இந்தியாவின் முதல் ஏவுகல இயந்திர உற்பத்தித் தொழிற்சாலை
July 19 , 2022 1477 days 962 0
அக்னிகுல் காஸ்மோஸ் என்ற நிறுவனமானது, முப்பரிமாண முறையில் அச்சிடப்பட்ட ஏவுகல இயந்திரங்களை உற்பத்தி செய்வதற்கான இந்தியாவின் முதல் தொழிற் சாலையைச் சென்னையில் துவக்கியுள்ளது.
இது அதன் சொந்த உள்பயன்பாட்டு ஏவுகலங்களுக்கான இயந்திரங்களைத் தயாரிக்கப் பயன்படும்.
இந்த உற்பத்தி நிலையமானது வாரத்திற்கு இரண்டு ஏவுகல இயந்திரங்கள் தயாரிப்பதன் மூலம் ஒவ்வொரு மாதமும் ஒரு ஏவுகல வாகனத்தினைத் தயாரிக்கும் திறன்களைக் கொண்டது,
இது அக்னிபான் என்ற ராக்கெட்டினை ஏவுவதற்கு தேவையான எண்ணிக்கையிலான இயந்திரங்களை உருவாக்குகிறது.
இது தனிப் பயனாக்கக் கூடிய, இரண்டு நிலைகள் கொண்ட ஒரு ஏவுகல வாகனமாகும்.
இது 700 கி.மீ. உயரத்தில் உள்ள (புவி தாழ்மட்ட சுற்றுப்பாதைகள்) சுற்றுப் பாதைக்கு 100 கிலோ எடையுள்ளப் பொருட்களை எடுத்துச் செல்லும் திறன் கொண்டது.
மேலும், இது குறைந்தபட்சக் குறுக்கீடுகளோடு வன்பொருள் மாற்றத்தினை மேற் கொள்ளச் செய்வதற்கான உள்ளமைவைச் செயல்படுத்துகிறது.