குஜராத்தின் 'கிரேட்டர் கிர்' (Greater Gir) நிலப்பரப்பில் மேற்கொள்ளப்பட்ட 16-வது சிங்கங்கள் எண்ணிக்கை மதிப்பீட்டில் (2025 ஆம் ஆண்டு மே மாதம்), ஆசியச் சிங்கங்களின் எண்ணிக்கை 891-ஆக அதிகரித்துள்ளது பதிவு செய்யப்பட்டுள்ளது.
இது 2020-ஆம் ஆண்டில் இருந்த 674 சிங்கங்களின் எண்ணிக்கையிலிருந்து 32 சதவீத வளர்ச்சியைக் குறிக்கிறது.
2015-ஆம் ஆண்டில் 523-ஆக இருந்த எண்ணிக்கை 2025-ஆம் ஆண்டில் 891-ஆக உயர்ந்துள்ளது.
இது ஒரு தசாப்தத்தில் 70 சதவீதத்திற்கும் அதிகமான அதிகரிப்பைக் காட்டுகிறது.
வரலாற்று ரீதியாக, ஆசியச் சிங்கங்கள் பாரசீகம் மற்றும் மெசொப்பொத்தேமியா முதல் இந்தியத் துணைக்கண்டம் வரையிலான ஆசியப் பகுதிகளில் வாழ்ந்து வந்தன.
அதிகப்படியான வேட்டை மற்றும் வாழ்விட இழப்பு காரணமாக, 1900-களின் முற்பகுதியில் கிர் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் சுமார் 40 முதல் 60 சிங்கங்கள் மட்டுமே எஞ்சியிருந்தன.
இந்தியா 1965-ஆம் ஆண்டில் கிர் வனவிலங்கு சரணாலயத்தை நிறுவியது.
ஜுனாகத் சமஸ்தானம் (அன்றைய சுதேச அரசு) இந்த இனத்தைப் பாதுகாத்த முதல் அரசுகளில் ஒன்றாகும்.
கடுமையான சட்டப் பாதுகாப்பு, சிங்கங்களின் இரையாக அமையும் விலங்குகளின் எண்ணிக்கையை மீட்டெடுத்தல் மற்றும் நிலப்பரப்பு அளவிலான பாதுகாப்பு அணுகுமுறை ஆகியவை இந்த அதிகரிப்புக்குக் காரணமென அரசு தெரிவித்துள்ளது.
புள்ளிமான், சாம்பர் மான், நீல்காய் (நீலான்) மற்றும் காட்டுப்பன்றி போன்ற காட்டு விலங்குகள் தற்போது சிங்கங்களின் உணவில் சுமார் 74 சதவீதத்தைப் பங்களிக்கின்றன.
குஜராத்தில் உள்ள பர்தா (Barda) வனவிலங்கு சரணாலயத்திற்குச் சிங்கங்கள் மீண்டும் திரும்பியது இந்த விரிவாக்கத்தின் குறிப்பிடத்தக்க பகுதியாகும்.
எண்ணிக்கை அதிகரித்ததால், சிங்கங்கள் புதிய பகுதிகளுக்குப் பரவின; இது கிர் தேசியப் பூங்கா மற்றும் கிர்னார், மிதியாலா, பானியா மற்றும் பர்தா போன்ற வனவிலங்குச் சரணாலயங்கள் உட்பட மேலும் பல பாதுகாக்கப்பட்ட பகுதிகளை உருவாக்கத் தூண்டுகோலாக அமைந்தது.
பாதுகாப்பு முயற்சியில் சமூகப் பங்கேற்பும் முக்கியப் பங்காற்றியுள்ளது.
2020-ஆம் ஆண்டில் தொடங்கப்பட்ட சிங்கப் பாதுகாப்புத் திட்டமானது, தற்போது சௌராஷ்டிரா பிராந்தியத்தில் சுமார் 60,000 சதுர கிலோமீட்டர் பரப்பளவை உள்ளடக்கியுள்ளது.
ஆசியச் சிங்கம் என்பது 'பாந்தெரா லியோ பெர்சிகா' (Panthera leo persica) என்று அறிவியல் ரீதியாக அழைக்கப்படும் சிங்கத்தின் ஒரு துணை இனமாகும்.
சிங்கம் (பாந்தெரா லியோ) என்பது ஒரு பெரிய, வலிமையான மற்றும் உணவுச் சங்கிலியின் முதன்மையாக உள்ள வேட்டையாடும் விலங்கு ஆகும்; இது புலிக்கு அடுத்தபடியாக உலகின் இரண்டாவது மிகப்பெரிய பூனை இனமாகும்.
இதன் இயற்கையான காட்டு இனம் இந்தியாவில், குறிப்பாக குஜராத்தின் சௌராஷ்டிரா பிராந்தியத்தில் மட்டுமே எஞ்சியுள்ளது.
இந்த இனம் IUCN-இன் செந்நிறப் பட்டியலில் அருகி வரும் இனம் எனப் பட்டியலிடப்பட்டுள்ளது; உலகளவில் அங்கீகரிக்கப்பட்ட ஏழு வகையான பெரிய பூனை இனங்களின் பட்டியலில் புலி, சிங்கம், சிறுத்தை, பனிச்சிறுத்தை, சீட்டா, ஜாகுவார் மற்றும் பூமா ஆகியவை அடங்கும்.
சர்வதேச பெரும் பூனை இனங்களின் கூட்டமைப்பால் (IBCA) உலகளவில் அங்கீகரிக்கப் பட்ட இந்த ஏழு முக்கிய பெரும் பூனை இனங்களில் ஐந்து இனங்கள் இந்தியாவில் காணப்படுகின்றன; ஜாகுவார் மற்றும் பூமா ஆகிய இரண்டு இனங்கள் மட்டுமே இங்கு இல்லை.