உயர் தெளிவுத் திறன் கொண்ட பூமியைக் கண்காணிக்கும் செயற்கைக் கோள் - சீனா
August 2 , 2018 2779 days 936 0
சீனாவின் ஒளியியல் தொலை உணர் செயற்கைக் கோளான கோஃபென் - 11 (Geofen - 11) என்ற செயற்கைக் கோளை சீனா வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியது.
இது அந்நாட்டின் உயர் தெளிவுத் திறன் கொண்ட பூமியைக் கண்காணிக்கும் திட்டத்தின் ஒரு பகுதியாகும்.
இது சீனாவின் வடக்கு சான்க்ஷி மாகாணத்தில் உள்ள தய்யுன் செயற்கைக் கோள் செலுத்தும் மையத்திலிருந்து லாங் மார்ச் 4B ஏவுகலத்தின் மூலம் ஏவப்பட்டது.
செயற்கைக் கோள்களை ஏந்திச் செல்லும் லாங் மார்ச் ஏவுகலத்தின் ஒட்டு மொத்தமான 282-வது பயணம் இதுவாகும்.
கோஃபென்-11 என்பது துணை அளவி தெளிவுத்திறன் கொண்ட ஒளியியல் செயற்கைக் கோள் ஆகும். இச்செயற்கைக் கோள் சீனாவின் விண்வெளி தொழில்நுட்ப குழுமத்தினால் (CAST - China Academy of Space Technology) வடிவமைக்கப்பட்டுள்ளது.
இந்த ஆண்டில் கோஃபென் வரிசையில் 6வது செயற்கைக் கோள் இதுவாகும். இதற்கு முன் கோஃபென்-1, பெரிய கோஃபென்-5 மற்றும் கோஃபென்-6 ஆகிய மூன்று செயற்கைக் கோள்கள் விண்ணில் செலுத்தப்பட்டன. இந்த அனைத்து செயற்கைக் கோள்களும் சூரிய ஒத்திசைவு சுற்றுவட்டப் பாதையில் நிலை நிறுத்தப்பட்டுள்ளன.
சீனாவின் உயர் தெளிவுத்திறன் கொண்ட பூமியைக் கண்காணிக்கும் அமைப்பானது (CHEUS - China High revolution Earth observation System) 2010ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. 2020ஆம் ஆண்டில் ஒளியியல் மற்றும் செயற்கைத் துளை ரேடார் செயற்கைக் கோள்கள் மூலம் அனைத்து வகையான வானிலை மற்றும் அனைத்து நாட்களுக்குமான வானிலை ஆகியவற்றை இது அளிக்கும்.