TNPSC Thervupettagam

நாம் அறியாத நிலவின் முகம்

July 23 , 2023 1006 days 1263 0
  • பூமியிலிருந்து பார்க்கும்போது சூரியனுக்கு அடுத்து, நிலவுதான் பெரிய வான்பொருள். நிலவு குறித்து எதுவும் அறியப்படாத காலத்திலிருந்தும் நிலவில் மனிதன் கால்பதித்த காலத்துக்குப் பிறகும் சுவாரசியமான விஷயங்களை நமக்கு வாரி வழங்கிக்கொண்டிருக்கிறது.

நிலவின் உண்மையான வடிவம் என்ன?

  • நாம் தொலைவிலிருந்து பார்க்கும்போது நிலவு கோள வடிவமாகத் தெரிகிறது. ஆனால், நிலவு ஒழுங்கற்ற கோள வடிவம் கொண்டது. நிலவின் மேற்பரப்பு மலைகள், பள்ளத்தாக்குகள், பள்ளங்களைக் கொண்ட நிலப்பரப்பாக இருக் கிறது.

நிலவின் ஒளி

  • நிலவுக்குச் சுயமான ஒளி கிடையாது. சூரிய ஒளியைத்தான் அது பிரதிபலிக்கிறது. பூமியிலிருந்து நாம் பார்க்கும்போது நிலவின் மீது விழும் ஒளியின் அளவின் காரணமாகப் பிறை நிலவு வளர்ந்து முழு நிலவாகவும், முழு நிலவு தேய்ந்து பிறைகளாகவும் மாற்றம் அடைந்துகொண்டே இருக்கிறது. நிலவிலிருந்து பார்த்தால் பூமியும் ஒளிரும்.

பகலில் நிலவைப் பார்க்க முடியுமா?

  • பார்க்க முடியும். ஒரே நில வைத்தான் நாம் பகலிலும் இரவிலும் பார்க்கிறோம். ஆனால், பகலில் அவ்வளவு தெளிவாக நமக்குத் தெரிவதில்லை. சூரியனின் பிரகாசமான ஒளியால், நிலவின் ஒளி மிகக் குறைவாகவே நம் கண்களுக்குப் புலப்படும் அல்லது புலப்படாமலும் போகும்.

நிலவு உதயமும் அஸ்தமனமும்

  • சூரிய உதயத் தையும் அஸ்தமனத்தையும் போலவே நிலவு உதயமும் அஸ்தமனமும் ஏற்படுகின்றன. இதற்குக் காரணம் நம் பூமியின் சுழற்சிதான். சூரியனும் நிலவும் உண்மையில் உதிப்பதும் இல்லை, மறைவதும் இல்லை. பூமி சுற்றுவதால் பூமியின் ஒரு பகுதியில் பகலும் மற்றொரு பகுதியில் இரவும் ஏற்படுவதுபோல், ஒரு நேரத்தில் பூமியில் ஒரு பகுதியினர் நிலவைப் பார்க்க முடியும், மற்றொரு பகுதியினர் சரியாகப் பார்க்க இயலாது.
  • ஆனால், 24 மணி நேரத்துக்குள் பூமியில் இருக்கும் அனைவரும் நிலவைப் பார்த்துவிட முடியும். சூரியனையும் அப்படித்தானே பார்த்துக்கொண்டிருக்கிறோம். நிலவு பூமியைச் சுற்றிவர ஏறக்குறைய ஒரு மாதத்தை எடுத்துக் கொள்வதால், ஒவ்வொரு நாளும் நிலவின் உதயம், அஸ்தமன நேரம் மாறுகின்றன.

நிலவு ஒரு கோளா?

  • நிலவு கோள் அல்ல. அது ஓர் இயற்கைத் துணைக்கோள் அல்லது வான்பொருள். நிலவு பூமியைச் சுற்றிக் கொண்டு, பூமியோடு சேர்ந்து சூரியனையும் சுற்றிவருகிறது. அதனால் நிலவின் ஒரு பக்கத்தை மட்டுமே நம்மால் பார்க்க முடிகிறது. பூமியைப் போன்று பிற கோள்கள் தன்னையும் சுற்றிக்கொண்டு சூரியனையும் சுற்றி வருகின்றன. நிலவில் பகலில் வெப்பம் அதிகமாகவும் இரவில் குளிர் அதிகமாகவும் இருக்கும். காரணம், அங்கே காற்று மண்டலம் இல்லை. சூரியனிலிருந்து வெளிவரும் ஆபத்தான கதிர்வீச்சை வடிகட்ட காற்று மண்டலம் இல்லாததால்தான் நிலவில் இறங்குபவர்கள் கவச உடைகளை அணிகின்றனர்.

நிலவு உருவானது எப்படி?

  • நிலவு உருவானது குறித்துப் பல கோட்பாடுகள் சொல்லப்பட்டாலும் சமீபத்திய கருதுகோளின்படி, கோடிக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பு செவ்வாய் கோள் அளவுள்ள ஒரு வான்பொருள் பூமி மீது மோதியது. அதன் காரணமாக உருவான பொருள்கள் (குப்பைகள்) எல்லாம் சேர்ந்து நிலவாக உருவாகிவிட்டதாகச் சொல்லப்படுகிறது.
  • நிலவில் ஈர்ப்பு விசை உண்டா?
  • நிலவிலும் ஈர்ப்பு விசை உண்டு. ஆனால், பூமியின் ஈர்ப்பு விசையுடன் ஒப்பிடும்போது மிகவும் குறைவானது. காரணம், நிலவைவிட பூமியின் நிறை அதிகம் என்பதுதான். அதனால்தான் ஒரு பொருளை நிலவில் வீசினால் அது மிதக்கிறது, நிலவில் நீங்கள் குதித்தால் ஆறு மடங்கு உயரத்துக்குச் சென்று, மெதுவாகக் கீழே இறங்குவீர்கள். நிலவின் ஈர்ப்பு விசை குறைவாக இருப்பதால்தான் இவ்வாறு நிகழ்கிறது. அதாவது பூமியின் ஈர்ப்பு விசையில் ஆறில் ஒரு பங்குதான் நிலவின் ஈர்ப்பு விசை இருக்கிறது. பூமியில் 40 கிலோ உள்ள பொருள் நிலவில் 6.7 கிலோ எடையாக இருக்கும்.

நிலவு இல்லாவிட்டால் என்ன ஆகும்?

  • நிலவு இல்லாவிட்டால் பூமி மிக வித்தியாசமாக இருக்கும். நிலவின் ஈர்ப்பு விசையால்தான் பூமியின் அச்சு அதிகத் தள்ளாட்டம் இன்றி சுழல் கிறது. பூமியின் காலநிலைகளை உறுதிப்படுத்துகிறது. கடலில் அலைகளை உருவாக்குகிறது. இரவில் பூமிக்கு வெளிச்சத்தை வழங்கு கிறது. பூமியில் வசிக்கும் மனிதர்களைத் தவிர பிற உயிரினங்களைக் கட்டுப்படுத்துகிறது.

நன்றி: தி இந்து (23 – 07 – 2023)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories