அரசியலமைப்புச் சட்டத்தின் சரத்து 164ன் கீழ் ஆளுநர் முதலமைச்சரை நியமிக்கிறார் இருப்பினும், ஒரு தொங்கு சட்டசபையில் முதலமைச்சரைத் தேர்ந்தெடுப்பதற்கான நிலையான அரசியலமைப்பு நடைமுறை எதுவும் இல்லை.
அரசியலமைப்பு மரபுகளின்படி, ஆளுநர் நடுநிலைமையுடனும், நிதானத்துடனும், ஒரு நிலையான அரசாங்கத்தை உறுதி செய்யும் நோக்கத்துடனும் செயல்பட வேண்டும்.
மாநிலத்தின் அரசியலமைப்புத் தலைவராக, அரசியலமைப்பு நிர்வாகத்தின் தொடர்ச்சியையும் அரசியல் நிலைத்தன்மையையும் உறுதி செய்யும் முதன்மைப் பொறுப்பு ஆளுநருக்கு உண்டு.
சர்க்காரியா ஆணையமானது 1970 ஆம் ஆண்டு ஆளுநர்கள் குழு மற்றும் உச்ச நீதிமன்றத் தீர்ப்புகளின்படி, முடிவெடுப்பதில் ஆளுநரின் தனிப்பட்ட விருப்பங்களுக்கு இடமில்லை எனக் கூறியது.
அரசாங்கம் அமைப்பதற்கு ஏதுவாக, அரசியல் கட்சிகள், கூட்டணிகள் மற்றும் சுயேச்சை எம்.எல்.ஏ-க்களுடன் ஆளுநர் ஆலோசனைகளை மேற்கொண்டு அனைத்து வாய்ப்புகளையும் ஆராய வேண்டும்.
அரசியலமைப்பானது "நியாயமான காலத்தை" வரையறுக்கவில்லை, ஆனால் ஆளுநர்கள் காலவரையின்றி தாமதிக்க முடியாது. அத்தகைய தாமதம் 'குதிரை பேரத்திற்கும்' அரசியல் நிலையின்மைக்கும் வழிவகுக்கும்.
அனைத்து முயற்சிகளும் தோல்வியடைந்தால், அரசியலமைப்பு ஒழுங்கைப் பராமரிக்க கடைசி முயற்சியாக சரத்து 356-இன் கீழ் குடியரசுத் தலைவர் ஆட்சியை ஆளுநர் பரிந்துரைக்கலாம்.
அரசியலமைப்பு ரீதியான நியாயம் இன்றி, ஆளுநர் அரசாங்கத்தை நியமிக்காமலோ அல்லது சட்டமன்றத்தைக் கலைக்காமலோ முடிவெடுக்க முடியாத நிலையில் நீடிக்க முடியாது.
பி.ஆர். கபூர் (2001) மற்றும் ராமேஷ்வர் பிரசாத் (2006) வழக்குகளில், அரசியலமைப்பு முறிவைத் தடுக்க அரிய சந்தர்ப்பங்களில், சட்டமன்றம் அதன் முதல் கூட்டத்திற்கு முன்பே சரத்து 174(2)(b)-இன் கீழ் ஆளுநரால் கலைக்கப்படலாம் என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
வாக்காளர்களின் ஆணையைச் சீர்குலைக்கும் வகையிலான முறைகேடுகள் அல்லது தாமதங்களுக்கு ஆளுநர் இடமளிக்கக்கூடாது.
அரசாங்கம் அமைப்பதற்கான முன்னுரிமை வரிசையை சர்க்காரியா ஆணையம் (1988) வகுத்துள்ளது, இதனை உச்ச நீதிமன்றமும் ஏற்றுள்ளது):
முதல் முன்னுரிமையானது அவையில் தெளிவான பெரும்பான்மை கொண்ட தேர்தலுக்கு முந்தைய கூட்டணி
இரண்டாம் முன்னுரிமையானது நிலையான ஆட்சியை வழங்கக்கூடிய திறனை நிரூபிக்கக் கூடிய மிகப்பெரிய ஒற்றைக் கட்சி
மூன்றாம் முன்னுரிமையானது கூட்டுப் பெரும்பான்மையை நிரூபிக்கக்கூடிய கட்சிகளின் தேர்தலுக்குப் பிந்தைய கூட்டணி
கூட்டணி அரசியல் மற்றும் சிதறிய முடிவுகள் காரணமாக தற்போது தேர்தலுக்குப் பிந்தைய கூட்டணிகள் மிகவும் பொதுவானதாகிவிட்டன.
எஸ்.ஆர். பொம்மை (1994) வழக்கில், ஒரு அரசாங்கம் நியமிக்கப்படும் போதே முன் கூட்டியே பெரும்பான்மையைக் கொண்டிருக்க வேண்டும் என்று அரசியலமைப்பு கட்டாயப் படுத்தவில்லை என்று உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது.
ஒரே மாதிரியான கொள்கைகளைக் கொண்ட கட்சிகள் தேர்தலுக்குப் பிந்தைய கூட்டணி அமைத்துப் பெரும்பான்மையைப் பெறுவது அரசியலமைப்பு ரீதியாகச் செல்லுபடியாகும்.
எந்த விருப்பமும் நிலையான அரசாங்கத்திற்கு வழிவகுக்கவில்லை என்றால் மட்டுமே, ஆளுநர் ஒரு தீவிரமான மற்றும் கடைசி முயற்சியாகக் குடியரசுத் தலைவர் ஆட்சியைப் பரிந்துரைக்கலாம்.
"மாநிலத்தில் அரசியலமைப்பு இயந்திரம் முடிந்தவரை பாதுகாக்கப்பட வேண்டும்" என்று உச்ச நீதிமன்றம் மீண்டும் வலியுறுத்தியுள்ளது.
பெரும்பான்மை ஆதரவைச் சோதிப்பது பொதுவாகச் சட்டமன்றத்திலேயே செய்யப் பட வேண்டும் என்று ஆளுநர்கள் குழு முடிவு செய்துள்ளது.
எஸ்.ஆர். பொம்மை தீர்ப்பைத் தொடர்ந்து வந்த பல உச்ச நீதிமன்றத் தீர்ப்புகள், பெரும்பான்மையை நிரூபிக்க சட்டமன்ற வாக்கெடுப்பே மிகவும் புறநிலையான, வெளிப்படையான மற்றும் ஜனநாயக ரீதியான முறை என உறுதிப்படுத்தியுள்ளன.
மக்களின் ஆணையின் விதி, ஆளுநரின் தனிப்பட்ட விருப்பத்தைச் சார்ந்து இருக்கக் கூடாது என்று நீதிமன்றங்கள் வலியுறுத்தியுள்ளன.
தற்போதுள்ள அல்லது புதிய அரசாங்கங்களின் பெரும்பான்மை குறித்த சர்ச்சைகளைத் தீர்க்க சட்டசபை வாக்கெடுப்பிற்கு உச்ச நீதிமன்றம் பலமுறை உத்தரவிட்டுள்ளது.
தன்னிச்சையான அதிகார துஷ்பிரயோகத்தைத் தடுக்கவும், நிலைத்தன்மையை உறுதி செய்யவும் சட்டசபை வாக்கெடுப்பு முதன்மையான அரசியலமைப்பு வழி முறையாக மாறியுள்ளது.
ஜனநாயகம் நிலை நாட்டப்படும் உண்மையான தளம் சட்டமன்றமே தவிர, ஆளுநர் மாளிகை (ராஜ் பவன்) அல்ல என்று நீதிமன்றம் உறுதிப்படுத்தியுள்ளது.
இறுதியாக, யார் ஆட்சி செய்ய வேண்டும் என்பதை ஆளுநரின் தனிப்பட்ட மதிப்பீடு தீர்மானிக்கக் கூடாது, சட்டமன்றமே தீர்மானிக்க வேண்டும்.