ஜவாத் ரஹிம் - தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தின் செயல் தலைவர்
April 2 , 2018 3087 days 1354 0
தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தின் (National Green Tribunal-NGT) தலைவர் ஓய்வு பெற்று மூன்று மாதம் முடிவடைந்துள்ள நிலையில் தற்போது, தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தின் பொறுப்புத் தலைவராக கர்நாடக உயர்நீதி மன்றத்தின் முன்னாள் நீதிபதியான ஜவாத் ரஹிமை உச்ச நீதிமன்றம் நியமித்துள்ளது.
தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தின் முந்தைய தலைவரான உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி திரு.சுவதந்தர் குமார் 2017 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் ஓய்வு பெற்றார்.
தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தின் வழக்கறிஞர் குழு அல்லது பார் அசோசியேஷன் தொடர்ந்த மனுவின் மீதான தீர்ப்பில் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான 3 பேர் கொண்ட அமர்வு இந்த உத்தரவினைப் பிறப்பித்துள்ளது.
தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தின் தலைவர் பதவிக்கு முறையான நியமனம் மேற்கொள்ளப்படும் வரை நீதிபதி ரஹிம் தன் பணிகளை மேற் கொள்வார். மேலும் இவர் தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தினுடைய பிற உறுப்பினர்களின் தேர்ந்தெடுப்பு செயல்முறையில் (Selection Process) பங்கெடுப்பார்.