குழந்தை கடத்தல் குறித்த சர்வதேசப் புலம்பெயர்வு அமைப்பின் அறிக்கை
July 14 , 2023 774 days 452 0
‘ஆதாரம் முதல் நடவடிக்கை வரை: கொள்கை மற்றும் திட்ட உருவாக்கத்திற்கு தகவல் வழங்குவதற்கான சர்வதேசப் புலம் பெயர்வு அமைப்பின் இருபது வருட குழந்தை கடத்தல் பற்றிய தரவு வழங்கீட்டுச் சேவை’ என்ற தலைப்பிலான ஒரு அறிக்கையானது சமீபத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
இது கடத்தலால் பாதிக்கப்பட்டவர்கள் குறித்த சர்வதேசப் புலம் பெயர்வு அமைப்பின் தரவுத் தளத்தை (VoTD) பயன்படுத்தி மேற்கொள்ளப்பட்ட ஒரு விரிவான, உலகளவில் இருந்து பெறப்பட்ட தரவுகளின் பகுப்பாய்வு அடிப்படையிலான முதல் வகை அறிக்கை ஆகும்.
இந்த அறிக்கையின்படி, குழந்தைக் கடத்தலால் பாதிக்கப்பட்டவர்களில் பாதி பேர் தங்கள் சொந்த நாட்டிற்குள்ளேயே கடத்தப்படுகிறார்கள்.
சர்வதேசக் கடத்தல் வழக்குகளில், குழந்தைகள் பெரும்பாலும் அண்டை நாடுகள் மற்றும் பணக்கார நாடுகளுக்குக் கடத்தப்படுகின்றனர்.
கடத்தப்படும் குழந்தைகளில் பாதி பேர், அதில் பெரும்பாலும் உள்ள சிறுவர்கள், வீட்டு வேலை, பிச்சை எடுத்தல் மற்றும் வேளாண்மை போன்றப் பல்வேறு தொழில்களில் கட்டாய உழைப்பு முறைக்கு உட்படுத்தப்படுகிறார்கள்.
கடத்தப்படும் குழந்தைகளில் 20 சதவிகிதம் பேர், முக்கியமாக சிறுமிகள் விபச்சாரம், ஆபாசப் படம் எடுத்தல் மற்றும் பாலியல் அடிமைத்தனம் உள்ளிட்ட பல பாலியல் சுரண்டல்களுக்கு உட்படுத்தப்படுகிறார்கள்.
186 நாடுகளில் கடத்தப்பட்ட, 156 நாடுகளைச் சேர்ந்த 69,000க்கும் மேற்பட்ட பாதிக்கப் பட்டவர்கள் குறித்த முதன்மைத் தரவுகள் இந்த அறிக்கையில் பகுப்பாய்வு செய்யப் பட்டது.