2026 ஆம் ஆண்டின் NEET-UG மறுதேர்வுக்கு முன்னதாக, தகவல் தொழில்நுட்ப (IT) சட்டம், 2000-இன் 69A பிரிவின் கீழ் டெலிகிராம் செயலியை தற்காலிகமாக முடக்கும் மத்திய அரசின் முடிவை டெல்லி உயர் நீதிமன்றம் உறுதி செய்துள்ளது.
இணையவழிக் குற்றவாளிகள், மோசடி வலையமைப்புகள் மற்றும் வினாத்தாள் கசிவு குழுக்களால் டெலிகிராம் செயலி பயன்படுத்தப்படுவதாகவும், அது ஒரு "புதிய இருண்ட இணையதளம்” என்றும் மத்திய அரசு தெரிவித்துள்ளது.
தகவல் தொழில்நுட்பச் சட்டம், 2000-இன் 69A பிரிவானது, இறையாண்மை, நாட்டின் பாதுகாப்பு, பொது ஒழுங்கு மற்றும் பிற சட்டரீதியான காரணங்களுக்காக இணைய உள்ளடக்கங்களைப் பொதுமக்கள் அணுகுவதைத் தடுக்க இந்திய அரசுக்கு அதிகாரம் அளிக்கிறது.
தடையுத்தரவைப் பிறப்பிக்க, தகவல் தொழில்நுட்ப (பொதுமக்களால் தகவல் அணுகப்படுவதைத் தடுப்பதற்கான நடைமுறை மற்றும் பாதுகாப்புகள்) விதிகள், 2009-இன் கீழ் அவசரகால ஏற்பாடுகளை அரசாங்கம் பயன்படுத்தியது.
2015-ஆம் ஆண்டு ஷ்ரேயா சிங்கால் எதிர் இந்திய ஒன்றியம் வழக்கில், எழுத்துப்பூர்வ காரணங்கள் மற்றும் மறுஆய்வு வழிமுறைகள் போன்ற பாதுகாப்புகளுடன் 69A பிரிவு அரசியலமைப்புச் சட்டப்படி செல்லுபடியாகும் என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது.