இந்தியாவின் முதலாவது பயோ எரிபொருளால் இயங்கும் விமானம்
August 27 , 2018 2676 days 1013 0
ஸ்பைஸ்ஜெட் நிறுவனமானது டேராடூனிலிருந்து டெல்லிக்கு நாட்டின் முதலாவது பயோ எரிபொருளால் இயங்கும் விமானத்தை இயக்கியுள்ளது.
வளர்ச்சியடையும் நாடுகளில் இந்தியா முதலாவதாக பயோ எரிபொருளால் இயங்கும் விமானத்தைச் சோதனை செய்துள்ளது. இதற்கு முன் அமெரிக்கா மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய நாடுகள் பயோ எரிபொருளால் இயங்கும் விமானச் சோதனையை வெற்றிகரமாக செய்துள்ளன.
அதிவேக பயோஎரிபொருள் விமானத்தின் எரிபொருட்களை அறிவியல் மற்றும் தொழிற்துறை ஆராய்ச்சி மையம் (CSIR - Council of Scientific and Industrial Research) மற்றும் டேராடூனின் இந்திய பெட்ரோலிய நிறுவனம் ஆகியவை இணைந்து தயாரித்துள்ளன.
அதிவேக பயோஎரிபொருள் விமானம் அமெரிக்க தரங்கள் சோதனை முறையினால் அங்கீகரிக்கப்பட்டுள்ளது. இது பிராட் & விட்னி மற்றும் பம்பார்டியர் விமானத்தின் வணிகப் பயன்பாட்டிற்கான விவரக்குறிப்பு தரங்களைக் கொண்டுள்ளது.
இந்த பயோ எரிபொருளானது தாவரங்கள் சார்ந்த எண்ணெய், சர்க்கரை, மிருகங்களின் கொழுப்பு மற்றும் உயிரினத் தொகுதி ஆகியவற்றிலிருந்து தயாரிக்கப்படுகிறது.
இந்த பயோ எரிபொருளை தற்பொழுது விமானத்தின் பயன்பாட்டில் உள்ள எஞ்சின்களில் எந்த மாறுதலும் செய்யாமல் பயன்படுத்தலாம்.
பயோ எரிபொருள் விமானப் பயணமானது சுத்தமானது மற்றும் கார்பன் உமிழ்வுகளை குறைக்கும் ஆற்றலுடையது. மேலும் இது விமானப் போக்குவரத்திற்கான செலவைக் குறைக்கும்.