சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு (மார்ச் 8) ராஷ்டிரபதி பவனில் 15 பெண்களுக்கு நாரி சக்தி புரஸ்கர் விருதினை இந்தியக் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் வழங்கினார்.
பெண்களுக்கு அதிகாரமளிக்கவும், அதிலும் குறிப்பாக பாதிக்கப்படக்கூடிய மற்றும் விளிம்புநிலைப் பெண்களுக்கு அதிகாரமளிக்கவும் வேண்டி பணிபுரியும் தனிநபர்கள், குழுக்கள் மற்றும் நிறுவனங்களின் சிறப்பான பணிகளை அங்கீகரிக்கும் வகையில் அவர்களுக்கு ஒவ்வொரு ஆண்டும் இந்த தேசிய விருது வழங்கப் படுகின்றது.
இந்த விருதானது மத்தியப் பெண்கள் மற்றும் குழந்தைகள் நல மேம்பாட்டு அமைச்சகத்தால் 1999 ஆம் ஆண்டில் நிறுவப்பட்டது.
இது நிறுவனம் சார்ந்த ஆறு பிரிவுகளிலும் இரண்டு தனிநபர் பிரிவுகளிலும் வழங்கப் படுகின்றது.
2020 ஆம் ஆண்டின் விருதுகள்
103 வயது நிரம்பிய தடகள வீராங்கனையான மான் கவுர்.
இந்திய விமானப் படையின் முதலாவது மகளிர் போர் விமானிகளான மோகனா சிங், பாவனா காந்த் மற்றும் அவனி சதுர்வேதி.
விவசாயிகளான படாலா பூதேவி மற்றும் பினா தேவி.
கைவினைஞரான ஆரிஃபா ஜான்.
சுற்றுச்சூழல் ஆர்வலரான சாமி முர்மு.
தொழில்முனைவோரான நில்சா வாங்மோ.
தானியங்கி ஆராய்ச்சி நிபுணரான ராஷ்மி உர்த்வர்திசி.
பெண் கொத்தனாரான கலாவதி தேவி.
மலையேற்ற வீராங்கனைகளான (உடன் பிறந்தவர்கள்) தாஷி மற்றும் நுங்ஷி மாலிக்.
பாரம்பரியப் பாடகரான கௌசிகி சக்ரோபர்த்தி
2018 இல் எழுத்தறிவுத் தேர்வில் முதலிடம் பிடித்த 98 வயதான கார்த்தாயினி அம்மா.
ஆறு பிரிவுகள்
பெண்களின் நல்வாழ்வையும் நலனையும் மேம்படுத்துவதில் சிறப்பாகப் பணியாற்றும் தனியார் துறை அமைப்பு / பொதுத் துறை நிறுவனத்திற்கான தேவி அஹல்யா பாய் ஹோல்கர் விருது.
குழந்தைப் பாலின விகிதத்தை (Child Sex Ratio - CSR) கணிசமான அளவில் மேம்படுத்தும் சிறந்த மாநிலத்திற்கான கண்ணகி தேவி விருது.
பெண்களுக்குச் சேவைகள் மற்றும் வசதிகளை வழங்கும் சிறந்த நகர்ப்புற உள்ளாட்சி அமைப்பிற்கான மாதா ஜீஜாபாய் விருது.
சிறந்த சிவில் (குடிமக்கள்) சமுதாய அமைப்பிற்கான (Civil Society organization - CSO) ராணி கைடின்லியு ஜெலியாங் விருது.
பெண்களுக்கு அதிகாரமளித்தல் துறையில் ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி ஆகியவற்றில் சிறந்து விளங்கும் நிறுவனத்திற்கான ராணி லட்சுமி பாய் விருது.
இரண்டு மாவட்டப் பஞ்சாயத்துகள் மற்றும் இரண்டு கிராமப் பஞ்சாயத்துகள் ஆகியவற்றிற்கு ராணி ருத்ரம்மா தேவி விருது.