TNPSC Thervupettagam

அச்சுறுத்தும் குடிநீர்த் தட்டுப்பாடு: நாம் தயாராக இருக்கிறோமா?

March 1 , 2019 1905 days 1075 0
  • கோடை காலம் தொடங்குவதற்கு முன்பே தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் குடிநீர்த் தட்டுப் பாடு தலைகாட்டத் தொடங்கிவிட்டது.
  • தலைநகரம் சென்னை பிரச்சினையின் மையமாகிவிடும் நிலையில் இருக்கிறது. லாரிகள் மூலம் தண்ணீர் விநியோகிப்பது கணிசமாக அதிகரித்திருக்கிறது.
  • ஜனவரியில் 100 நடைகள் சென்ற லாரிகள் தற்போது 6,450 நடைகள் செல்கின்றன.
  • பல்வேறு பகுதிகளுக்கு ஒரு நாள் விட்டு ஒரு நாள் என்று 55 கோடி லிட்டர் தண்ணீர் தற்போது விநியோகிக்கப்படுகிறது. நிலைமை இன்னும் மோசமாகும் என்று அஞ்சப்படுகிறது.
  • 2016-ல் தமிழகத்தில் பருவ மழை இயல்பைக் காட்டிலும் 62% அளவுக்குக் குறைந்தது,
  • சென்னையில் இதன் பாதிப்பைக் கடுமையாக உணர முடிந்தது. 2017-ல் சென்னை குடிநீர் வழங்கல், வடிகால் வாரியத்தின் நான்கு நீர்த்தேக்கங்களில் நீர் இருப்பு கடுமையாகக் குறைந்திருந்தது. 1,100 கோடி கன அடி மொத்தக் கொள்ளளவில் 83 கோடி கன அடிதான் கையிருப்பில் இருந்தது.
  • அது பெரும் அவஸ்தையை ஏற்படுத்தியது.
  • இந்தப் பிரச்சினைகளுக்குப் பிறகும் அரசு எந்தத் தீர்வையும் நோக்கி நகராதது கொடுமை.
  • பிரச்சினையின் தீவிரத்தை அரசும் உணர்ந்ததாகத் தெரியவில்லை; மக்களுக்கும் உணர்த்த தலைப்படுவதாகத் தெரியவில்லை.
  • இத்தகைய சூழலில், 2018-லும் மழைப் பொழிவு சுமார் 55% அளவுக்குக் குறைந்தது.
  • விளைவாக இப்போதே சென்னையை வாட்டத் தொடங்கியிருக்கிறது தண்ணீர்த் தட்டுப்பாடு.
  • சென்னையைப் பொறுத்தவரை ஏறத்தாழ 80% மக்கள் தங்கள் குடிநீர்த் தேவைக்காகத் தனியாரையே சார்ந்துள்ளனர்.
  • சென்னை மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளின் 50%-60% தண்ணீர்த் தேவையைத் தனியார் லாரிகளே பூர்த்திசெய்கின்றன.
  • இப்படியான சூழலில் இன்றைக்கு, கட்டணம் செலுத்தித் தண்ணீர் லாரிக்கு ஏற்பாடு செய்தாலும் 7 முதல் 10 நாட்கள் கழித்துத்தான் லாரி வருவதாகச் சென்னையின் பல்வேறு பகுதிகளிலிருந்து குரல்கள் எழத் தொடங்கியிருக்கின்றன.
  • பிப்ரவரி தொடக்கத்தில் ஆந்திரத்திலிருந்து சென்னை வந்தடைந்த கிருஷ்ணா நதிநீர் இன்றைக்கு ஓரளவுக்குக் குடிநீர்ப் பிரச்சினையைச் சமாளிக்கும் வகையில் கைகொடுக்கிறது என்றாலும், அடுத்தடுத்த மாதங்களைச் சமாளிப்பதற்கு உடனடி செயல்திட்டம் வேண்டும்; குறிப்பாக மக்களிடம் நிலைமையின் தீவிரத்தை உணர்த்தி, பயன்பாட்டைக் குறைப்பது மிக முக்கியம்.
  • வெளியூர்களிலிருந்து பெறும் தண்ணீரைத்தான் பயன்படுத்துகிறோம் என்ற பொறுப்புணர்வே இல்லாமல், சென்னையின் நட்சத்திர விடுதிகள் தொடங்கி வீடுகளில் ஷவர் குளியல் குளிப்பவர்கள் வரை எல்லாருமே ஆடம்பரப் பயன்பாட்டைத் தொடர்ந்தால், அதன் விளைவுகள் கீழே உள்ள மக்களையே கடுமையாகப் பாதிக்கும்.
  • 2020-வாக்கில் சென்னையில் நிலத்தடிநீர் பெரிய அளவில் கீழே இறங்கிவிடும் என்ற ‘நிதி ஆயோக்’  எச்சரிக்கையைச் சென்னைவாசிகள் இந்த நேரத்தில் நினைவுகூர வேண்டும்.
  • அரசு தொலைநோக்கிலான செயல்திட்டத்துக்குத் தயாராக வேண்டும்.

நன்றி: இந்து தமிழ் திசை

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories