ஹரித்துவார் மற்றும் வாரணாசியில் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம்
October 13 , 2017 3013 days 1142 0
கலப்பு வருடாந்திர தொகை முறையின் (Hybrid Annuity Model - HAM) கீழ் நாட்டின் முதல் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்தை ஹரித்துவார் மற்றும் வாரணாசியில் அமைக்க தேசிய கங்கை தூய்மைக்கான திட்ட அமைப்பு (National Mission For Clean Ganga) ஒப்புதல் வழங்கியுள்ளது. கலப்பு வருடாந்திர தொகை முறை என்பது பொது மற்றும் தனியார் கூட்டிணைவு (PPP) அமைப்பின் வேறுபட்ட முறையாகும்.
இது, நமாமி கங்கா திட்டத்திற்கு ஊக்கமளிக்கும் விதமாக, நகரங்களின் சுத்திகரிக்கப்படாத கழிவுநீர் கங்கையில் கலக்காமல் இருப்பதை உறுதிசெய்யும்.
HAM அமைப்பின் கீழ் திட்டத்திற்கான செலவுகளில் 40% பங்கினை மத்திய அரசானது வருடாந்திர கட்டணமாக ஐந்து வருடங்களுக்கு தனியார் நிறுவனத்திற்கு வழங்கும்.
மீதமுள்ள தொகையானது அத்தனியார் நிறுவனத்தின் செயல்பாடு மற்றும் ஏற்படுத்தப்பட்டுள்ள கழிவுநீர் கட்டமைப்புகளைப் பொறுத்து வழங்கப்படும்.
இவ்வாறு கழிவுநீர் சுத்திகரிப்பு உட்கட்டமைப்புகளின் செயல்திறன் அடிப்படையில் வருடாந்திர கட்டணத் தொகை வழங்கப்படுவதால் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்களின் தொடர்ந்த செயல்பாடு உறுதி செய்யப்படும்.
மேலும் நிதியியல் இடர்களை (Financial Risk) அரசும், தனியார் நிறுவனமும் பகிர்ந்து கொள்ளவும் இம்முறை உதவும்.