அம்பாந்தோட்டை துறைமுகம்: இலங்கை - சீனா உடன்படிக்கை கையெழுத்து
July 30 , 2017 2831 days 1550 0
இலங்கையில் உள்ள அம்பாந்தோட்டை துறைமுக மேம்பாடு, பயன்பாடு தொடர்பாக இலங்கை - சீனா இடையே 99 ஆண்டு காலத்திற்கான உடன்படிக்கை கையெழுத்தானது.
இந்த ஒப்பந்தப்படி, துறைமுகத்தில் 70 சதவீதப் பங்கு சீன அரசுக்குச் சொந்தமான வணிகத் துறைமுக நிறுவனத்துக்கு அளிக்கப்படும். குத்தகை அடிப்படையில் 99 ஆண்டு காலத்துக்கு இந்த ஒப்பந்தம் நடைமுறையில் இருக்கும்.
இலங்கையின் முன்னாள் அதிபர் மஹிந்த ராஜபட்சேவின் ஆட்சிக் காலத்தில் அவரது சொந்த மாவட்டமான அம்பாந்தோட்டையில் சர்வதேச தரத்தில் துறைமுகம் அமைக்க முடிவானது. சீன அரசு நிறுவனத்தின் உதவியுடன் முதல் கட்ட கட்டுமானம் 2008-ஆம் ஆண்டு தொடங்கி 2010-இல் நிறைவடைந்தது.
இதன் மேம்பாட்டில் சீனா மிக மும்முரமாக ஆர்வம் காட்டி வந்தது. மேலும், சீன கடற்படைக் கப்பல்கள் அம்பாந்தோட்டை துறைமுகத்தைப் பயன்படுத்தும் என்ற அச்சம் எழுந்தது. இதைத் தொடர்ந்து, துறைமுகத் திட்டத்தின் இரண்டாம் கட்ட விரிவாக்கம் மாற்றி அமைக்கப்பட்டது.
இந்த நிலையில், இலங்கையில் ஆட்சி மாறியதும், பிரதமர் ரணில் விக்ரமசிங்க சீனாவுடன் பேச்சுவார்த்தை நடத்தி, புதிய உடன்படிக்கை ஏற்படுத்தினார்.