தகவல் தொழில்நுட்பச் சட்டத்தின் கீழ் தேசிய மக்கள்தொகை பதிவேட்டுத் தரவு தளங்கள் மற்றும் இணையதளங்கள்
November 20 , 2022 1306 days 519 0
பத்தாண்டுகளுக்கு ஒருமுறை மேற்கொள்ளப்படும் மக்கள் தொகை கணக்கெடுப்பு மற்றும் தேசிய மக்கள்தொகைப் பதிவேடு (NPR) தொடர்பான இணையதளங்கள் மற்றும் செயலிகள், 2008 ஆம் ஆண்டு தகவல் தொழில்நுட்பச் சட்டத்தின் கீழ் "பாதுகாக்கப் பட்ட அமைப்பு" அல்லது "முக்கியத் தகவல் உள்கட்டமைப்பு" என அறிவிக்கப் பட்டுள்ளன.
மக்கள்தொகை கணக்கெடுப்பு விண்ணப்பங்கள், தேசிய மக்கள்தொகைப் பதிவேட்டின் தரவு தளம் அல்லது இந்தியத் தலைமைப் பதிவு அலுவலகத்தின் (RGI) தரவு மையங்கள் ஆகியவற்றுடன் தொடர்புடைய தரவுகளைச் சேதப்படுத்துதல் அல்லது அங்கீகரிக்கப்படாத வகையிலான அணுகல் ஆகியவற்றிற்குப் பத்து ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்படும் என்று இந்த அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.
தகவல் தொழில்நுட்பச் சட்டத்தின் 70வது பிரிவானது, அதிகாரப்பூர்வ அரசிதழில் வெளியிடப்படும் அறிவிப்பு மூலம், முக்கியமான தகவல் உள்கட்டமைப்பு மையத்தில் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ தாக்கத்தினை ஏற்படுத்தும் எந்தவொரு கணினி வளத்தையும் பாதுகாக்கப்பட்ட அமைப்பாக அரசாங்கம் அறிவிக்கலாம் என்று கூறுகிறது.