இரண்டு ஆண்டுகள் பதவிக் காலம் கொண்ட மத்தியப் புலனாய்வு விசாரணை அமைப்பின் (Central Bureau of Investigation - CBI) தலைவராக ஐபிஎஸ் அதிகாரி ரிஷி குமார் சுக்லா நியமிக்கப்பட்டிருக்கின்றார்.
இவரது பதவிக்காலம் பிப்ரவரி 02-ம் தேதியிலிருந்து தொடங்குகின்றது. இவர் தன் பதவியை பிப்ரவரி 04-ம் தேதியன்று ஏற்றுக் கொண்டார்.
இவர் தற்சமயம் போபாலில் உள்ள மத்தியப் பிரதேச காவல்துறை வீட்டுவசதி கழகத்தின் தலைவராக பணியாற்றிக் கொண்டிருக்கின்றார்.
ரிஷி குமாரின் நியமனம் பிரதமர் தலைமையிலான தேர்வுக் குழுவின் பரிந்துரையின் அடிப்படையில் நியமனங்களுக்கான அமைச்சரவைக் குழுவால் ஒப்புதலளிக்கப்பட்டது.
சிபிஐ இயக்குநர் தேர்வுக் குழுவானது பிரதமர், இந்தியாவின் தலைமை நீதிபதி மற்றும் மக்களவையின் எதிர்க்கட்சித் தலைவர் ஆகியோரைக் கொண்டதாகும்.
சிபிஐ இயக்குநர் தேடல் குழு மத்திய ஊழல் தடுப்பு ஆணையரைத் தலைவராகவும் இதர ஊழல் தடுப்பு ஆணையர்கள், உள்துறைச் செயலாளர், அமைச்சரவைச் செயலகத்தில் உள்ள ஒருங்கிணைப்பு மற்றும் பொதுமக்கள் குறைதீர்ப்புத் துறையின் செயலாளர் ஆகியோரை உறுப்பினர்களாகவும் கொண்டிருக்கும்.