15-வது ஆசிய-பசிபிக் கணினி அவசரகால மீட்புக்குழு மாநாடு
November 16 , 2017 3076 days 1293 0
15-வது ஆசிய-பசிபிக் கணினி அவசரகால மீட்புக்குழு மாநாடு (Asia-Pacific Computer Emergency Response Team – APCERT) புதுதில்லியில் நடைபெற்றது.
இது இந்தியா மற்றும் தென் ஆசியாவில் நடைபெறும் முதல் APCERT மாநாடாகும். இந்த மாநாட்டின் கருத்துரு “டிஜிட்டல் பொருளாதாரத்தில் நம்பிக்கையை கட்டமைத்தல்”.
மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் கீழ் செயல்படும் இந்திய கணினி மீட்புக்குழு (Indian Computer Emergency Response Team – CERT-In) இந்த மாநாட்டை ஏற்பாடு செய்துள்ளது.
22 ஆசிய-பசுபிக் டிஜிட்டல் பொருளாதார நாடுகளைச் சேர்ந்த கணினி அவசரகால மீட்புக்குழுக்களோடு அமெரிக்காவும், ஐரோப்பிய நாடுகளும், தொழில் மற்றும் கல்வித் துறை வல்லுனர்களும் இதில் பங்கேற்றனர்.
ஆசிய-பசுபிக் பிராந்தியத்தின் அடுத்த இரண்டு ஆண்டுகளுக்கான கணினி இணையப் பாதுகாப்பு சார்ந்த நிகழ்ச்சிநிரலை (Agenda) வடிவமைப்பதற்கு ஏற்படுத்தப்பட்ட வழிகாட்டு குழுவிற்கு (Steering Commitee) ஆஸ்திரேலியா,சீனா,ஜப்பான்,கொரியா,மலேசியா, மற்றும் தைவான் போன்ற நாடுகளோடு இந்தியாவும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.
உலகளாவிய ஒத்துழைப்பின் மூலம் ஆசிய பசுபிக் பிராந்தியத்தில் பாதுகாப்பான, சுத்தமான, நம்பத்தகு இணைய வெளியை (Cyber Space) உருவாக்க உதவுவதே இந்த மாநாட்டின் நோக்கமாகும்.
கைபேசி மற்றும் சமூக ஊடகங்களில் இணைய பாதுகாப்பை கையாளுவதற்கான சிறந்த பயிற்சிகள், டிஜிட்டல் முறையில் பரிணமிக்கும் பொருளாதார நாடுகளில் நம்பிக்கையை வளர்ப்பதற்கான தொழிற்நுட்பம் மற்றும் கருவிகள், கணினி அவசரகால மீட்புக்குழுக்களின் உத்திகளைச் சார்ந்த நிகழ்கால தலைப்புகள் போன்றவற்றின் மீது இம்மாநாடு நடத்தப்பட்டது.