அறிவிக்கப்பட்ட இயற்கை பேரிடர்கள் குறித்த அறிவிப்பு
August 16 , 2026 3 days 65 0
இந்திய அரசு தனது 'அறிவிக்கப்பட்ட இயற்கை பேரிடர்கள்' பட்டியலில் வெப்ப அலைகள் (heatwaves) மற்றும் மின்னல் தாக்குதல் ஆகியவற்றைச் சேர்த்துள்ளது.
2026-31 ஆம் ஆண்டிற்கான மாநில பேரிடர் மீட்பு நிதியம் (SDRF) மற்றும் தேசிய பேரிடர் மீட்பு நிதியம் (NDRF) ஆகியவற்றின் நிர்வாகத்திற்கான செயல்பாட்டு வழிகாட்டுதல்களை மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது.
இதன் மூலம், இந்தியா அதிகாரப்பூர்வமாக 14 வகையான பேரிடர்களை 'அறிவிக்கப் பட்ட தேசிய பேரிடர்களாக' அங்கீகரித்துள்ளது.
இது, பேரிடர் மேலாண்மைச் சட்டம், 2005-இன் கீழ் மாநிலங்கள் நிதி உதவி பெறுவதற்குத் தகுதி அளிக்கிறது.
16-வது நிதிக் குழுவின் பரிந்துரைகளின் அடிப்படையில் இந்த முடிவு எடுக்கப் பட்டு உள்ளது; மேலும், பருவநிலை மாற்றத்தால் ஏற்படும் தீவிர வானிலை நிகழ்வுகள் குறித்த கவலைகள் அதிகரித்து வரும் சூழலில் இது மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இனி மாநிலங்கள் வெப்ப அலை மற்றும் மின்னல் தொடர்பான நிவாரணப் பணிகளுக்குத் தங்கள் மாநில பேரிடர் மீட்பு நிதியம் மற்றும் பேரிடர் தணிப்பு நிதியங்களைப் பயன்படுத்திக்கொள்ளலாம்; மாநில நிதிகள் போதுமானதாக இல்லாத பட்சத்தில் தேசியப் பேரிடர் மீட்பு நிதியத்தின் உதவியையும் பெறலாம்.
இதுவரை, பேரிடர் மேலாண்மைச் சட்டத்தின் கீழ் அறிவிக்கப்பட்ட பேரிடர் பட்டியலில் வெப்ப அலைகள் சேர்க்கப்பட்டிருக்கவில்லை.
அந்தப் பட்டியலில் புயல், வறட்சி, நிலநடுக்கம், தீ விபத்து, வெள்ளம், சுனாமி, ஆலங்கட்டி மழை, நிலச்சரிவு, பனிச்சரிவு, மேக வெடிப்பு (cloudburst), பூச்சித் தாக்குதல் மற்றும் உறைபனி/குளிர் அலை ஆகிய 12 வகைகள் மட்டுமே இடம் பெற்றிருந்தன.
முன்பு, மாநிலங்கள் வெப்ப அலைகளைத் தங்கள் அளவில் அறிவிக்க வேண்டி இருந்ததுடன், அதற்கான நிவாரணப் பணிகளுக்குத் தங்கள் ஆண்டு SDRF ஒதுக்கீட்டில் அதிகபட்சம் 10 சதவீத நிதியை மட்டுமே செலவிட முடிந்தது.
தற்போது வெளியிடப்பட்டுள்ள புதிய அறிவிப்பின்படி, மாநிலங்கள் தங்கள் பேரிடர் மீட்பு மற்றும் தணிப்பு நிதியங்களை முழுமையாகப் பயன்படுத்திக் கொள்ள முடியும்; அத்துடன், பேரிடரை எதிர்கொள்ள மாநில நிதிகள் போதுமானதாக இல்லாத போது தேசிய நிதியத்தின் உதவியையும் பெற முடியும்.
வெப்பம் தொடர்பான நோய்களுக்கான தேசிய செயல் திட்டத்தின் (NAPHRI) அடிப்படையில், பருவநிலை மாற்றம் மற்றும் மனித ஆரோக்கியத்திற்கான தேசியத் திட்டத்தின் (NPCCHH) மூலம் சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகம் வெப்பம் சார்ந்த சுகாதார நடவடிக்கைகளைச் செயல்படுத்தி வருகிறது.
மேலும், நாடு முழுவதும் உள்ள அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்கள் (PHCs) மற்றும் உயர்நிலை மருத்துவமனைகள் உட்பட 51,000-க்கும் மேற்பட்ட மையங்களை உள்ளடக்கிய 'தேசிய வெப்பம் தொடர்பான நோய் மற்றும் இறப்பு கண்காணிப்பு அமைப்பு' (NHRIDS) செயல்பாட்டிற்குக் கொண்டுவரப்பட்டுள்ளது.
SDRF - உள்ளூர் அளவில் விரைவான உதவிகளை வழங்க மாநிலங்கள் 'மாநில பேரிடர் மீட்பு நிதியை' (State Disaster Response Fund) பயன்படுத்துகின்றன.
NDRF - உள்ளூர் நிதிகள் போதுமானதாக இல்லாத பட்சத்தில், மத்திய அரசு 'தேசிய பேரிடர் மீட்பு நிதியிலிருந்து' (National Disaster Response Fund) கூடுதல் நிதியை வழங்குகிறது.
இவை இரண்டும் 'பேரிடர் மேலாண்மைச் சட்டம், 2005'-இன் கீழ் நிறுவப்பட்டன; இவை 2010-ஆம் ஆண்டில் பழைய 'தேசிய பேரிடர் அவசரகால நிதி'க்கு (National Calamity Contingency Fund) மாற்றாக அமைக்கப்பட்டன.
இதற்கான நிதி முழுமையாக மத்திய அரசால், முக்கியமாக குறிப்பிட்ட வரிகள் (cesses) மற்றும் தீர்வைகள் (duties) மூலம் திரட்டப்படுகிறது.
இது இந்தியாவின் பொதுக் கணக்கில் (Public Account of India) வட்டி இல்லாத இருப்பு நிதியாகப் பராமரிக்கப்படுகிறது; இதனால் நாடாளுமன்றத்தின் கூடுதல் ஒப்புதல் இல்லாமலேயே விரைவாக நிதியை அணுக முடிகிறது.
அறிவிக்கப்பட்ட பேரிடர்களுக்குப் பதிலளிக்கும் நடவடிக்கைகளுக்காக மாநில அரசுகளிடம் உள்ள முதன்மையான நிதி 'மாநில பேரிடர் மீட்பு நிதி' (SDRF) ஆகும்.
பொதுப் பிரிவு மாநிலங்கள்/ஒன்றியப் பிரதேசங்களுக்கு SDRF ஒதுக்கீட்டில் 75 சதவீதத்தையும், சிறப்புப் பிரிவு மாநிலங்கள்/ஒன்றியப் பிரதேசங்களுக்கு (வடகிழக்கு மாநிலங்கள், சிக்கிம், உத்தரகண்ட், இமாச்சலப் பிரதேசம், ஜம்மு மற்றும் காஷ்மீர்) 90 சதவீதத்தையும் மத்திய அரசு வழங்குகிறது.
பாதிக்கப்பட்டவர்களுக்கு உடனடி நிவாரணம் வழங்குவதற்கான செலவுகளை ஈடுகட்ட மட்டுமே SDRF பயன்படுத்தப்பட வேண்டும்.
இது சொத்து அல்லது பயிர் இழப்பிற்கான இழப்பீடாகச் செயல்படாது.
கடுமையான தன்மை கொண்ட பேரிடர்களின் போது, SDRF-ல் போதுமான நிதி இல்லாத பட்சத்தில், ஒரு மாநிலத்தின் SDRF-க்குத் துணையாக 'தேசிய பேரிடர் மீட்பு நிதி' (NDRF) செயல்படுகிறது.