இந்தியப் பகுதியின் மீதான காலநிலை மாற்றம் குறித்த முதலாவது ஆய்வு
June 19 , 2020 2110 days 1352 0
மத்தியப் புவி அறிவியல் துறை அமைச்சகமானது இந்த அறிக்கையை வெளியிட்டு உள்ளது.
இது எதிர்வரும் நூற்றாண்டில் இந்தியத் துணைக் கண்டத்தில் புவி வெப்பமடைமாதலின் தாக்கம் குறித்த இந்தியாவின் முதலாவது தேசியக் கணிப்பு ஆகும்.
இது 2022 ஆம் ஆண்டில் தயாராகும் என்று எதிர்பார்க்கப்படும் காலநிலை மாற்றம் குறித்த அரசாங்கங்களுக்கிடையேயான குழுவின் (IPCC - Intergovernmental Panel on Climate Change) அடுத்த அறிக்கையின் ஒரு பகுதி ஆகும்.
இந்தக் கணிப்புகள் புனேவில் உள்ள இந்திய வெப்பமண்டல வானவியல் மையத்தில் உருவாக்கப்பட்டுள்ள காலநிலைக் கணிப்பு மாதிரியை அடிப்படையாகக் கொண்டதாகும்.
இது தற்போதைய நிலையில் மனித நடவடிக்கைகள் பசுமை இல்ல வாயுக்களைத் தொடர்ந்து உமிழ்ந்து கொண்டிருந்தால் இந்த நூற்றாண்டின் இறுதியில் உலகளாவிய சராசரி மேற்பரப்பு வெப்பநிலையானது 5° செல்சியஸ் என்ற அளவில் அதிகரிக்கும் என்பதைக் குறிக்கின்றது.
இந்தியாவின் சராசரி மேற்பரப்பு வெப்பநிலையானது 1976 மற்றும் 2005 ஆகிய ஆண்டுகளுக்கு இடைப்பட்ட காலக்கட்டத்துடன் ஒப்பிடப்படும் போது 2100 ஆம் ஆண்டின் இறுதியில் 4.4° செல்சியஸ் என்ற அளவிற்கு அதிகரிக்கும்.
நாட்டின் சராசரி வெப்பநிலையானது 1900 மற்றும் 2018 ஆகிய ஆண்டுகளுக்கு இடைப்பட்ட காலத்துடன் ஒப்பிடப்படும் போது 0.7° செல்சியஸ் என்ற அளவில் அதிகரித்து உள்ளது.