பஞ்சாப் மாவட்டத்தின் குருதாஸ்பூரில் உள்ள மான் கிராமத்தின் இந்தியப் பகுதியில் கர்தார்பூர் நடைபாதையின் கட்டுமான பணிக்கு இந்தியக் குடியரசு துணைத் தலைவர் அடிக்கல் நாட்டினார்.
இந்த நடைபாதையானது பாகிஸ்தானின் கர்தார்பூரில் உள்ள குருத்வாரா தர்பார் சாஹிப்பின் புனித தலத்திற்கு இந்திய சீக்கிய யாத்ரீகர்கள் நுழைவு இசைவுச் சீட்டு (visa) இன்றி செல்லக்கூடியப் பாதையை வழங்கும்.
இந்த நடைபாதையானது இந்தியாவின் எல்லை மாவட்டமான குருதாஸ்பூரை பாகிஸ்தானின் குருத்வாரா தர்பார் சாஹிப் உடன் இணைக்கிறது.
குருத்வாரா தர்பார் சாஹிப் என்பது பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில் உள்ள நரோவால் மாவட்டத்தின் ஷகர்கார் பகுதியில் உள்ள ராவி ஆற்றுப் படுகையில் அமைந்துள்ள 16 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த குருத்வாரா ஆகும்.
இந்த திட்டமானது இந்திய அரசால் நிதியளிக்கப்பட்டு இந்திய நெடுஞ்சாலைத்துறை ஆணையத்தால் (NHAI - National Highways Authority of India) உருவாக்கப்படும்.
இந்த நடைபாதையினை கட்டுவதற்கான முடிவானது அடுத்த ஆண்டு (2019ல்) வரும் குருநானக் தேவின் 550-வது பிறந்தநாளை முன்னிட்டு மத்திய அமைச்சரவையால் எடுக்கப்பட்டுள்ளது.