TNPSC Thervupettagam

எப்படி வந்தது நோட்டா?

March 27 , 2019 1871 days 3418 0
  • தொகுதியில் போட்டியிடும் எந்த வேட்பாளரையும் பிடிக்கவில்லை. அதேசமயம், வாக்களிப்பதிலிருந்து தவறவும்; தனது வாக்கை இன்னொருவர் தவறாகப் பயன்படுத்துவதை அனுமதிக்கவும் விருப்பமில்லை – இப்படியான ஒரு தருணத்தில் வாக்காளர்கள் என்ன செய்ய முடியும்? அவர்களுக்கென உருவாக்கப்பட்ட முறைதான் நோட்டா.
  • தேர்தல் நடத்தை விதிமுறைகள் (1961)-ன்படி 49-ஓ எனும் முறை கொண்டுவரப்பட்டது. எனினும், தொடக்கத்தில் வாக்குச் சீட்டுகளிலோ, வாக்குப் பதிவு இயந்திரத்திலோ இதற்கான பொத்தான்கள் சேர்க்கப்படவில்லை. எந்த வேட்பாளருக்கும் வாக்களிக்க விரும்பாத வாக்காளர், வாக்குச் சாவடியில் உள்ள தேர்தல் அதிகாரியிடம் அதைத் தெரிவிக்க வேண்டும்; அதற்கான படிவத்தில் கையெழுத்திட வேண்டும் என்றெல்லாம் நடைமுறைகள் இருந்தன. இது, வாக்களிப்பதற்கான ரகசியக் கொள்கையை மீறுவதாக விமர்சனங்கள் எழுந்தன.
வழக்குகள் – தீர்ப்பு
  • இந்நிலையில், இது தொடர்பான வழக்கில் 2013-ல் தீர்ப்பளித்த உச்ச நீதிமன்றம், வாக்குச் சீட்டுகளிலும், மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்திலும் ‘நோட்டா’ (நன் ஆஃப் தி அபோவ்) வசதியை ஏற்படுத்த உத்தரவிட்டது. வேட்பாளர் பட்டியலின் இறுதியில் ‘நோட்டா’ சேர்க்கப்பட்டது. இதன்மூலம், வாக்காளர் நோட்டாவுக்கு வாக்களித்த ரகசியம் காக்கப்படும் வாய்ப்பு உருவாக்கப்பட்டது. 2013-ல் டெல்லி, சத்தீஸ்கர் உள்ளிட்ட ஐந்து மாநில சட்டமன்றத் தேர்தல்களில் நோட்டா முறை அறிமுகப்படுத்தப்பட்டது. தமிழகத்தில் ஏற்காடு தொகுதியில் நடந்த இடைத்தேர்தலில் முதன்முறையாகப் பயன்படுத்தப்பட்டது. 2014 மக்களவைத் தேர்தலில் நோட்டாவுக்கு வாக்களித்தவர்களின் எண்ணிக்கை 60 லட்சம்.
  • ஒரு தொகுதியில் நோட்டாவுக்கு வாக்களித்தவர்களின் எண்ணிக்கையே அதிகம் எனும்போது, அதிகபட்சமாக வாக்கு பெற்ற வேட்பாளரே வெற்றிபெற்றதாக அறிவிக்கப்படுவார் என்பதால் நோட்டாவின் நோக்கம் நிறைவேறிவிட்டதாகவும் சொல்லிவிட முடியாது!

நன்றி: இந்து தமிழ் திசை

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories