குரு கோவிந்த் சிங்கின் 350வது பிறந்த நாள் விழா - நாணயங்கள் வெளியீடு
April 3 , 2018 2997 days 1471 0
பத்தாவது மற்றும் கடைசி சீக்கிய குருவான குரு கோவிந்த் சிங்கின் 350வது பிறந்த தின விழாவை சிறப்பிப்பதற்காக இந்திய ரிசர்வ் வங்கி 350 ரூபாய் மதிப்பிலான நாணயம் ஒன்றை வெளியிட உள்ளது.
35 கிராம் எடை கொண்ட இந்த நாணயம், 50 சதவிகிதம் வெள்ளியையும், 40 சதவிகிதம் தாமிரத்தையும், 5 சதவிகிதம் நிக்கலையும், 5 சதவிகிதம் துத்தநாகத்தையும் கொண்டிருக்கும்.
இந்த நாணயம் மையப் பகுதியில் சிங்க உருவம் கொண்ட அசோகரது தூணையும் அதன் கீழ் சத்திய மேவ ஜயதே என்ற வார்த்தையையும் கொண்டதாக இருக்கும்.
நாணயத்தின் இடது புறத்தில் பாரத் என்ற வார்த்தை தேவநாகரி எழுத்திலும் வலதுபுறத்தில் இந்தியா என்ற வார்த்தை ஆங்கில மொழி எழுத்திலும் அச்சிடப்பட்டு இருக்கும்.
நாணயத்தின் ஓரப் பகுதியில் இடது மற்றும் வலது புறங்களில், சர்வதேச எண்கள் வடிவத்தில் முறையே 1666 மற்றும் 2016 என்ற வருடங்கள் அச்சிடப்பட்டு இருக்கும். குரு கோவிந்த் சிங் டிசம்பர் 22, 1666ம் ஆண்டு பிறந்த பத்தாவது மற்றும் கடைசி சீக்கிய குரு ஆவார்.