அரக்கோணத்தைப் பொதுத் தொகுதியாக அறிவிக்க கோரிய வழக்கு நிராகரிப்பு
October 19 , 2017 3076 days 1635 0
அட்டவணை சமூக வேட்பாளர்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள அரக்கோணம் தொகுதியை பொதுத் தொகுதியாக அறிவிக்குமாறு இந்திய தேர்தல் ஆணையம் மற்றும் மாநில தேர்தல் ஆணையத்தை அறிவுறுத்த வேண்டி தொடுக்கப்பட்ட மனுவை உயர் நீதிமன்றம் நிராகரித்துள்ளது.
இந்த நீதிமன்றத் தீர்ப்பு இந்திய அரசியல் அமைப்புச் சட்டம் விதி 329(a) இன் படி வழங்கப்பட்டுள்ளது.
விதி 329(a) ன்படி விதி 327, அல்லது விதி 328 ன் கீழ் மேற்கொள்ளப்படும் தொகுதிகளுக்கான இட ஒதுக்கீடு அல்லது தொகுதிகளில் மறுவரையறை குறித்த எந்த ஒரு சட்டத்தின் செல்லுப் படித்தன்மையைப் பற்றியும் எந்த நீதிமன்றத்திலும் கேள்வி எழுப்ப முடியாது.
தொகுதி மறுவரையறை
ஒரு நாட்டில் உள்ள சட்டமன்ற தொகுதிகளுடைய பகுதிகளின் எல்லையை அல்லது வரம்புகளை நிர்ணயிக்கும் செயல்பாடே தொகுதி வரையறுத்தல் எனப்படும்.
தொகுதிகள் மறுவரையறையை மறுவரையறை குழு (Delimitation Commission) அல்லது எல்லைகள் குழு (Boundary Commission) மேற்கொள்கிறது.
பத்து ஆண்டுகளுக்கு ஒருமுறை தொகுதிகள் மறுவரையறை குழு அமைக்கப்படுகிறது. இதுவரை இந்தியாவில் (1952, 1963, 1973, 2002) 4 முறை இந்த குழு ஏற்படுத்தப்பட்டுள்ளது.
அரசியலமைப்புச் சட்டத்தின் விதி 82-ன் கீழ் தொகுதிகள் மறுவரையறைக் குழு தோற்றுவிக்கப் படுகிறது.
விதி 82-ன் கூறுகளின் படி ஒவ்வொரு மக்கள் தொகை கணக்கெடுப்பின் பிறகும் பாராளுமன்றத்தால் தொகுதிகள் மறுவரையறைச்சட்டம் பாராளுமன்றத்தால் இயற்றப்படும். இந்த சட்டம் செயல்முறைக்கு வந்த பின்னர் மத்திய அரசு மறுவரையறை குழுவை அமைக்கும்.
இந்த குழுவினுடைய உத்தரவு நகல்கள் மக்களவையிலும், சம்பந்தப்பட்ட சட்டமன்றங்களிலும் சமர்ப்பிக்கப்படும். ஆனால் அம்மன்றங்களுக்கு எந்த திருத்தத்தையும் மேற்கொள்ள அனுமதி கிடையாது.
இந்திய மறுவரையறை குழு இந்தியாவில் உயர் அதிகாரம் பெற்ற அமைப்பாகும். இவற்றின் உத்தரவுகள் சட்டத்தின் செயலாக்கத்தை உடையது (Force of law). இதன் உத்தரவுகள் பற்றி எந்த நீதிமன்றத்தாலும் கேள்வி எழுப்ப இயலாது.