பழங்குடியின ஆசிரியர்களுக்கு 100 % இட ஒதுக்கீடு இல்லை
April 24 , 2020 1930 days 586 0
நாடு முழுவதும் பட்டியலிடப்பட்ட பகுதிகளில் அமைந்துள்ள பள்ளிகளில் பழங்குடியின ஆசிரியர்களுக்காக 100% இட ஒதுக்கீடு அளிப்பது அரசியலமைப்பிற்கு எதிரானது என்று 5 நீதிபதிகளைக் கொண்ட உச்ச நீதிமன்றத்தின் அரசியலமைப்பு அமர்வு கூறியுள்ளது.
100% இட ஒதுக்கீடானது பாகுபாட்டுத் தன்மை உடையதாகவும் அனுமதிக்க முடியாததாகவும் உள்ளது என்று இந்த அமர்வு கூறியுள்ளது.
அரசு வேலைவாய்ப்பானது சிலருக்கு மட்டுமே உள்ள ஒரு தனிச்சிறப்பு சலுகை கொண்டது அல்ல.
பட்டியலிடப்பட்ட பழங்குடியினருக்கான 100% இட ஒதுக்கீடானது பட்டியலிடப்பட்ட இனத்தவர் மற்றும் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினரின் அடிப்படை உரிமையை மறுப்பதுடன் அவர்களின் பிரதிநிதித்துவத்தையும் மறுக்கின்றது.
மேலும் நீதிமன்றமானது 50% என்ற அளவிற்கு இட ஒதுக்கீடு உச்ச வரம்பை அனுமதிக்கும் இந்திரா சஹானி வழக்கின் தீர்ப்பையும் மேற்கோள் காட்டியுள்ளது.
இந்த வழக்கானது 2000 ஆம் ஆண்டு ஜனவரி 10 அன்று உயர் நீதிமன்ற அமர்வினால் வழங்கப்பட்ட தீர்ப்பினை எதிர்த்து மேல்முறையீடு செய்யப்பட்ட ஒரு வழக்காகும்.
முன்னதாக, அப்போதைய ஆந்திரப் பிரதேச அரசானது 2000 ஆம் ஆண்டில் அம்மாநிலத்தின் பட்டியலிடப்பட்ட பகுதிகளில் அமைந்துள்ள பள்ளிகளில் இருக்கும் ஆசிரியர்களின் பணியிடத்திற்கு பட்டியலிடப்பட்ட பழங்குடியினருக்கு 100% இட ஒதுக்கீட்டினை அளிப்பதற்காக ஒரு ஆணையைப் பிறப்பித்திருந்தது. இதில் 33.1/3 % அளவிற்கு பெண்களும் உள்ளடங்குவர்.