சவூதி அரேபியாவின் தேசியப் பாரம்பரியத் திருவிழா - ஜனத்ரியா
February 12 , 2018 2720 days 993 0
சவூதி அரேபியாவின் தேசியப் பாரம்பரியத் திருவிழாவினுடைய 32வது பதிப்பை மன்னர் சல்மான் பின் அப்துல் அசிஸ் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் முன்னிலையில் ரியாத்தில் உள்ள ஜனத்ரியா என்ற கிராமத்தில் தொடங்கி வைத்தார்.
இந்தியா இந்த வருடத்திற்கான விழாவின் மதிப்பிற்குரிய (Guest of honor) விருந்தினர் ஆகும்.
ஜனத்ரியா என்பது சவூதி அரேபியாவின் கலாச்சார மற்றும் பாரம்பரியத் திருவிழாவாகும். இந்த விழாவானது பொதுவாக பிப்ரவரி அல்லது மார்ச் மாதம் நடைபெறும்.
இது ரியாத்துக்கு அருகில் உள்ள ஜனத்ரியா என்று கிராமத்தில் வருடாவருடம் நடத்தப்படும். இது ஒவ்வொரு வருடமும் தேசியக் காவல் படையால் (National Guard) நடத்தப்படும். இது முதன்முதலில் 1985ஆம் வருடம் நடத்தப்பட்டது. இவ்விழாவானது ஒவ்வொரு வருடமும் பத்து இலட்சத்திற்கும் மேற்பட்ட பார்வையாளர்களை ஈர்க்கிறது.
இத்திருவிழாவின் இந்தியக் காட்சிமாடமானது ‘சவுதியின் நண்பன் இந்தியா‘ (Saudi Ka Dost Bharat) என்று கருப்பொருளை அடிப்படையாகக் கொண்டிருந்தது. இது இந்தியா மற்றும் இந்திய கலாச்சாரத்தின் பாரம்பரியம் மற்றும் நவீன அம்சங்களை பிரதிபலிக்கும் விதமாக இருந்தது.
துருக்கி, இரஷ்யா, பிரான்ஸ், ஜப்பான், தென்கொரியா, சீனா, ஐக்கிய அரபு நாடுகள் மற்றும் ஜெர்மனி போன்ற நாடுகள் இவ்விழாவின் முந்தைய சிறப்பு விருந்தினர்களாவர்.