பிரதம மந்திரி வித்யாலக்ஷ்மி திட்டத்தின் சமீபத்திய தகவல்
August 9 , 2026 5 days 78 0
பிரதம மந்திரி வித்யாலக்ஷ்மி திட்டம், பிணையமில்லாக் கடன்கள் மற்றும் வட்டி ஆதரவுடன் உயர்கல்விக்கான அணுகலை விரிவுபடுத்துகிறது.
இது பிணையமில்லா மற்றும் ஜாமீன்தார் இல்லாத கல்விக் கடன்களை வழங்குவதற்காக கல்வி அமைச்சகத்தின் ஒரு முன்னெடுப்பாகும்.
இந்தியாவில் உள்ள எந்தவொரு அங்கீகரிக்கப்பட்ட தரமான உயர்கல்வி நிறுவனத்திலும் (QHEI) தகுதியின் அடிப்படையில் சேர்க்கப்பட்ட அனைத்து மாணவர்களும் இந்தக் கடன்களைப் பெறலாம்.
தரமான கல்விக்கான அனைவரையும் உள்ளடக்கிய மற்றும் சமமான அணுகலை மையமாகக் கொண்டு, தேசிய கல்விக் கொள்கை, 2020 மற்றும் நிலையான வளர்ச்சி இலக்கு 4 ஆகியவற்றின் நோக்கங்களை ஆதரிப்பதற்காக இந்தத் திட்டம் தொடங்கப் பட்டது.
இந்தியாவின் உயர்கல்வி சேர்க்கை விகிதம் 2014-15 ஆம் ஆண்டில் 23.7% ஆக இருந்து 2023-24 ஆம் ஆண்டில் 30% ஆக குறிப்பிடத்தக்க அதிகரிப்பைக் கண்டுள்ளது.
பிரதம மந்திரி வித்யாலக்ஷ்மி திட்டம், தேசிய நிறுவன தரவரிசை கட்டமைப்பின் (NIRF) ஒட்டுமொத்த, வகை சார்ந்த மற்றும் துறை சார்ந்த பிரிவுகளில் முதல் 100 இடங்களுக்குள் உள்ள உயர்கல்வி நிறுவனங்களை உள்ளடக்கியது.
பிரதம மந்திரி வித்யாலக்ஷ்மி திட்டத்தின் கீழ் வழங்கப்படும் கல்விக் கடன்களுக்கு உச்ச வரம்பு எதுவும் இல்லை. மேலும், அனுமதிக்கப்படும் தொகையானது பாடக் கட்டணம் மற்றும் பிற அங்கீகரிக்கப்பட்ட கல்விச் செலவுகளைப் பொறுத்தது.
இந்தக் கடனானது, கல்விக் கட்டணம் மற்றும் நிறுவனக் கட்டணங்கள், விடுதி மற்றும் உணவுக் கட்டணங்கள், நிறுவனத்தால் வசூலிக்கப்படும் திரும்பப் பெறக்கூடிய மற்றும் திரும்பப் பெற முடியாத கட்டணங்கள், மடிக்கணினி மற்றும் படிப்பு காலத்திற்கான வாழ்க்கைச் செலவுகள் ஆகியவற்றை உள்ளடக்கும்.
பிரதம மந்திரி வித்யாலக்ஷ்மி திட்டத்தின் கீழ் வழங்கப்படும் கடன்கள், பட்டியல் வங்கிகள், மண்டல கிராமிய வங்கிகள் மற்றும் கூட்டுறவு வங்கிகள் மூலம் வழங்கப் படுகின்றன.
மேலும், ரூ. 7.5 லட்சம் வரையிலான கடன்களுக்கு அரசாங்கம் 75% கடன் உத்தரவாதத்தை வழங்குகிறது.
மேலும், கடன் வாங்குபவர்கள் பிரிவு 80E-இன் கீழ் செலுத்தப்படும் வட்டிக்கு வரிச் சலுகைகளைப் பெறலாம்.
பிரதம மந்திரி வித்யாலக்ஷ்மி ஒரு தனித்த திட்டம் அல்ல; இது ஏற்கனவே உள்ள பிரதம மந்திரி உச்சாதர் சிக்சா புரோத்சாஹன் மத்திய துறை வட்டி மானியத் திட்டம் அல்லது PM-USP CSIS-க்கு ஒரு துணைத் திட்டமாக விளங்குகிறது.
PM-USP CSIS திட்டமானது, ஆண்டு குடும்ப வருமானம் ரூ. 4.5 லட்சம் உள்ள மாணவர்களுக்கான கடன்களை உள்ளடக்கியதுடன், அவர்கள் 100% வட்டி மானியத்தைப் பெறலாம்.