காலேஸ்வரம் நீர்ப்பாசனத் திட்டம் – சுற்றுச்சூழல் ஒப்புதல்
December 21 , 2017 2921 days 1195 0
மத்திய சுற்றுச்சூழல், வனங்கள் மற்றும் பருவநிலை மாறுபாட்டு அமைச்சகத்தின் நிபுணர் மதிப்பீட்டுக் குழு (Expert Appraisal Committee) தெலுங்கானா மாநிலத்தின் காலேஸ்வரம் நீர்ப்பாசன திட்டத்திற்கு இசைவு வழங்கியுள்ளது.
ஹைதராபாத் மற்றும் செகந்திராபாத் பகுதிகளுக்கு குடிநீர் வசதி ஏற்படுத்தித் தருவதற்காக கோதாவரி நதியின் குறுக்கே காலேஸ்வரம் நீர்ப்பாசனத் திட்டம் மேற்கொள்ளப்பட உள்ளது.
இத்திட்டத்தின் கீழ் தெலுங்கானாவின் மடிகாட்டா கிராமத்தின் அருகில் தன் துணைநதியான பிரானாஹிட்டாவோடு கோதாவரி நதி சங்கமிக்கும் இடத்தில் தடுப்பணை கட்டப்பட உள்ளது.
பெரும்பரப்பிலான பகுதிகள் இத்திட்டத்தின் கீழ் மூழ்க உள்ளதாயினும், இத்திட்டத்திற்கு சுற்றுச்சூழல் அனுமதி (Environment Clearence) வழங்கியுள்ள மத்திய நிபுணர் மதிப்பீட்டுக் குழுவானது நீர்ப்பாசன திட்டத்தினால் இத்திட்டப் பகுதிகளில் ஏற்பட உள்ள நுண் – கால நிலை மாற்றங்களில் (micro-climatic conditions) கவனம் கொள்ளுமாறு தெலுங்கானா அரசிற்கு அறிவுறுத்தியுள்ளது.
பிரிக்கப்படாத ஆந்திரப் பிரதேசத்தில் 2007-ல் முன் மொழியப்பட்ட பிரானஹிட்டா – செவ்வெல்லா ஏற்றுப் பாசன (Lift Irrigation) திட்டத்தின் மறு வடிவமைப்பு பதிப்பே காலேஷ்வரம் நீர்ப்பாசனத் திட்டமாகும்.
எல்லம்பள்ளி அணைக்கட்டிலிருந்து மல்லனசாகர் நீர்த்தேக்கம் வரை இத்திட்டத்தின் கீழ் 81 km நீளமுள்ள சுரங்க நீர் வழிப்பாதை (tunnel) அமைக்கப்பட உள்ளது. இது கட்டி முடிக்கப்பட்டால் இது தான் ஆசியாவின் மிக நீண்ட நீர் கொண்டு செல்லும் சுரங்கப் பாதையாகும்.