குறுகியக் காலப் பணியாளர்கள் குறித்த நிதி ஆயோக் அமைப்பின் அறிக்கை
July 2 , 2022 1107 days 457 0
இந்தியாவிலுள்ள குறுகியக் காலப் பணியாளர்களுக்கு சமூகப் பாதுகாப்பை வழங்கச் செய்வதற்கான நடவடிக்கைகளை நிதி ஆயோக் பரிந்துரைத்துள்ளது.
2029-30 ஆம் ஆண்டில் இந்த பணியாளர்களின் எண்ணிக்கையானது 2.35 கோடியாக உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
நிதி ஆயோக் வெளியிட்ட ஒரு ஆய்வின்படி, 2020-21 ஆம் ஆண்டில் குறுகியக் காலப் பணியாளர்களின் எண்ணிக்கையானது 77 லட்சமாக இருக்கும் என மதிப்பிடப் பட்டு உள்ளது.
இந்த அறிக்கையானது குறுகியக் காலப் பணியாளர்களை ஒரு குறிப்பிட்டத் தளத்தினைச் சார்ந்தப் பணியாளர்கள் மற்றும் ஒரு குறிப்பிட்டத் தளத்தினைச் சாராதப் பணியாளர்கள் என இரு வேறு பிரிவுகளாக வகைப்படுத்தியது.
ஒரு குறிப்பிட்டத் தளத்தினைச் சார்ந்தப் பணியாளர்கள் என்பது இணையதள மென்பொருள் செயலிகள் அல்லது எண்ணிமத் தளங்களின் சேவைக்காகப் பணி புரிபவர்களைக் குறிக்கிறது.
ஒரு குறிப்பிட்டத் தளத்தினைச் சாராதப் பணியாளர்கள் என்பது பொதுவாக சாதாரண கூலித் தொழிலாளர்கள் மற்றும் பெரும்பாலான துறைகளில் சொந்தமாகப் பகுதி நேரமாகவோ அல்லது முழு நேரமாகவோ சிறுதொழில் செய்வோர் ஆகியோரைக் குறிக்கிறது.
‘ஸ்டார்ட் அப் இந்தியா முன்முயற்சியின் பாணியில் ‘பிளாட்ஃபார்ம் இந்தியா முன் முயற்சியை’ அறிமுகப்படுத்த நிதி ஆயோக் பரிந்துரைத்தது.
தனது மொத்தப் பணியாளர்களில் மூன்றில் ஒரு பங்கு ஊனமுற்றோர் மற்றும் பெண்கள் ஆகியோரைக் கொண்ட நிறுவனங்களுக்கு ஊக்கத்தொகை வழங்கச் செய்வதற்கான முன்மொழிதலையும் இது முன்வைத்தது.