உலக சுகாதார அமைப்பின் புற்றுநோய் முகமையின் மருந்து வகைப்பாடு
August 8 , 2026 5 days 61 0
உலக சுகாதார அமைப்பின் (WHO) புற்றுநோய் ஆராய்ச்சி முகமையான புற்றுநோய் ஆராய்ச்சிக்கான சர்வதேச நிறுவனம் (IARC), பொதுவாகப் பயன்படுத்தப்படும் மூன்று மருந்துகளை "மனிதர்களுக்குப் புற்றுநோயை உண்டாக்கும் தன்மை கொண்டவை" (குழு 1) என வகைப்படுத்தியுள்ளது.
ஹைட்ரோகுளோரோதியாசைட் (உயர் இரத்த அழுத்தத்திற்குப் பயன்படுத்தப் படுகிறது), வோரிகோனசோல் (பூஞ்சைத் தொற்றுகளுக்குப் பயன்படுத்தப் படுகிறது) மற்றும் டாக்ரோலிமஸ் (உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை நிராகரிப்பைத் தடுக்கப் பயன்படுத்தப்படும் நோயெதிர்ப்பு ஒடுக்கி) ஆகியன இந்த மருந்துகளாகும்.
ஹைட்ரோகுளோரோதியாசைட் மற்றும் வோரிகோனசோல் ஆகியவை செதிள் உயிரணு தோல் புற்றுநோயின் அபாயத்துடன் தொடர்புடையவை, அதே சமயம் டாக்ரோலிமஸ் ஹாட்ஜ்கின் அல்லாத லிம்போமா மற்றும் மாற்று அறுவை சிகிச்சைக்குப் பிந்தைய நிணநீர் பெருக்கக் கோளாறுகளுடன் தொடர்புடையது.
இந்த மருந்துகள் உலக சுகாதார அமைப்பின் (WHO) அத்தியாவசிய மருந்துகளின் மாதிரிப் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளன, மேலும் அவை உலகெங்கிலும் லட்சக்கணக்கான மக்களால் பயன்படுத்தப்படுகின்றன.
மருத்துவ ஆலோசனையின்றி நோயாளிகள் இந்த மருந்துகளை நிறுத்திவிடக் கூடாது என நிபுணர்கள் தெளிவுபடுத்தியுள்ளனர், ஏனெனில் இந்த வகைப்பாடு சாத்தியமான ஆபத்துகளை மட்டுமே அடையாளம் காட்டுகிறது மற்றும் பரிந்துரைக்கப்பட்ட அளவுகளில் புற்றுநோய் அபாயத்தை அளவிடவில்லை.