கின் விளைவாக அமைக்கப்பட்டதாகும்.
  • 1992 ஆம் ஆண்டு நவம்பர் 16 அன்று இந்திய உச்ச நீதிமன்றமானது மண்டல் ஆணையத்தின் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான 27 சதவீத இடஒதுக்கீட்டை உறுதி செய்தது. மேலும் அட்டவணைப்படுத்தப்பட்ட பிரிவினர், அட்டவணைப்படுத்தப்பட்ட பழங்குடியினர் மற்றும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் ஆகிய இட ஒதுக்கீட்டுப்  பயனாளிகள் ஒட்டுமொத்த அளவில்  இந்திய மக்கட்தொகையில் 50 சதவீத இட ஒதுக்கீட்டிற்கு மேல் இருக்க கூடாது என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
  • அதே நேரத்தில் உயர் பிரிவினரில் பொருளாதாரத்தில் பின்தங்கியுள்ள பிற்படுத்தப்பட்ட வகுப்பினர்களுக்கு அரசாங்கப் பணிகளில் 10 சதவீத இட ஒதுக்கீடு அளிப்பதற்கான மத்திய அரசாங்கத்தின் சுற்றறிக்கையை உச்சநீதிமன்றம் ரத்து செய்துள்ளது.
  • இந்திரா சஹாணி வழக்கில் உச்சநீதிமன்றத்தின் கருத்துகள் பின்வருமாறு:
  • குடிமக்களில் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர்களை பொருளாதார அடிப்படையில் மட்டுமேயன்றி சாதி  அடிப்படையிலும் அடையாளப்படுத்தப்படுவார்கள்.
  • பிற்படுத்தப்பட்ட வகுப்பினர்களில் கிரீமி லேயர் (Creamy Layer) அல்லது பசை அடுக்கு வகுப்பினர் கண்டிப்பாக இட ஒதுக்கீட்டு வசதியிலிருந்து நீக்கப்பட வேண்டும்.
  • பிற்படுத்தப்பட்ட வகுப்பினர்களை மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர்களாக மேலும் வகையீடு செய்ய அனுமதி அளிக்கப்படுகிறது.
  • இட ஒதுக்கீடானது 50 சதவீதத்திற்கு மேல் இருக்கக் கூடாது. இந்த விதி ஒவ்வொரு ஆண்டும் கடைபிடிக்கப்பட வேண்டும். எனினும் தொலைவில் உள்ள பகுதிகள் அல்லது பின்தங்கிய பகுதிகளில் வாழும் மக்களின் அசாதாரண சூழ்நிலைகளைக் கருத்தில் கொண்டு இந்த விதி தளர்த்தப்படலாம்.
  • முன்கொணர்தல் விதிக்கு அனுமதியளிக்கப்படுகிறது. ஆனால் இது 50 சதவீதம் இட ஒதுக்கீட்டு வரம்பிற்கு உட்பட்டது.
  • பதவி உயர்வில் இட ஒதுக்கீடு அளிக்கப்படக் கூடாது.
  • இவ்வாறு, மத்திய அரசுப் பணிகளில், இதர பிற்படுத்தப்பட்டோருக்கான இட ஒதுக்கீட்டுப் பரிந்துரைகளானது இறுதியாக 1992-ல் நடைமுறைப்படுத்தப்பட்டது.
 

தமிழ்நாட்டின் நிலை

  • ஏற்கனவே, தமிழ்நாட்டில், இதர பிற்படுத்தப்பட்டோர் வகுப்பினருக்கான ஒதுக்கீடு, இதர பிற்படுத்தப்பட்டோர் வகுப்பினருக்கு 30 விழுக்காடாகவும் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் வகுப்பினருக்கு 20 விழுக்காடாகவும்  என்று இரண்டு பகுதிகளாக உள்ளது. பட்டியலிடப்பட்ட வகுப்பினர் மற்றும் பழங்குடியினருக்கு என்று முறையே 18 விழுக்காடு மற்றும்  1 விழுக்காடு தனி இடஒதுக்கீடாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. மொத்த இட ஒதுக்கீடு சதவிகிதம் 69  விழுக்காடாக உள்ளது.
  • இந்த ஒதுக்கீடானது, ஜெ.ஜெயலலிதாவின் (ADMK) ஆட்சிக் காலத்தில் 1994ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 31ம் தேதி அன்று 76 வது அரசியலமைப்பு சட்ட திருத்தத்தின் மூலம் 9 வது அட்டவணையில் சேர்க்கப்பட்டது.
 

- - - - - - - - - - - - -

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்