அடையாளம் தெரியாத நபரின் அடையாளம் காண்பதற்கான ஆதார் தரவு
May 25 , 2025 20 days 92 0
இறந்தவரின் கைரேகைகளை ஆதார் தரவுத் தளத்துடன் ஒப்பிட்டு, ஒரு அடையாளம் தெரியாத நபரின் அடையாளத்தைக் கண்டறியும் நோக்கத்திற்காக காவல்துறைக்கு மக்கள்தொகை சார்ந்தத் தகவல்களின் அணுகலை வழங்குவதற்கான சாத்தியக் கூறு இல்லை என்று இந்தியத் தனித்துவ அடையாள ஆணையம் (UIDAI) கூறியுள்ளது.
2016 ஆம் ஆண்டு ஆதார் (நிதி மற்றும் பிற மானியங்கள், சலுகைகள் மற்றும் இதர சேவைகளை இலக்காகக் கொண்டது) சட்டம் ஆனது இத்தகவல்களைப் பகிர்வதில் கடுமையான கட்டுப்பாடுகளை விதிக்கிறது.
பயனாளிகளுக்கு அரசாங்க மானியங்கள், சலுகைகள் மற்றும் சேவைகளை இலக்கு நிர்ணயம் அடிப்படையில் வழங்குவதை உறுதி செய்வதே ஆதார் சட்டத்தின் முக்கிய நோக்கமாகும்.
ஆதார் சட்டத்தின் VI ஆம் அத்தியாயம் ஆனது, தனிப்பட்டப் பதிவுகள் தொடர்பாக கடுமையான இரகசியத்தன்மையைப் பேணுமாறு வேண்டி UIDAI ஆணையத்தினைக் கோருகிறது.
இச்சட்டத்தின் 29(1) பிரிவு ஆனது, சட்டத்தின் கீழ் சேகரிக்கப்பட்ட அல்லது உருவாக்கப் பட்ட எந்தவொரு முக்கிய உயிரியளவியல் தகவலும் எந்த ஒரு காரணத்திற்காகவும் யாருடனும் பகிரப்படக்கூடாது என்று திட்டவட்டமாகக் கூறுகிறது.
இதன் 33(1) பிரிவு ஆனது, சம்பந்தப்பட்ட நபர் மற்றும் UIDAI ஆணையம் ஆகியவற்றின் பரிசீலனையினைப் பெற்ற பிறகு, உயர் நீதிமன்றம் அல்லது உச்ச நீதிமன்றம் மட்டும் அத்தகைய வெளிப்படுத்தலுக்கான ஒரு குறிப்பிட்ட உத்தரவை பிறப்பித்தால், அதன் பின் மட்டுமே அடையாளத் தகவல் அல்லது அங்கீகாரப் பதிவுகளை (ஆனால் முக்கிய உயிரியளவியல் தகவல் அல்ல) வெளியிட முடியும் என்று கூறுகிறது.