குழந்தை இறப்பு விகிதம் – தமிழ்நாட்டில் 17 ஆகக் குறைவு
October 1 , 2017 2867 days 1363 0
தேசிய மாதிரி கணக்கெடுப்பின் சமீபத்திய அறிக்கையின்படி தமிழ்நாட்டில் குழந்தை இறப்பு விகிதம் இரண்டு புள்ளிகள் குறைந்து 17 ஆக பதிவாகியுள்ளது. ஆயிரம் குழந்தைகள் பிறக்கும் போது, அதில் நிகழும் இறப்புகள் கணக்கை வைத்து குழந்தை இறப்பு விகிதம் கணக்கிடப்படுகிறது.
இத்தகைய ஆரோக்கியமான நிலையினை தமிழ்நாடு பெறுவதற்கு மூன்று காரணிகள் முக்கியமாக கருதப்படுகிறது ,
பச்சிளம் குழந்தைகள் பிறக்கும் காலக்கட்டத்தில் எளிமையாகவும் மலிவாகவும் சுகாதார வசதிகள் கிடைக்கிறது.
மாநிலத்தின் பெருமளவு குழந்தைகள் தடுப்பூசி மூலம் பாதுகாப்பு பெறுகின்றன (குறிப்பாக தட்டம்மை , ரூபெல்லா மாற்றும் ரோட்டா வைரஸ் தடுப்பூசி).
அதிக அளவு குழந்தைகள் பெற்றுக்கொள்வது குறைந்துள்ளது [தமிழ்நாட்டில் நூற்றில் எட்டு பெண்கள் (8 out of 100)மட்டுமே இரண்டு குழந்தைகளுக்கு மேல் பெற்றுக் கொள்கின்றனர்]
மாநிலத்தில் பிறக்கும் பச்சிளம் குழந்தைகளுக்கு சிறப்பு தீவிர சிகிச்சைப் பிரிவு (Neonatal ICU - NICU) மற்றும் தாய்மார்களுக்கு விரிவான மகப்பேறு கால அவசர சிகிச்சைப் பிரிவு ஆகியவற்றை மாநிலத்தில் செம்மையாக மேம்படுத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
தமிழ்நாட்டில் 99 சதவீத குழந்தை பிறப்புகள் மருத்துவமனைகள் அல்லது மருத்துவ உதவி மையங்களில் நடைபெறுவதால் , குழந்தைகள் மற்றும் தாய்மார்கள் இறப்பு விகிதம் பெருமளவு குறைக்கப்பட்டுள்ளது.
குழந்தைகள் பிறந்து ஆறு மாதங்களுக்குத் தாய்ப்பால் மட்டும் ஊட்ட வேண்டும் என்று அரசாங்கம் வலியுறுத்தி வருவதால் , மேலும் இது நல்ல விளைவுகளை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.