பணமற்ற பரிவர்த்தனைகள் – மின்னணு தேசிய விவசாயச் சந்தை
December 19 , 2017 2961 days 1237 0
மின்னணு தேசிய விவசாய சந்தையின் [electronic National Agriculture Market (e-NAM)] தேசிய இணைய வாயிலோடு இணைக்கப்பட்ட 470 மண்டிகள் நேரடியான பணமற்ற பரிவர்த்தனை மேற்கொள்ள தனியார் வங்கியான ஐசிஐசிஐ வங்கியை அரசு ஈடுபடுத்தியுள்ளது.
தற்சமயம், இந்த விவசாயச் சந்தையில் பங்கேற்பவர்கள் தங்களது பணப்பரிவர்த்தனைகளை மரபார்ந்த முறைகளான வங்கிக் கிளைகள், பற்று அட்டைகள் மற்றும் இணைய வங்கிச் சேவைகள் மூலம் செய்து வருகின்றனர்.
ஐசிஐசிஐ வங்கி பீம் (Bharat Interface for Money) மற்றும் ஒருங்கிணைந்த பணம் செலுத்து தளம் (Unified Payments Interface - UPI) ஆகிய வசதிகளை இந்த மின்னணு தேசிய விவசாயச் சந்தையில் பணமற்ற பரிவர்த்தனைகளை மேற்கொள்ள ஈடுபடுத்தும்.
“ஒரே தேசம் ஒரே சந்தை” என்ற நிலைக்கு முன்னேறும் வகையில் இந்த e-NAM இணைய வாயில் விவசாயிகளுக்கு தங்கள் பொருட்களுக்கு சிறந்த விலை நிர்ணயம் மற்றும் சந்தையில் போட்டியையும் வெளிப்படைத் தன்மையையும் உறுதி செய்து விவசாய சந்தைகளை புரட்சிகரமாக புதுமைப்படுத்துவதற்கு திட்டமிடுகிறது.