'நகர்ப்புற பருவநிலைப் பின்னடைவை அளவிடுதல்: CapaCITIES மரபு மற்றும் முன்னோக்கிய பாதை' என்ற நிகழ்வு புது தில்லியில் நடைபெற்றது என்பதுடன் இதில் மூன்று CapaCITIES அறிவுசார் தயாரிப்புகள் வெளியிடப்பட்டன.
இந்தியாவில் குறைந்த கார்பன் மற்றும் பருவநிலைத் திறன் கொண்ட நகர மேம்பாட்டிற்கான திறன் மேம்பாட்டுத் திட்டம் (CapaCITIES) 2016 ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டது.
பருவநிலைத் திறன் கொண்ட நகர்ப்புற மேம்பாட்டை ஊக்குவிப்பதற்காக, இந்தியா மற்றும் பூட்டானில் உள்ள சுவிட்சர்லாந்து தூதரகத்தால் இத்திட்டத்திற்கு நிதியளிக்கப் பட்டது.
நகரங்களில் பருவநிலைத் திட்டமிடலை வலுப்படுத்துவதன் மூலம் இந்தியாவின் 2070 ஆம் ஆண்டிற்கான நிகர பூஜ்ஜிய உமிழ்வு இலக்கை இத்திட்டம் ஆதரிக்கிறது.
இது கோயம்புத்தூர், திருச்சிராப்பள்ளி, திருநெல்வேலி, அகமதாபாத், ராஜ்கோட், வதோதரா, உதய்பூர் மற்றும் சிலிகுரி உள்ளிட்ட 8 நகரங்களுக்கு ஆதரவளித்துள்ளது.
இது நிகர-பூஜ்ஜிய பருவநிலைத் திறன் நகர செயல் திட்டங்களை (CRCAPs) உருவாக்கியது, நகரங்களில் பருவநிலை செயல் பிரிவுகளை நிறுவியது, 1,000க்கும் மேற்பட்டவர்களுக்குப் பயிற்சியளித்தது, மேலும் பருவநிலைத் திட்டமிடல் கட்டமைப்புகள் மூலம் 35 க்கும் மேற்பட்ட நகரங்களுக்கு ஆதரவளித்தது.
மிதக்கும் சூரிய மின் நிலையங்கள், சூரிய ஒளி மின்சாரப் பேருந்து மின்னேற்ற நிலையங்கள், வெள்ள முன்னெச்சரிக்கை அமைப்புகள், ஏரி சீரமைப்பு, பசுமைப் போக்குவரத்து மண்டலங்கள் மற்றும் நகர்ப்புற காடு வளர்ப்புத் திட்டங்கள் போன்ற நகர்ப்புறத் தீர்வுகளை இத்திட்டம் செயல்படுத்தியது.
நிலையான நகர்ப்புற மேம்பாட்டை ஆதரிப்பதற்காக வெளியிடப்பட்ட மூன்று அறிவு சார் தயாரிப்புகள்: நிகர-பூஜ்ஜிய பருவநிலைத் திறன் நகரங்களுக்கான வழிமுறை கருவித் தொகுப்பு, நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கான (ULB) ஆற்றல் மாற்ற வழி காட்டி புத்தகம் மற்றும் குறைந்த கார்பன் நிதி வெள்ளை அறிக்கை ஆகியனவாகும்.