சர்வதேச நாணய நிதியத்தின் தலைமைப் பொருளாதார வல்லுநர்
October 2 , 2018 2886 days 2326 0
சர்வதேச நாணய நிதியத்தின் (IMF - International Monetary Fund ) தலைமைப் பொருளாதார வல்லுநராக இந்தியாவில் பிறந்த கீதா கோபிநாத் நியமிக்கப்பட்டுள்ளார்.
தற்போது சர்வதேச நாணய நிதியத்தின் தலைமைப் பொருளாதார வல்லுநராக பதவி வகிக்கும் மவுரீஸ் ஆப்ஸ்பீல்ட் 2018 ஆம் ஆண்டு டிசம்பரில் ஓய்வு பெற்ற பின்பு, அவருக்கு அடுத்ததாக கீதா கோபிநாத் பொறுப்பேற்க உள்ளார்.
சர்வதேச நாணய நிதியத்தின் தலைமைப் பொருளாதார வல்லுநராக பதவி வகித்த ரிசர்வ் வங்கியின் முன்னாள் கவர்னர் ரகுராம் ராஜனுக்குப் பின், 2வது இந்தியராக அப்பதவிக்கு கீதா கோபிநாத் நியமிக்கப்பட்டுள்ளார்.
இவர் கேரள முதலமைச்சரின் கௌரவ பொருளாதார ஆலோசகராக பணியாற்றுகிறார். மேலும் ஜி-20 நாடுகள் தொடர்பான பிரச்சனைகளுக்கு இந்தியாவின் நிதி அமைச்சகத்திற்கு ஆலோசனை வழங்கும் குழுவில் கீதா கோபிநாத் பணியாற்றினார்.
2014 ஆம் ஆண்டில் 45 வயதுக்குட்பட்ட 25 நபர்கள் அடங்கிய பொருளாதார வல்லுநருக்கான சர்வதேச நாணய நிதியத்தின் பட்டியலில் கீதா கோபிநாத் இடம் பிடித்தார். மேலும் இவர் 2011 ஆம் ஆண்டில் உலகப் பொருளாதார மன்றத்தினால் ‘உலகத்தின் இளம் தலைவராக’ தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.