சிவப்பு நிலப்பட ஏடு மற்றும் CFLOWS – சென்னை: வெள்ள முன்னெச்சரிக்கை
November 3 , 2019 2390 days 1022 0
இந்தியத் துணைக் குடியரசுத் தலைவர் சமீபத்தில் சென்னையில் ‘சிவப்பு நிலப்பட ஏடு செயல் திட்ட வரைபடம்’ மற்றும் கடலோர வெள்ள எச்சரிக்கை அமைப்புச் செயலி (Coastal Flood Warning System App - CFLOWS) ஆகியவற்றைத் தொடங்கி வைத்தார்.
சிவப்பு நிலப்பட ஏடு என்பது சென்னையில் திறம்பட வெள்ளத்தைத் தடுப்பதற்கு தமிழக அரசிற்கு உதவுவதற்காக மத்திய புவி அறிவியல் அமைச்சகத்தால் தயாரிக்கப்பட்ட இதே வகையைச் சேர்ந்த முதலாவது மதிப்பீடு ஆகும்.
இந்த நிலப்பட ஏடானது வெவ்வேறு மழைக் காலங்களுக்கான சாத்தியமான நிகழ்நேர நிலவரங்களைக் கொண்டிருக்கும். இது வெள்ளத்தைத் தடுத்தல், மீட்பிற்கான தயார் நிலை, அதற்கான செயல்பாடுகள் மற்றும் மேலாண்மை அம்சங்கள் ஆகியவற்றை நோக்கங்களாகக் கொண்டுள்ளது.
CFLOWS-CHENNAI என்பது ஒரு முழுமையான, இணைய புவியியல் தகவல் முறைமையை அடிப்படையாகக் கொண்ட ஒரு தீர்வு சார்ந்த ஆதரவு அமைப்பாகும். வெள்ளத்திற்கு முன் அவற்றைத் தடுத்தல் குறித்த திட்டமிடல் நடவடிக்கைகளுக்காகவும் நிவாரணப் பணிகள் போன்ற அம்சங்களுக்காகவும் நிகழ்நேரத்தில் இதைப் பயன்படுத்தலாம்.