விலங்குகள் மருத்துவ ஊர்தி (Ambulance) தமிழகத்தில் அறிமுகம்
October 31 , 2017 2784 days 1137 0
காயமடைந்த யானைகள் உள்ளிட்ட வனவிலங்குகளைக் காப்பாற்றி அதற்குத் தேவையான சிகிச்சை அளிப்பதற்கும், யானைகளை பாதுகாப்பாக ஏற்றிச் செல்வதற்கும் மருத்துவ வசதி கொண்ட பிரத்யேக ஹைட்ராலிக் ஆம்புலன்ஸ் தமிழகத்தில் சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் ஏராளமான யானைகள் உள்ளன. வறட்சியால் வனப்பகுதியில் இருந்து வெளியேறி கிராமத்துக்குள் புகுந்து விவசாயிப் பயிர்களை சேதப்படுத்தும் யானைகள் அண்மைக்காலமாக அப்பகுதியிலேயே முகாமிட்டு கிராம மக்களுக்கு அச்சத்தை ஏற்படுத்துகின்றன.
மேலும், யானைகளை விரட்டும்போது மனித – விலங்குகள் மோதல் ஏற்பட்டு உயிரிழப்புகள் நிகழ்கின்றன. சில சூழ்நிலைகளில் கும்கி யானைகளை வரவழைத்து கிராமத்துக்குள் முகாமிட்டுள்ள யானைகளை வனத்துறையினர் விரட்டுகின்றனர். அது தவிர, சேற்றில் சிக்கித்தவிக்கும் விலங்குகள், நோயால் பாதிக்கப்பட்ட யானைகள், சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் தீவனம், தண்ணீர் தேடி இடம்பெயரும் யானைகள் ஆகியவற்றை மீட்க, சிகிச்சை அளிக்க உரிய வாகன வசதியில்லாததால் விலங்குகள் உயிரிழக்கின்றன.
இது போன்ற வனஉயிரினங்களின் உயிரிழப்பைத் தடுக்க, சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் வனவிலங்குகள் மீட்புக்கான ஹைட்ராலிக் ஆம்புலன்ஸ் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
யானைகளுக்கான ஆம்புலன்ஸ் வாகனம் என்பது இந்தியாவிலேயே இதுதான் முதல் முறை. இந்த ஆம்புலன்ஸை அடர்ந்த வனத்தில் நிறுத்தி வைத்து வனத்துறையினர் அதிலிருந்தபடியே விலங்குகள் நடமாட்டத்தைக் கண்காணிக்கலாம்.