தமிழ்நாடு மின் வேலிகள் (பதிவு மற்றும் ஒழுங்குமுறை) விதிகள் 2023
July 8 , 2023 767 days 466 0
தமிழ்நாடு அரசானது, முதன்முறையாக 2023 ஆம் ஆண்டு தமிழ்நாடு மின்வேலிகள் (பதிவு மற்றும் ஒழுங்குமுறை) விதிகளை அறிவித்துள்ளது.
இது வனப் பகுதிகளின் 5 கிலோமீட்டர் சுற்றளவில் மின் வேலிகள் (சூரியசக்தியில் இயங்குபவை உட்பட) அமைப்பதைத் தரப்படுத்தவும் ஒழுங்குபடுத்தவும் உதவும்.
இந்தப் புதிய விதியானது வேளாண் நிலங்களைச் சுற்றி ஏற்கனவே அமைக்கப் பட்டு உள்ள மின்வேலிகளை முறைப்படுத்தி ஒழுங்குபடுத்தவும் உதவும்.
சூரியசக்தியில் இயங்கும் வேலி உள்ளிட்ட மின் வேலிகளை அமைப்பதற்கு முன் அனுமதி பெறுவதும், ஏற்கனவே அமைக்கப்பட்ட வேலிகள் குறித்துப் பதிவு செய்வதும் கட்டாயமாகும்.
இந்த விதியானது அறிவிக்கப்பட்ட காப்பு வனப் பகுதியிலிருந்து 5 கிலோமீட்டர் என்ற சுற்றளவுப் பகுதிக்குள் மட்டுமே பொருந்தும்.
மின் வேலிகளை அமைக்கும் தொழிலில் ஈடுபடும் அனைத்து நிறுவனங்களும் தற்போது BIS தரநிலைகளான BIS-302-2-76 (இந்தியா) என்ற விதிமுறைகளுக்கு இணங்க வேண்டும்.
மாவட்ட வன அலுவலர் (DFO), தமிழ்நாடு மின்சார வாரிய அதிகாரிகளுடன் இணைந்து அந்தத் தளத்தை ஆய்வு செய்து, விவரக் குறிப்புகளின் இணக்கத்தினைச் சரிபார்த்தப் பிறகு, அந்த விண்ணப்பத்திற்கு ஒப்புதல் வழங்குவதா, மாற்றியமைப்பதா அல்லது நிராகரிப்பதா என்ற முடிவினை 45 நாட்களுக்குள் பரிசீலித்து வழங்குவார்.