உச்ச நீதிமன்ற நீதிபதிகளின் எண்ணிக்கையை (தலைமை நீதிபதி உட்பட) 34-லிருந்து 38-ஆக உயர்த்த, உச்ச நீதிமன்ற (நீதிபதிகளின் எண்ணிக்கை) திருத்த மசோதா 2026-க்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
இந்தத் திருத்தம் உச்ச நீதிமன்ற (நீதிபதிகளின் எண்ணிக்கை) சட்டம், 1956-இல் மாற்றத்தைக் கொண்டு வரும்.
2019-ஆம் ஆண்டிற்குப் பிறகு உச்ச நீதிமன்ற நீதிபதிகளின் எண்ணிக்கை உயர்த்தப் படுவது இதுவே முதல் முறையாகும்.
வழக்குகளின் தேக்கம் அதிகரிப்பு மற்றும் கோவிட்-19 பெருந்தொற்றுக்குப் பிறகு அதிகரித்துள்ள டிஜிட்டல் மின்னணுத் தாக்கல் ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
அரசியலமைப்பின் சரத்து 124(1), ஒரு சட்டத்தின் மூலம் உச்ச நீதிமன்ற நீதிபதிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க நாடாளுமன்றத்திற்கு அதிகாரம் அளிக்கிறது.
இந்த மசோதா மக்களவை மற்றும் மாநிலங்களவை ஆகிய இரண்டிலும் சாதாரண பெரும்பான்மையுடன் நிறைவேற்றப்பட்டு, குடியரசுத் தலைவரின் ஒப்புதலைப் பெற வேண்டும்.
அரசியலமைப்பின் கீழ் உச்ச நீதிமன்றத்தின் அசல் எண்ணிக்கை ஒரு தலைமை நீதிபதி மற்றும் ஏழு இதர நீதிபதிகள் என இருந்தது.
92,000-க்கும் மேற்பட்ட தேங்கிக்கிடக்கும் வழக்குகளைக் கையாள்வதே இந்த நடவடிக்கையின் நோக்கமாகும்.