சென்னை பெருநகரப் பகுதியில் நுண்ணறிவுப் போக்குவரத்து அமைப்பு (ITS) திட்டத்திற்காக ₹500 கோடிக்கும் மேலான நிதியை மத்திய அரசு அங்கீகரித்துள்ளது.
இத்திட்டத்தின் மொத்த மதிப்பீடு ₹645.59 கோடியாகும், மேலும் இது ஜப்பான் பன்னாட்டு கூட்டுறவு முகமையிடம் (JICA) இருந்து மத்திய அரசு பெறும் கடனுதவி மூலம் நிதியளிக்கப் படுகிறது.
இத்திட்டத்தில் 165 சந்திப்புகளில் தகவமைக்கக்கூடிய போக்குவரத்து சமிக்ஞைக் கட்டுப்பாடு, 58 இடங்களில் போக்குவரத்து சம்பவங்களைக் கண்டறியும் அமைப்புகள், 17 இடங்களில் மாறக் கூடிய செய்திப் பலகைகள் மற்றும் 50 சந்திப்புகளில் சிவப்பு விளக்கு விதிமீறலைக் கண்டறியும் அமைப்புகள் ஆகியவை அடங்கும்.
இது சென்னை திறன்மிகு நகர நிறுவனத்தின் மூலம் பல நிறுவனங்களின் ஆதரவுடன் செயல்படுத்தப் பட்டு வருகிறது, மேலும் 17 இடங்களில் இதற்கான சோதனைத் திட்டம் 2024 ஆம் ஆண்டு ஜனவரி மாதத்தில் தொடங்கியது.
2026 ஆம் ஆண்டு மார்ச் 6 நிலவரப்படி, அடையாளம் காணப்பட்ட 165 சந்திப்புகளில் 104 சந்திப்புகளை மேம்படுத்தும் பணிகள் நிறைவடைந்துள்ளன, மேலும் இந்த அமைப்பு 2026 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்திற்குள் முழுமையாகச் செயல்படும் என எதிர்பார்க்கப் படுகிறது.