லேபியோ பிலிப்பெரஸ் – புதிய வகை சாப்பிடக்கூடிய மீன் இனம் கேரளாவின் பம்பா நதியில் கண்டுபிடிப்பு
September 11 , 2017 3139 days 1488 0
சாப்பிடக்கூடிய புதிய நன்னீர்வகை மீன் இனத்தை ஆராய்ச்சியாளர்கள் கேரளாவின் பத்தனம்திட்டா மாவட்டத்தில் பம்பா நதியில் கண்டுபிடித்துள்ளனர். இதற்கு லேபியோ பிலிப்பெரஸ் எனப் பெயரிடப்பட்டுள்ளது. இது லேபியோ இனத்தைச் சார்ந்ததாகும்.
லேபியோ இனத்தைச் சார்ந்த மீன் வகைகள் இந்தியா, பாகிஸ்தான், நேபாளம், வங்கதேசம், இலங்கை, பர்மா, மலேசியா, சிரியா மற்றும் ஆப்பிரிக்காவின் வெப்பமண்டலப் பகுதி ஆகிய இடங்களில் உள்ள உள்நாட்டு நீர்நிலைகளில் பரவலாகக் காணப்படுகிறது.
இந்தியாவில் மட்டும் 31 வகையான லேபியோ இனத்தைச் சார்ந்த மீன் வகைகள் இருப்பதாகத் தெரியவந்துள்ளது. இதில் ‘ரோகு’ என்றறியப்படும் லேபியா ரோஹிதா உள்பட அனைத்து வகைகளும் பெருவாரியாக மீன்வளர்ப்புத் தொழிலில் பயன்படுகின்றன.
இந்த புதிய லேபியா இன வகை மீன்கள் கேரளாவில் மட்டும் கண்டறியப்பட்டுள்ள இரண்டாவது வகையாகும். ஏற்கெனவே கேரளாவில் இருந்து கண்டறியப்பட்டுள்ள மற்ற லேபியோ இன வகையானது “லேபியோ டசுமியரி” ஆகும்.