இஸ்லாத்திற்கு மதம் மாறும் ஒருவர் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் (முஸ்லிம்) தகுதியைக் கோர முடியாது என சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளதுடன், தமிழ்நாடு அரசின் 2024 ஆம் ஆண்டின் அரசாணையை அரசியல் சாசனத்திற்கு முரணானது எனவும் அறிவித்துள்ளது.
இஸ்லாத்திற்கு மதம் மாறும் ஒருவர் இஸ்லாமியராக மட்டுமே கருதப்படுவார் என்றும், பிறப்பின் அடிப்படையில் ஒரு இஸ்லாமியச் சமூகத்திலோ அல்லது பிரிவிலோ உறுப்பினராகக் கோர முடியாது என்றும் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
மதம் மாறிய சிலருக்கு பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் (முஸ்லிம்) இடஒதுக்கீடு சலுகைகளைப் பெற அனுமதித்த 2024 ஆம் ஆண்டு அரசாணையை நீதிமன்றம் ரத்து செய்தது.
பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், அறிவிக்கப்படாத சமூகங்கள் அல்லது பட்டியல் சாதியினரிடமிருந்து இஸ்லாமிற்கு மதம் மாறுபவர், இட ஒதுக்கீட்டுப் பலனைப் பெறுவதற்காக பிற்படுத்தப்பட்ட வகுப்பினராக (முஸ்லிம்) கருதப் படலாம் என்றும், அவ்வாறு மதம் மாறியவுடன், அறிவிக்கப்பட்ட ஏழு பிரிவுகளில் ஒன்றைச் சேர்ந்தவர் என்பதற்கான சமூகச் சான்றிதழ் அவருக்கு வழங்கப் படலாம் என்றும் அரசாணை உத்தரவிட்டது.
இருப்பினும், முன்னேறிய சமூகத்திலிருந்து இஸ்லாமிற்கு மதம் மாறுபவருக்கு பிற்படுத்தப் பட்ட வகுப்பினர் (முஸ்லிம்) என்ற முத்திரை கிடைக்காது என்று அரசு கூறியது.
தங்கள் பூர்வீக மதத்தில் ஏற்கனவே இட ஒதுக்கீட்டுப் பலனை அனுபவித்து வருபவர்கள் மட்டுமே, இஸ்லாமிற்கு மதம் மாறுவதால் அதனை இழக்க மாட்டார்கள்.
எனவே இதன் மூலம் சமூக சமநிலை பாதிக்கப்படாது.
அங்கீகரிக்கப்பட்ட முஸ்லிம் சமூகங்களான லெப்பை, ராவுத்தர் மற்றும் மரைக்காயர் ஆகியவை பிறப்பை அடிப்படையாகக் கொண்ட சமூகங்கள் என்றும், அவற்றை மதம் மாறுவதன் மூலம் பெற முடியாது என்றும் அத்தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது.
முந்தைய நீதிமன்றத் தீர்ப்புகளை ஒரு அரசாணை மூலம் மீறவோ அல்லது ரத்து செய்யவோ முடியாது என நீதிமன்றம் கூறியுள்ளது.
அதிகாரப் பிரிவினைக் கோட்பாடு என்பது அரசியலமைப்பில் ஆழமாக வேரூன்றிய ஒரு கொள்கையாகும் என்பதோடு அது சட்டத்தின் ஆட்சியின் இன்றியமையாத அங்கமாகும்.
இந்தக் கொள்கை நீதிமன்றங்களின் இறுதித் தீர்ப்புகளுக்கும் பொருந்தும்.
சட்டமன்றம், ஒரு நீதிமன்றத்தின் எந்தவொரு தீர்ப்பையும் செல்லாதது என்றோ அல்லது பயனற்றது என்றோ அறிவிக்க முடியாது.
இஸ்லாத்திற்கு மதம் மாறிய பின்பு முஸ்லிம் லெப்பை சமூகச் சான்றிதழ் கோரிய மனுவை விசாரித்தபோதே இந்தத் தீர்ப்பு வழங்கப்பட்டது.