TNPSC Thervupettagam

இந்தியாவை அறிவோம்: குஜராத்

May 2 , 2019 1846 days 1760 0
மாநில வரலாறு
  • சிந்து சமவெளி நாகரிகத்தின் மத்திய பகுதிகளில் ஒன்றாக இருந்தது குஜராத். மெளரியப் பேரரசு, குப்தப் பேரரசு, சாளுக்கியர்கள், ராஷ்டிரகூடப் பேரரசு, பாலப் பேரரசு, குர்ஜர் பிரதிஹார் பேரரசு போன்றவற்றின் ஆட்சியின் கீழ் இருந்த பிரதேசம் இது. மைத்திரகர்கள், சோலங்கிகள், ராஜபுத்திரர்கள் போன்றோரும் இப்பகுதியில் ஆட்சியில் இருந்தவர்கள். இந்தப் பேரரசின் முதலாம் பீமதேவனின் ஆட்சிக் காலத்தில், 1024-ல் சோமநாதர் ஆலயத்தை கஜினி முகமது சூறையாடியதாகச் சொல்கின்றன வரலாற்றேடுகள். அடுத்தடுத்த காலகட்டங்களில் முகலாயர்கள், மராத்தாக்கள் போன்றோரின் ஆட்சியின் கீழ் இருந்த இப்பகுதி, பின்னர் போர்த்துகீசியர்கள், பிரெஞ்சுக்காரர்கள், ஆங்கிலேயரின் ஆளுகையின் கீழ் வந்தது. மாநிலங்கள் மறுசீரமைப்புச் சட்டம் 1956-ன்படி மராத்தி, குஜராத்தி, கட்சி, கொங்கணி என்று பல்வேறு மொழிகள் பேசும் பிரதேசங்களை உள்ளடக்கிய பம்பாய் மாநிலம் உருவாக்கப்பட்டது. 1960-ல் இதிலிருந்து மகாராஷ்டிரம், குஜராத் ஆகிய இரு மாநிலங்கள் உருவாகின.
புவியியல் அமைப்பு
  • இந்தியாவின் மேற்குப் பகுதியில் உள்ளது. பரப்பளவில் நாட்டின் ஆறாவது பெரிய மாநிலம். இதன் பரப்பளவு 96 லட்சம் சதுர கிமீ. தமிழகத்தின் பரப்பளவு 1.30 லட்சம் சதுர கிமீ. நாட்டின் பரப்பளவில் குஜராத்தின் பங்கு 5.96%. மக்கள்தொகை 6 கோடி. மக்கள் அடர்த்தி ஒரு சதுர கிமீக்கு 308 பேர். (தமிழகத்தின் மக்கள் அடர்த்தி 555). 88.57% பேர் இந்துக்கள். முஸ்லிம்கள் 9.67% பேர். பட்டியலின சமூகத்தினர் 7%. பழங்குடியினர் 14.8%. கிறிஸ்தவர்கள் 0.52%, சமணர்கள் 0.96%, சீக்கியர்கள், 0.10%.
சமூகங்கள்
  • தொடக்கத்தில் பிராமணர்கள், படேல்கள் எல்லா மட்டத்திலும் ஆதிக்கம் செலுத்திவந்த நிலையில், 1981-ல் பக்‌ஷி ஆணையத்தின் பரிந்துரைகளின்படி சமூகரீதியாகவும் பொருளாதாரரீதியாகவும் பிற்படுத்தப்பட்ட சமூகத்தினருக்கு இடஒதுக்கீடு வழங்கினார் காங்கிரஸ் முதல்வர் மாதவ் சிங் சோலங்கி. இதனால், வேலைவாய்ப்புகள் இழந்ததாகச் சொல்லிவந்த படேல் (பாடிதார்) சமூகத்தினர் 2015-ம் ஆண்டில் தங்களைப் பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் சேர்க்கக் கோரி போராட்டம் நடத்தினார்கள். குஜராத்தில்
  • 3% படேல் சமூகத்தினர். தாக்கூர்கள், ராஜபுத்திரர்கள், சிந்திக்கள், கன்ஸாராக்கள், சோனி சமூகத்தினர், ரகுவன்ஷீக்கள் ஆகியோரும் முக்கியத்துவம் கொண்ட சமூகத்தினர்.
ஆறுகள்
  • சாபர்மதி, தபதி, நர்மதை, மாஹி, பனாஸ், சரஸ்வதி, சிறு நதிகள் உள்ளிட்ட 185 நதிகள் உள்ளன. மாநிலத்தின் பெரு நிலப்பரப்பில் 17 நதிகளும், செளராஷ்டிரப் பகுதியில் 71 நதிகளும், கட்ச் பகுதியில் 97 நதிகளும் உள்ளன. சாபர்மதி, தபதி, நர்மதை, மாஹி உள்ளிட்ட 32 முக்கிய நதிகள் உள்ளன. குஜராத்தின் மிக நீளமான நதி நர்மதை. அதேசமயம், பெரிய நதி சாபர்மதி.
காடுகள்
  • 21,899.49 சதுர கிமீ காடுகள் உள்ளன. மாநிலத்தின் பரப்பளவில் இது 17%. இது தேசிய சராசரியைவிட (21.54%) மிகக் குறைவு. 14,594.42 சதுர கிமீ காப்புக் காடுகள். 2,884.11 சதுர கிமீ பாதுகாக்கப்பட்ட காடுகள். வகைப்படுத்தப்படாதவை 4,420.46 சதுர கிமீ. ஆனந்த் மாவட்டத்தில் குறைவான வனப் பகுதிகளும், கட்ச் மாவட்டத்தில் அதிகமான வனப் பகுதிகளும் (5,598.83 சதுர கிமீ) உள்ளன. ஆசிய சிங்கங்களுக்குப் பேர்போன கிர் தேசியப் பூங்கா உள்ளிட்ட நான்கு தேசியப் பூங்காக்களும், 23 சரணாலயங்களும் உள்ளன.
நீராதாரம்
  • 665 பெரிய அணைகள் உள்ளன. 100-க்கும் மேற்பட்ட அணைகள் 50 வருடப் பழமை கொண்டவை. நர்மதை அணையின் குறுக்கே கட்டப்பட்ட சர்தார் சரோவர் அணை, பல்வேறு சர்ச்சைகளுக்கு இடையில் 2006-ல் பயன்பாட்டுக்கு வந்தது. மாநிலத்தின் 90% நீர்ப்பாசனங்கள் நிலத்தடி நீரைச் சார்ந்தே அமைந்திருக்கின்றன. கடந்த 15-20 ஆண்டுகளில் நிலத்தடிநீர், 600 அடிக்கும் கீழே சென்றுவிட்டதாகவும் தெரிவிக்கிறார்கள்.
கனிம வளம்
  • லிக்னைட், கச்சா பெட்ரோலியம் உற்பத்தியில் இரண்டாம் இடம் வகிக்கும் மாநிலம். சுண்ணாம்புக் கல், மாங்கனீசு, பாக்ஸைட், ஜிப்சம், ஃப்ளோரைட், டோலோமைட் போன்றவை அதிகமாக உற்பத்தியாகின்றன. ஆம்பாதுங்கர் பகுதியில் உலகிலேயே அதிக அளவில் ஃப்ளோரைட் உற்பத்தி செய்யப்படுகிறது. செளராஷ்டிரா, லக்பத், கேடா, பனாஸ்கான்டா ஆகிய மாவட்டங்களில் தரமான சுண்ணாம்புக் கல் உற்பத்தி செய்யப்படுகிறது. அங்கலேஸ்வர், கலோல், காம்பே, நவகம் போன்ற பகுதிகளில் எண்ணெய் மற்றும் எரிவாயு அதிகம் கிடைப்பதாகக் கண்டறியப்பட்டிருக்கிறது.
பொருளாதாரம்
  • நாட்டின் புகையிலை, பருத்தி, நிலக்கடலை உற்பத்தியில் பிரதானப் பங்கு வகிக்கும் மாநிலம். மருந்து உற்பத்தி, பால் உற்பத்தியில் முதலிடம். உலகில் பட்டை தீட்டப்படும் வைரங்களில் பத்தில் எட்டு இங்குதான் தீட்டப்படுகிறது. மின்பொறியியல் தொடர்பான பொருட்கள் உற்பத்தி, காய்கறி எண்ணெய், சிமென்ட் உற்பத்தியிலும் முன்னணி. நாட்டின் சோடியம் கார்பனேட் உற்பத்தியில் 91% பங்கு வகிக்கிறது. உப்பு உற்பத்தியில் 66%. 2016-17-ல் இதன் ஜிடிபி ரூ.12 லட்சம் கோடி. 2011-12 முதல் 2016-17 வரையிலான காலகட்டத்தில் மாநிலத்தின் ஜிடிபி வளர்ச்சி விகிதம் 55%.
முக்கியப் பிரச்சினைகள்
  • வேளாண் விளைபொருட்களுக்கு உரிய அளவு குறைந்தபட்ச ஆதரவு விலை, பயிர்க் காப்பீடு கிடைக்காதது, உர விலை உயர்வு போன்ற பிரச்சினைகளை விவசாயிகள் எதிர்கொள்கிறார்கள். பொருளாதார அடிப்படையில் 10% இடஒதுக்கீடு வழங்கப்படுகிறது என்றாலும் படேல் சமூகத்தினரின் கோபம் இன்னும் குறையவில்லை. உனா சம்பவத்தைத் தொடர்ந்து, ஜிக்னேஷ் மேவானி தலைமையில் திரண்டிருக்கும் பட்டியலின சமூகத்தினர் அரசியல் மாற்றம் கோரிவருகிறார்கள். சர்தார் வல்லபாய் படேல் சிலை உருவாக்கத்தின் காரணமாக வாழ்விடம் இழந்த பழங்குடியினர் அரசின் மீது அதிருப்தியில் இருக்கிறார்கள்.

நன்றி: இந்து தமிழ் திசை

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories