பீகார் மற்றும் கேரளாவில் சிறப்பு நீதிமன்றங்கள் - உச்ச நீதிமன்றம்
December 13 , 2018 2750 days 913 0
தற்போது பதவியில் இருக்கின்ற மற்றும் முன்பு பதவியில் இருந்த பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்களுக்கு எதிராக நிலுவையில் உள்ள குற்றவியல் வழக்குகளை விசாரிப்பதற்காக பீகார் மற்றும் கேரளா மாநிலங்களின் ஒவ்வொரு மாவட்டங்களிலும் சிறப்பு நீதிமன்றங்களை அமைக்க உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதியான ரஞ்சன் கோகாய், நீதியரசர்கள் எஸ்.கே. கவுல் மற்றும் கே.எம். ஜோசப் ஆகியோரைக் கொண்ட அமர்வு இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளது.
உச்ச நீதிமன்றமானது பாராளுமன்ற/சட்டமன்ற உறுப்பினர்களுக்கு எதிரான வழக்குகளை விசாரிப்பதற்காக இந்த இரு மாநிலங்களிலும் உள்ள மாவட்டங்களில் தேவைக்கேற்ப பல நீதிமன்றங்களை அமைப்பதற்கான உரிமையை வழங்கியுள்ளது.
மேலும் உச்ச நீதிமன்றமானது ஏற்கெனவே அமைக்கப்பட்டுள்ள சிறப்பு நீதிமன்றங்களில் உள்ள வழக்குகளை அந்தந்த எல்லைக்குட்பட்ட மாவட்டங்களுக்கு திருப்பி அனுப்புமாறு உயர் நீதிமன்றங்களுக்கு உத்தரவிட்டுள்ளது.