INS சுகன்யா கூட்டு கடற் பயிற்சிக்காக இந்தோனேஷியா சென்றடைந்தது
October 26 , 2017 3154 days 1352 0
ஒருங்கிணைந்த ரோந்தின் (CORPAT – Coordinated patrol) 30வது பதிப்பு மற்றும் இந்தியா – இந்தோனேசியா கடற்படைகளுக்கு இடையேயான 3வது இருதரப்புப் பயிற்சியில் கலந்து கொள்வதற்காக INS சுகன்யா இந்தோனேஷயாவின் பெலவான் வந்தடைந்தது.
அக்டோபர் 24 முதல் நவம்பர் 5 வரை திட்டமிடப்பட்டுள்ள இருதரப்புப் பயிற்சியானது இந்தியப் பெருங்கடலின் விளிம்பில் அமைந்துள்ள நாடுகளுடன் நெருக்கமான கடல்வழி உறவுகளை வளர்ப்பதற்கான இந்தியாவினுடைய அர்ப்பணிப்பின் செயல்விளக்கம் ஆகும்.
2002 ஆம் ஆண்டிலிருந்து இரண்டு கடற்படைகளும் வருடத்திற்கு இரண்டு முறை சர்வதேசக் கடல் எல்லைக்குட்பட்ட (IMBL) எல்லைக்குச் சம்பந்தப்பட்ட பக்கங்களில் ஒருங்கிணைந்த ரோந்தை (CORPAT) நடத்திவருகின்றன.
கடற்படைகளுக்கு இடையே பரஸ்பர புரிந்துணர்வு மற்றும் இடைத்தொடர்பை மேம்படுத்துவது, சட்டவிரோத நடவடிக்கைகளில் ஈடுபட்ட கப்பல்களின் மீது சட்டரீதியாக நடவடிக்கை எடுத்தல், தேடல் மற்றும் மீட்பு நடிவடிக்கைகளை நடத்துதல் மற்றும் கடல் மாசுபாட்டுக்கு எதிரான நடவடிக்கைகளை மேற்கொள்ளல் போன்றவையே ஒருங்கிணைந்த ரோந்தின் (CORPAT) நோக்கமாகும்.
சுகன்யா வகுப்பு ரோந்து கப்பலானது பெரியவகை கப்பலாகும். இது இந்திய கடற்படையிடம் செயலில் உள்ள கடல்ரோந்து கப்பலாகும்.
தற்போது இந்த வகுப்பின் கீழ் 3 முன்னணிக் கப்பல்கள் உள்ளன. அவை INS சுகன்யா, INS சுபத்ரா மற்றும் INS சுவர்ணா ஆகும்.