TNPSC Thervupettagam

முக்கியத் தினங்கள் - ஜூன்

October 31 , 2018 2026 days 15614 0
To read this article in English, Click Here 
ஜூன் - 01
உலக பால் தினம்
  • இந்தத் தினமானது ஐ.நா.வின் உணவு மற்றும் விவசாய அமைப்பினால் (Food and Agriculture Organization of the United Nations - FAO) ஏற்படுத்தப்பட்டது.
  • இந்தியா அதிக அளவில் பாலை உற்பத்தி செய்கிறது.
  • மேலும் இது தேசிய பால் தினத்தை நவம்பர் 26 அன்று கொண்டாடுகிறது.

  • இந்தியாவில் வெள்ளைப் புரட்சியின் தந்தையான வர்கீஸ் குரியனின் பிறந்த தின நினைவாக இத்தினம் அனுசரிக்கப்படுகிறது.
  • இந்தியாவில் 2018 ஆம் ஆண்டின் கருத்துருவானது - “பாலை அருந்திவிட்டு வலிமையுடன் இரு” என்பதாகும்.
சர்வதேச பெற்றோர்கள் தினம்
  • ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 1 அன்று சர்வதேச பெற்றோர்கள் தினம் அனுசரிக்கப்படுகிறது.
  • இந்தத் தினம் 2012 ஆம் ஆண்டு A/RES/66/292 என்ற தீர்மானத்தின் மூலம் ஐ.நா. பொதுச் சபையினால் பறைசாற்றப்பட்டது. உலகம் முழுவதும் உள்ள பெற்றோர்களை இத்தினம் கௌரவிக்கிறது.
  • 1980 ஆம் ஆண்டு முதல் குடும்பங்களின் முக்கியமான பங்கு அதிகரித்து வருவது சர்வதேச சமூகத்தின் கவனத்தை ஈர்த்தது.
  • ஐ.நா பொதுச் சபையானது அதிக எண்ணிக்கையிலான தீர்மானங்களை நிறைவேற்றி, குடும்பங்களுக்கான சர்வதேச ஆண்டு மற்றும் தனிக் குடும்பத்திற்கான சர்வதேச ஆண்டு ஆகியவற்றை பறைசாற்றியது.
ஜூன் - 03
உலக மிதிவண்டி தினம்
  • 2018 ஆம் ஆண்டு ஜூன் 3 அன்று, முதன்முறையாக அதிகாரப்பூர்வமாக உலக மிதிவண்டி தினம் கடைபிடிக்கப்பட்டது.
  • நீடித்தப் போக்குவரத்தின் குறியீடாக மிதிவண்டி உள்ளது. மேலும் இது நிலையான நுகர்வு மற்றும் உற்பத்தியை ஊக்குவிக்கும் நேர்மறையான செய்தியை அறிவிக்கிறது. இது காலநிலையின் மீது நேர்மறையான தாக்கத்தை ஏற்படுத்துகிறது.

  • உறுப்பினர் நாடுகள் சிறந்த நடைமுறைகளை ஏற்றுக்கொள்ள இத்தினம் ஊக்குவிக்கிறது. சமூகத்தில் உள்ளவர்களுக்கிடையே மிதிவண்டியைப் பயன்படுத்துவதை ஊக்குவிக்கவும் இத்தினம் அனுசரிக்கப்படுகிறது.
ஜூன் - 04
நிதியியல் கல்வி வாரம்
  • இந்திய ரிசர்வ் வங்கியானது ஜூன் 4 ஆம் தேதி முதல் ‘நுகர்வோர் பாதுகாப்பு’ என்ற கருத்துருவுடன் நிதியியல் கல்வி வாரத்தை அனுசரித்தது.
  • ஒரு வார காலம் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியானது வங்கி வாடிக்கையாளர்களுக்கிடையே விழிப்புணர்வை ஏற்படுத்துவதில் கவனத்தைச் செலுத்தியது.
  • இந்திய ரிசர்வ் வங்கியின்படி இந்த வாரமானது வெவ்வேறு நிதியியல் பொருட்கள், சேவைகள், டிஜிட்டல் பயன்பாடுகள் மற்றும் சிறந்த நிதியியல் நடைமுறைகள் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்த வலியுறுத்தியது.
  • வங்கியாளர்கள், நிதியியல் கல்வி அறிவுரையாளர்கள் மற்றும் இதர பங்களிப்பாளர்கள் ஆகியோர் இந்நிகழ்ச்சியில் பங்கு பெற்றனர்.
வன்தாக்குதலில் பாதிக்கப்பட்ட அப்பாவிக் குழந்தைகளுக்கான சர்வதேச தினம்
  • 1982 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 19 ஆம் தேதியன்று நடைபெற்ற பாலஸ்தீனம் குறித்த சிறப்பு அவசரக் கூட்டத்தில், ஐ.நா பொதுச் சபையானது ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 4 ஆம் தேதியை வன்தாக்குதலில் பாதிக்கப்பட்ட அப்பாவிக் குழந்தைகளுக்கான சர்வதேச தினமாகக் கொண்டாட முடிவு செய்தது.
  • இந்த தினத்தின் நோக்கமானது உலகம் முழுவதும் உடல் ரீதியாக, மன ரீதியாக மற்றும் உணர்வுப் பூர்வமாக பாதிக்கப்பட்ட குழந்தைகள் அனுபவித்த வலியை அங்கீகரிப்பதாகும்.
  • குழந்தைகளின் உரிமைகளை பாதுகாப்பதற்கான ஐ.நா.வின் உறுதிப்பாட்டை இத்தினம் வலியுறுத்தியது.
  • இதன் பணிகள் குழந்தைகளின் உரிமைகள் மீதான ஐ.நா ஒப்ந்த்தத்தினால் வழிநடத்தப் படுகிறது.
ஜூன் - 05
உலக சுற்றுச்சூழல் தினம்
  • ஐ.நா - ஆனது உலகம் முழுவதும் வாழ்கின்ற மக்களின் நலன் மற்றும் பொருளாதார வளர்ச்சியை பாதிக்கக்கூடிய முக்கியப் பிரச்சனையான மனித சுற்றுச் சூழலின் பாதுகாப்பு மற்றும் வளர்ச்சி குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த முயற்சி செய்கிறது.
  • எனவே ஐ.நா. ஆனது ஜூன் 5 ஆம் தேதியை உலக சுற்றுச்சூழல் தினமாக அறிவித்தது.

  • 2018 ஆம் ஆண்டின் கருத்துருவானது - “பிளாஸ்டிக் மாசுப்பாட்டை ஒழிப்பது” என்பதாகும். இத்தருணத்தில் முக்கியமான சுற்றுச்சூழல் பிரச்சனைகளில் ஒன்றான பிளாஸ்டிக் மாசுபாட்டை ஒழிக்க நாம் அனைவரும் ஒன்றிணைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதை இக்கருத்துரு வலியுறுத்துகிறது.
  • அனைத்து உலக சுற்றுச்சூழல் தினத்தையும் வெவ்வேறு நாடுகள் நடத்துகின்றன.
  • இந்த ஆண்டு உலக சுற்றுச்சூழல் தினத்தை இந்தியா நடத்தியது.
ஜூன் - 08
உலக பெருங்கடல்கள் தினம்
  • கடல்களில் மனித நடவடிக்கைகளால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து பொது மக்களுக்கு தெரிவிப்பது, கடல்களுக்காக உலகம் முழுவதும் மக்கள் இயக்கங்களை ஏற்படுத்துவது மற்றும் உலகத்தில் உள்ள கடல்களின் நீடித்த மேலாண்மைக்கான திட்டங்களில் மக்கள் அனைவரையும் ஒன்றிணைப்பது ஆகியவை இத்தினத்தின் நோக்கங்களாகும்.
  • கருத்துரு - “2018 ஆம் ஆண்டின் நடவடிக்கை மீதான கவனம் : பிளாஸ்டிக் மாசுபாட்டைத் தடுப்பது மற்றும் தூய்மையான கடல்களுக்கான தீர்வுகளை ஊக்குவிப்பது” என்பதாகும்.
  • மேலும் இக்கொண்டாட்டங்கள் நமது கடல்களை தூய்மை செய்வதற்கு உதவுவதற்காக #WorldOceansDay, #SaveOurOcean என்ற குறியீடுகளை சமூக ஊடகங்களில் பயன்படுத்துகின்றன.
உலக மூளைக் கட்டி தினம்
  • 2018 ஆம் ஆண்டின் மூளைக்கட்டி தினத்தின் நோக்கமானது மூளைக் கட்டி ஏற்பட்டுள்ள நோயாளிகளுக்கு மருத்துவ உதவியின் மூலம் உதவுவதாகும்.
  • ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 8 ஆம் தேதி உலக மூளைக் கட்டி தினமாக அனுசரிக்கப்படுகிறது.
  • மூளைக் கட்டி குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவது மற்றும் இந்த வகையான புற்றுநோய் பொதுவாக ஏற்படக்கூடியது அல்ல என்று சமூகத்தில் உள்ள அனைத்துப் பிரிவினரிடமும் அறிவிப்பது ஆகியவை 2018 ஆம் ஆண்டின் உலக மூளைக் கட்டி தினத்தின் நோக்கங்களாகும்.

  • உலக மூளைக் கட்டி தினமானது ஜெர்மன் மூளைக் கட்டி மன்றம் (German Brain Tumor Association) என்ற அரசு சாரா நிறுவனத்தால் தொடங்கப்பட்டது. இந்த அரசு சாரா நிறுவனம் மூளைக் கட்டி பாதிப்புக்கு உள்ளான நோயாளிகளுக்கு தேவையான உதவிகள் மற்றும் தகவல்களை அளிக்கும்.
  • இம்மன்றமானது, 2000 ஆம் ஆண்டு ஜூன் 8 அன்று உலக மூளைக் கட்டி தினத்தை அறிவித்தது.

 

ஜூன் - 11
பசுமை மிசோரம் தினம்
  • 1999 ஆம் ஆண்டு முதல் ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 11 ஆம் தேதி பசுமை மிசோரம் தினம் நடத்தப்படுகிறது.
  • மிசோரம் முதலமைச்சர் தன்னுடைய அமைச்சரவையில் உள்ள அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் மூத்த அதிகாரிகளுடன் விழாவில் கலந்து கொண்டு பசுமை மிசோர தினம், 2018-ஐ தொடங்கி வைத்தார். இவ்விழாவின் போது அஸ்வாலில் அமைந்துள்ள சிட்டி நதியில் மரக்கன்றுகள் நடப்பட்டன.
ஜூன் - 12
குழந்தை தொழிலாளர்களுக்கு எதிரான உலக தினம்
  • உலகம் முழுவதும் உள்ள குழந்தைத் தொழிலாளர்களின் மீது கவனத்தை செலுத்துவதற்காகவும் குழந்தைத் தொழிலை ஒழிப்பதற்கான நடவடிக்கைகளுக்கான முயற்சிகள் ஆகியவற்றிற்காகவும் சர்வதேச தொழிலாளர் அமைப்பானது (ILO - International Labour Organisation) 2002 ஆம் ஆண்டு குழந்தைத் தொழிலாளர்களுக்கு எதிரான சர்வதேச தினத்தை ஏற்படுத்தியது.

  • உலகம் முழுவதும் உள்ள குழந்தைத் தொழிலாளர்களின் அவல நிலையை வெளிகொணர்வதற்காகவும் அவர்களுக்கு உதவுவதற்கு எடுக்கப்பட வேண்டிய முயற்சிகளுக்காகவும் அரசாங்கங்கள், முதலாளிகள், பணியாளர்கள், அமைப்புகள், சிவில் சமூகங்கள், உலகம் முழுவதும் உள்ள மக்கள் என அனைவரையும் இத்தினம் ஒன்றிணைக்கிறது.
  • 2015 ஆம் ஆண்டில் உலகத் தலைவர்களால் ஏற்றுக்கொள்ளப்பட்ட நீடித்த வளர்ச்சி இலக்குகளில் (SDG - Sustainable Development Goals) குழந்தைத் தொழிலாளர்களை ஒழிப்பதற்கான புதுப்பித்த உலக உறுதிப்பாடும் ஒன்றாகும்.
ஜூன்-13
சர்வதேச வெளிறல் விழிப்புணர்வு தினம்
  • 2014 ஆம் ஆண்டு டிசம்பர் 18 அன்று ஐ.நா. பொதுச் சபையானது 2015 ஆம் ஆண்டு முதல் ஜூன் 13 ஆம் தேதியை சர்வதேச வெளிறல் விழிப்புணர்வு தினமாக அனுசரிப்பதற்கான தீர்மானத்தை ஏற்றுக் கொண்டது.
  • வெளிறல் நோயினால் பாதிக்கப்பட்டவர்களை பாகுபாட்டுடன் நடத்துதல் மற்றும் தாக்குதல்களை தடுத்தல் ஆகியவற்றை நோக்கமாகக் கொண்டு 2013 ஆம் ஆண்டில் ஐ.நா. மனித உரிமைகள் ஆணையம் ஒரு தீர்மானத்தை ஏற்றுக் கொண்டது.

 

ஜூன் - 14
உலக இரத்த தான தினம்
  • ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 14 அன்று உலகம் முழுவதும் உள்ள நாடுகள் உலக இரத்த தான தினத்தை அனுசரிக்கிறது.
  • இந்நிகழ்ச்சியின் மூலம் ஒருவர் தாமாக முன்வந்து, உயிர் காக்க உதவும் இரத்தத்தை அளிப்பவர்களுக்கு நன்றி செலுத்துவதாகும். தரம், பாதுகாப்பு, இரத்தத்தின் இருப்பு மற்றும் நோயாளியின் தேவையைப் பொறுத்து இரத்தம் தொடர்பானவற்றை அளிப்பது ஆகியவற்றிற்காக தொடர்ந்து இரத்த தானம் செய்வதின் தேவை குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக இத்தினம் அனுசரிக்கப்படுகிறது.
  • 2018 ஆம் ஆண்டின் உலக இரத்த தான தினத்தை ஹெலினிக் தேசிய இரத்த மையம் மூலம் கிரீஸ் நாடு நடத்தியது.
  • இந்த சர்வதேச நிகழ்ச்சியானது 2018 ஆம் ஆண்டு ஜூன் 14 அன்று ஏதென்ஸில் நடைபெற்றது.
ஜூன் - 15
உலக முதியோர் அவமதிப்பு விழிப்புணர்வு தினம்
  • ஐக்கிய நாடுகள் பொதுச் சபையானது 66/127 என்ற தனது தீர்மானத்தின் மூலம் ஜூன் 15 ஆம் தேதியை உலக முதியோர் அவமதிப்பு விழிப்புணர்வு தினமாக அறிவித்தது.
  • நமது முன்னோர்கள் அனுபவித்த அவலங்கள் மற்றும் அவமதிப்பு ஆகியவற்றிற்கு எதிராக உலகம் முழுவதும் ஒன்று சேர்ந்து ஒரு நாளைத் தேர்ந்தெடுத்து குரல் கொடுப்பதை இத்தினம் குறிக்கிறது.
ஜூன் - 16
வெளிநாட்டில் வாழ்பவர்கள் தங்கள் குடும்பங்களுக்கு பணம் அனுப்புதலுக்கான சர்வதேச தினம்
  • நாடு கடந்து பணிபுரியும் பணியாளர்கள் தங்கள் குடும்பங்களுக்கு கணிசமான நிதிப் பங்களிப்பு செய்வதை அங்கீகரிப்பதையும் தங்களது சொந்த நாட்டின் வளர்ச்சிக்கு உதவுவதை அங்கீகரிப்பதையும் நோக்கமாகக் கொண்டு ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 16 அன்று வெளிநாட்டில் வாழ்பவர்கள் தங்கள் குடும்பங்களுக்கு பணம் அனுப்புதலுக்கான சர்வதேச தினம் அனுசரிக்கப்படுகிறது.
  • வெளிநாட்டில் வாழ்பவர்கள் தங்கள் குடும்பங்களுக்கு பணம் அனுப்புதலுக்கான சர்வதேச தினத்தை அனுசரிப்பதற்காக ஏற்படுத்திய தீர்மானம் (A/RES/72/281) ஐக்கிய நாடுகள் பொதுச் சபையால் 2018 ஆம் ஆண்டு ஜூன் 12 அன்று ஏற்றுக் கொள்ளப்பட்டது.
  • மேலும் உலக இடப்பெயர்வு குழுவில் உள்ள (Global Migration Group) 22 ஐ.நா. அமைப்புகளாலும், சர்வதேச இடப்பெயர்வு அமைப்பு மற்றும் பல்வேறு உறுப்பு நாடுகளால் தனித்தனியாகவும் இத்தினம் ஆதரிக்கப்படுகிறது.
ஜூன் - 17
உலக தந்தைகள் தினம்
  • தங்களது குழந்தைகள் நலனில் பங்கெடுத்துக் கொள்ளும் தந்தைகளை அங்கீகரிப்பதற்காக உலகம் முழுவதும் தந்தைகள் தினம் அனுசரிக்கப்படுகிறது.
  • உலகம் முழுவதும் வெவ்வேறு தேதிகளில் தந்தைகள் தினம் அனுசரிக்கப்படுகின்ற போதும், பல்வேறு நாடுகள் ஜூன் மாதம் மூன்றாவது ஞாயிற்றுக் கிழமையை தந்தைகள் தினமாக கடைபிடிக்கின்றன.
பாலைவனமாக்கல் மற்றும் வறட்சியை எதிர்த்து போராடுவதற்கான சர்வதேச தினம்
  • பாலைவனமாக்கலை எதிர்த்து போராடுவதற்காக சர்வதேச அளவில் பொது விழிப்புணர்வை ஊக்குவிப்பதற்காக ஒவ்வொரு ஆண்டும் பாலைவனமாக்கல் மற்றும் வறட்சியை எதிர்த்து போராடுவதற்கான சர்வதேச தினம் கடைபிடிக்கப்படுகிறது.
  • இத்தினத்தின் தனித்துவ நோக்கம் நிலத்தின் தரம் குறைதலின் சமநிலைமைப் பிரச்சனைக்கு தீர்வு காணல், சமூகப் பங்களிப்பு மற்றும் அனைத்து நிலைகளிலும் ஒத்துழைப்பு அளித்தல் ஆகியவற்றின் மூலம் ஏற்படுத்த முடியும் என்பதை அனைவருக்கும் நினைவுபடுத்துவதாகும்.
  • 2018 ஆம் ஆண்டின் கருத்துருவானது - “நிலத்திற்கு உண்மையான மதிப்பு உண்டு. அவற்றில் முதலீடு செய்யுங்கள்” என்பதாகும்.
  • 2018 ஆம் ஆண்டின் பாலைவனமாக்கலுக்கு எதிரான உலக தினத்தின் பிரச்சாரமானது நீடித்த தன்மையற்ற நில பயன்பாட்டிலிருந்து விலகி இருப்பதை #2018WDCD என்ற குறியீட்டுடன் அறிவுறுத்துகிறது.

 

 ஜூன் - 18
நீடித்த அறுசுவை உணவு தினம்
  • ஐக்கிய நாடுகள் பொதுச் சபையானது 2016 ஆம் ஆண்டு டிசம்பர் 21 அன்று A/RES/71/246 என்ற தீர்மானத்தை ஏற்றுக் கொண்டு ஜீன் 18 ஆம் தேதியை சர்வதேச அளவில் நீடித்த அறுசுவை உணவு தினமாக அறிவித்தது.
கோவா புரட்சி தினம் - ஜூன் 18
  • 72 ஆண்டுகளுக்கு முன்னர் தொடங்கிய போராட்டமானது (1946 ஆம் ஆண்டு) 1961 ஆம் ஆண்டு கோவா விடுதலையின் மூலம் முடிவுக்கு வந்தது.
ஜூன் - 19
உலக அரிவாள் உயிரணு (Sickle cell) தினம்
  • 2008 ஆம் ஆண்டு டிசம்பர் 22 அன்று நடைபெற்ற ஐ.நா. பொதுச் சபையின் 63-வது முழுமையான அமர்வின்போது, ஒரு தீர்மானத்தின் மூலம் “அரிவாள் உயிரணு இரத்த சோகையானது” பொதுச் சுகாதார பிரச்சனையாக ஏற்றுக் கொள்ளப்பட்டது.
  • மேலும் ஐ.நா. ஆனது அரிவாள் உயிரணு இரத்தசோகை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 19 ஆம் தேதியை, “உலக அரிவாள் உயிரணு” தினமாக அனுசரிக்க தனது உறுப்பு நாடுகள் மற்றும் ஐ.நா. அமைப்புகளை வலியுறுத்தியது.
  • 2009 ஆம் ஆண்டு ஜூன் 19 அன்று முதன்முறையாக “உலக அரிவாள் உயிரணு தினம்” அனுசரிக்கப்பட்டது.
ஜூன் - 20
உலக அகதிகள் தினம்
  • ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 20 ஆம் தேதி இந்த வருடாந்திர நிகழ்ச்சியானது நடைபெறுகிறது.
  • இத்தினமானது உலகம் அகதிகளுக்கு ஒத்துழைப்பு அளிப்பது மற்றும் அவர்களோடு துணை நிற்பதை குறிக்கிறது.

  • 2018 ஆம் ஆண்டின் உலக அகதிகள் தின கொண்டாட்டமானது, 18-வது ஆண்டைக் குறிக்கிறது.
  • ஐக்கிய நாடுகள் அகதிகள் அமைப்பால் இத்தினத்தை அனுசரிக்கிறது.
  • அகதிகள் மீதான உலகப் பொறுப்புடைமை குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்துவதை இத்தினம் குறிக்கிறது.
  • 2018 ஆம் ஆண்டின் கருத்துரு : “எப்பொழுதும் இல்லாத அளவுக்கு தற்பொழுது அகதிகளுக்கு நாம் துணை நிற்போம்” என்பதாகும்.
ஜூன் - 21
உலக நீர்நிலையியல் தினம்
  • நீர்நிலை குறித்த ஆராய்ச்சியாளர்களின் பணிகளை வெளிக்கொணரவும் நீர்நிலைகளின் முக்கியத்துவம் குறித்தும் விழிப்புணர்வை ஏற்படுத்த இந்த வருடாந்திர நிகழ்ச்சியானது சர்வதேச நீர்நிலையியல் அமைப்பால் ஏற்றுக்கொள்ளப்பட்டது.
  • உலக நீர் நிலையியல் தினம் ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 21 அன்று அனுசரிக்கப்படுகிறது.
  • சர்வதேச நீர்நிலையியல் நிறுவனமானது 1921-ல் உருவாக்கப்பட்டது.
  • 1970 ஆம் ஆண்டில் இது சர்வதேச நீர்நிலையியல் அமைப்பு என்று பெயர் மாற்றப்பட்டது.
  • 2005 ஆம் ஆண்டில் சர்வதேச நீர்நிலையியல் அமைப்பானது உலக நீர்நிலையியல் தினத்திற்கான கருத்தை ஏற்றுக் கொண்டது. இதனை ஐ.நா. பொதுச்சபை வரவேற்றது.
சர்வதேச யோகா தினம்
  • உலகளவில் ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 21 ஆம் தேதி சர்வதேச யோகா தினம் அனுசரிக்கப்படுகிறது. இதன் நோக்கம் யோகப் பயிற்சியின் நன்மைகள் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்துவதாகும்.
  • 2018 ஆம் ஆண்டின் கருத்துருவானது - “அமைதிக்காக யோகா” என்பதாகும்.

  • 2014 ஆம் ஆண்டு டிசம்பர் 11 அன்று ஐ.நா. ஆனது 69/131 என்ற தீர்மானத்தின் மூலம் ஜூன் 21 ஆம் தேதியை சர்வதேச யோகா தினமாக பறைசாற்றியது.
உலக இசை தினம்
  • ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 21 அன்று பெட்டி டி லா மியூசிக் அனுசரிக்கப்படுகிறது. மேலும் இது இசை தினம் என்றும் அழைக்கப்படுகிறது.
ஜூன் - 23
சர்வதேச விதவைகள் தினம்
  • இத்தினம் ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 23 அன்று அனுசரிக்கப்படுகிறது.
  • சர்வதேச விதவைகள் தினமானது தி லோம்பா பவுண்டேஷனால் ஏற்படுத்தப்பட்டது. இதன் நோக்கம் விதவைகள் அனுபவிக்கும் பிரச்சனைகள் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்துவதாகும்.
  • சர்வதேச விதவைகள் தினமானது முதன்முறையாக 2005-ல் அனுசரிக்கப்பட்டது. இது லார்ட் லோம்பா மற்றும் பவுண்டேஷனின் தலைவர் செர்ரி பிளேயர் ஆகியோரால் தொடங்கப்பட்டது.
ஐக்கிய நாடுகள் பொதுப் பணிகள் தினம்
  • ஐக்கிய நாடுகள் பொதுச் சபையானது 57/277 என்ற தீர்மானத்தின் மூலம் ஜூன் 23 ஆம் தேதியை ஐக்கிய நாடுகள் பொதுப் பணிகள் தினமாக அறிவித்தது.
  • ஐ.நா. பொதுப் பணிகள் தினத்தின் நோக்கமானது சமூகத்திற்கான பொதுப் பணிகளின் மதிப்பு மற்றும் ஒழுக்கம், வளர்ச்சி செயல்பாட்டில் பொதுப் பணியின் பங்களிப்பை வெளிக்கொணர்வது, பொதுப் பணியாளர்களின் பணிகளை அங்கீகரிப்பது மற்றும் பொதுத் துறையில் பணியாற்ற இளைய வயதுடையவர்களை ஊக்குவிப்பது ஆகியனவாகும்.
  • 2003 ஆம் ஆண்டு முதல் விருது வழங்கும் விழா நடைபெற்று வருகிறது. அன்றிலிருந்து, உலகம் முழுவதிலிருந்து அதிக எண்ணிக்கையிலான பரிந்துரைகள் ஐ.நா.விற்கு வருகின்றன.
ஒலிம்பிக் தினம்
  • 1894 ஆம் ஆண்டு ஜூன் 23-ல் பாரீசில் சர்வதேச ஒலிம்பிக் குழு உருவாக்கப்பட்டதை நினைவு கூறும் விதமாக ஒலிம்பிக் தினம் அனுசரிப்பதற்கான கருத்தை சர்வதேச ஒலிம்பிக் குழு 1948-ல் ஏற்றுக் கொண்டது.
  • 2018 ஆம் ஆண்டின் ஒலிம்பிக் தினமானது ஒலிம்பிக் தினத்தின் 70வது ஆண்டு தினமாகும்.
  • ஜூன் - 25
மாலுமிகள் தினம்
  • உலகம் முழுவதும் ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 25 அன்று மாலுமிகள் தினம் அனுசரிக்கப்படுகிறது.
  • மாலுமிகள் பணியிலிருக்கும்போது அனுபவிக்கும் பிரச்சனைகள் மற்றும் சொந்தப் பிரச்சனைகள் ஆகியவற்றை இத்தினம் அங்கீகரிக்கின்றது.
  • 2018 ஆம் ஆண்டின் கருத்துருவானது - “மாலுமிகள் நலன்” என்பதாகும்.
  • மாலுமிகள் நலன் குறித்த பிரச்சனைகளை இத்தினம் அடையாளப்படுத்திக் காட்டுகிறது.
  • 2010 ஆம் ஆண்டில் சர்வதேச கடல்சார் அமைப்பால் (IMO - International Maritime Organisation) மாலுமிகள் தினம் ஏற்படுத்தப்பட்டது.
ஜூன் - 26
போதைப் பொருளுக்கு எதிரான சர்வதேச தினம்
  • 1987 ஆம் ஆண்டு டிசம்பர் 7 அன்று ஐ.நா. பொதுச் சபையானது 42/112 என்ற தீர்மானத்தின் மூலம் ஜூன் 26 ஆம் தேதியை போதைப் பொருள் மற்றும் கடத்தலுக்கு எதிரான சர்வதேச தினமாக அனுசரிக்க முடிவு செய்தது.
  • 2018 ஆம் ஆண்டின் கருத்துருவானது - “முதலில் கவனி : குழந்தைகள் மற்றும் இளம் வயதினர் ஆரோக்கியமாகவும் பாதுகாப்பாகவும் வளர உதவுவதற்கான முதல் படி அவர்களை கவனிப்பது” என்பதாகும்.

  • 2016 ஆம் ஆண்டு ஏப்ரலில் ஐ.நா. பொதுச் சபையின் போதைப் பொருள் மீதான சிறப்பு கூட்டம் நடைபெற்றது.
சித்திரவதைக்கு உள்ளானவர்களுக்கு ஆதரவளிப்பதற்கான சர்வதேச தினம்
  • 1997 ஆம் ஆண்டு டிசம்பர் 12ம் தேதி, 52/149 என்ற தீர்மானத்தின் மூலம் ஐக்கிய நாடுகள் பொதுச் சபை ஜூன் 26-ம் தேதியை சித்திரவதைக்கு உள்ளானவர்களுக்கு ஆதரவளிப்பதற்கான சர்வதேச தினமாக அறிவித்தது. இதற்கான நோக்கம் சித்திரவதைகளை முழுமையாக நீக்குவதும், சித்திரவதை மற்றும் மனிதாபிமானமற்ற நடவடிக்கைகளுக்கு எதிரான ஒப்பந்தத்தை முழுமையாக செயல்படுத்துவதும் ஆகும்.
  • சித்திரவதைக்கு உள்ளானவர்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தினருக்கு உதவி புரிவதற்காக நிதிகளைத் திரட்டி அனுப்பும் ஒரு புதுமையான, பாதிப்புக்கு உள்ளானவர்கள் மீது கவனம் செலுத்தும் நிதி ஜெனீவாவில் உள்ள ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் அலுவலகத்தால் நிர்வகிக்கப்படும் நிதியான சித்திரவதைக்கு உள்ளானவர்களுக்கான ஐக்கிய நாடுகள் தன்னார்வ நிதி ஆகும்.
  • இந்த நிதி நன்கொடைகளை ஏற்றுக் கொள்ளும்.
ஜூன் - 27
நுண்ணிய, சிறிய மற்றும் நடுத்தர நிறுவனங்கள் தினம்
  • நுண்ணிய, சிறிய மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கான தினம் ஒவ்வொரு வருடமும் ஜூன் மாதம் 27-ம் தேதி அனுசரிக்கப்படுகின்றது.
  • 2018-ம் வருடத்திற்கான MSME (Micro, Small and Medium-sized Enterprises) தினம் இளைஞர்களுக்காக அர்ப்பணிக்கப்பட்டு, தொழில் முனைவோர் மற்றும் இளைஞர் வேலைவாய்ப்பு ஆகிய விடியல்கள் மீது கவனம் செலுத்தும்.
  • MSME 2018-ஆம் ஆண்டிற்கான கருத்துரு - இளைஞர்களின் பரிமாணம் என்பதாகும்.
ஜூன் - 29
தேசிய புள்ளியியல் தினம்
  • கொள்கை வடிவமைப்பிலும் சமூக-பொருளாதாரத் திட்டமிடலிலும் புள்ளியியலிற்கான முக்கியத்துவத்தைப் பற்றி மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்துவது இதன் நோக்கமாகும்.
  • மேலும் மறைந்த பேராசிரியரான பிரசாந்த சந்திரா மகலநோபிஸ் அவர்களின் பங்களிப்பினை அங்கீகரிப்பதும் இதன் நோக்கமாகும்.
  • 2018 ஆம் ஆண்டிற்கான கருத்துரு - “புள்ளியியல் அலுவல்களில் தர உத்தரவாதம் ” என்பதாகும்.

  • 1931 ஆம் ஆண்டில் பேராசிரியர் மகலனோபிஸால் இந்திய புள்ளியியல் நிறுவனம் ஏற்படுத்தப்பட்டது.
  • இது 1959 ஆம் ஆண்டில் பாராளுமன்றச் சட்டத்தின் மூலம் தேசிய அளவில் முக்கியதுவம் வாய்ந்ததாக அறிவிக்கப்பட்டது.
சர்வதேச வெப்ப மண்டல தினம்
  • சர்வதேச வெப்பமண்டல தினம் ஒவ்வொரு வருடமும் ஜூன் 29-ம் தேதி உலகம் முழுவதும் வெப்ப மண்டலப் பகுதிகளில் ஏற்படும் பிரத்தியேகமான சவால்களைப் பற்றிய விழிப்புணர்வை பரப்பவும் உலக வெப்பமண்டலப் பகுதிகளை பாதிக்கும் விவகாரங்களின் கடுமையான பாதிப்புகளைப் பற்றிய விழிப்புணர்வை பரப்பவும் அனுசரிக்கப்படுகின்றது.
  • உலகின் மொத்த நிலப்பரப்பில் 40 சதவிகிதம் வெப்ப மண்டலப் பகுதிகளாகும். தோராயமாக உலகின் 80 சதவிகித பல்லுயிர்த் தன்மையையும், கலாச்சாரம் மற்றும் மொழி ஆகியவற்றின் பல்லுயிர்த் தன்மையையும் வெப்ப மண்டலப் பகுதிகள் கொண்டிருக்கின்றன.
  • A/RES/70/267 என்ற தீர்மானம் 2016 ஆம் ஆண்டு, ஜூன் மாதம் 14-ம் தேதி ஐக்கிய நாடுகள் பொதுச்சபையால் ஏற்றுக் கொள்ளப்பட்டு சர்வதேச வெப்பமண்டலப் பகுதிகளுக்கான தினம் ஏற்படுத்தப்பட்டது.
  • 2014 ஆம் ஆண்டு ஜூன் 29-ம் தேதி நோபல் பரிசு பெற்ற ஆங் சான் சூ கியால் வெளியிடப்பட்ட வெப்பமண்டலப் பகுதிகளின் நிலை என்ற அறிக்கையை வெளியிட்டதற்கான ஆண்டு விழாவை குறிப்பிடுவதற்காக இத்தினம் ஏற்படுத்தப்பட்டது.
ஜூன் - 30
சர்வதேச குறுங்கோள் தினம்
  • 2016 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் ஐக்கிய நாடுகள் பொதுச் சபை A/RES/71/90 என்ற தீர்மானத்தை ஏற்று ஜூன் 30-ம் தேதியை சர்வதேச குறுங்கோள் தினமாக அறிவித்தது.
  • இதற்கான நோக்கம் 1908 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 30-ம் தேதி ரஷ்யக் கூட்டமைப்பில் இருந்த சைபீரியா மீதான துங்குஸ்கா என்ற குறுங்கோள் ஏற்படுத்திய தாக்கம் பற்றியும் குறுங்கோள் தாக்குவதால் ஏற்படும் பாதிப்பு பற்றியும் சர்வதேச அளவில் ஒவ்வொரு வருடமும் பொது விழிப்புணர்வை ஏற்படுத்த அனுசரிக்கப்படுகின்றது.
  • பொதுச் சபையின் முடிவு, விண்வெளி ஆராய்ச்சியாளர்கள் சங்கத்தால் முன்மொழியப்பட்டு, வெளிப்புற விண்வெளியின் அமைதியான பயன்பாடுகள் மீதான குழுவால் அங்கீகரிக்கப்பட்டு ஏற்றுக் கொள்ளப்பட்டது.
சர்வதேச பாராளுமன்றவாதிகள் தினம்
  • முதல்முறையாக 2018 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 30-ம் தேதி சர்வதேச பாராளுமன்றவாதிகள் தினம் கொண்டாடப்படுகின்றது.
  • 1889 ஆம் ஆண்டின் இதே தேதியில் பாராளுமன்றங்களுக்கான உலகளாவிய அமைப்பான சர்வதேச பாராளுமன்ற சங்கம் ஏற்படுத்தப்பட்டது.
  • இந்த தினம் உலகம் முழுவதும் உள்ள பாராளுமன்றங்களையும், வெவ்வேறு பாராளுமன்ற அரசாங்கங்கள் மக்களின் வாழ்க்கையை தினந்தோறும் முன்னேற்றுகின்ற முறைகளையும் கொண்டாடுகின்றது.

  • மேலும் இத்தினம் பாராளுமன்றங்களுக்கு தன்முன்னே உள்ள சவால்களை அடையாளம் காண்பதற்கும் அவற்றை திறமையாக சமாளிப்பதற்கான வழிகளை காண்பதற்கும் ஒரு வாய்ப்பாக அமையும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்