TNPSC Thervupettagam

அலுவல்மொழி, தொடர்புமொழி: ஒரு புதிய விவாதம்!

April 11 , 2022 760 days 671 0
  • அண்மையில் நடந்த நாடாளுமன்ற அலுவல் மொழிக் கூட்டத்தில் கலந்து கொண்ட மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, அலுவல்மொழியான இந்தியை நாட்டின் ஒருமைப்பாட்டின் முக்கிய அங்கமாக மாற்றும் நேரம் வந்துவிட்டது என்று பேசியிருப்பது, அரசியல் வெளியில் கடும் ஆட்சேபணைகளை உருவாக்கியிருக்கிறது.
  • இந்திய அரசமைப்பின் அலுவல்மொழி தொடர்பிலான 17-வது பகுதி இயற்றப்பட்ட காலத்திலிருந்தே கடும் விவாதங்களுக்கு இடமளிப்பதாக இருந்துவருகிறது.
  • பிரிட்டிஷ் ஆட்சிக் காலத்திலேயே, அன்றைய சென்னை மாகாணத்தில் இந்தியைப் பாட மொழிகளில் ஒன்றாக்கும் முயற்சிகள் தோல்வியில் முடிந்தன. இந்தியா சுதந்திரம் பெற்ற பிறகும் கூட, அத்தகைய முயற்சி வெற்றியைப் பெறவில்லை.
  • இந்திய அரசமைப்பு நடைமுறைக்கு வந்து 15 ஆண்டுகளுக்குப் பின்னர், இந்தியை அலுவல் மொழியாக நாடு முழுவதும் ஏற்பது என்ற கூறு, தமிழ்நாட்டின் கடுமையான போராட்டங்களுக்கும் எதிர்ப்புகளுக்கும் பிறகு காலவரையற்றுத் தள்ளி வைக்கப் பட்டிருக்கிறது.
  • எனினும், இந்திய அரசமைப்பைப் பொறுத்தவரை அலுவல்மொழி என்பது இந்தி என்பதாகவே இன்னும் இருக்கிறது.
  • இந்தி பேசாத மாநிலங்கள் தங்களது மொழியை மாநிலத்துக்குள்ளும் ஆங்கிலத்தை மத்திய அரசுடனான தொடர்புகளுக்கும் பயன்படுத்திக்கொள்ளலாம் என்று விலக்களிக்கப் பட்டுள்ளது.
  • அதே நேரத்தில், இந்தியை அலுவல்மொழியாக வளர்த்தெடுப்பதற்கான நடவடிக்கைகள் மத்திய உள் துறை அமைச்சகத்தின் முக்கியமான பொறுப்புகளில் ஒன்றாக இருந்து வருகிறது.
  • கட்சி பேதங்களின்றி கடந்த காலத்திலும் இவ்வாறு அலுவல்மொழிக் கூட்டங்களை நடத்துவதும் மத்திய அரசின் கீழ் இயங்கும் அனைத்துத் துறைகளுக்கும் பொதுத் துறை நிறுவனங்களுக்கும் சுற்றறிக்கைகளை அனுப்புவதும் வழக்கமானதாகவே இருந்து வருகிறது.
  • கரோனா பெருந்தொற்றுக் காலத்திலும்கூட மத்திய உள் துறை அமைச்சகம், அலுவல் மொழியாக இந்தியை நடைமுறைக்குக் கொண்டுவருவது குறித்து, சுற்றறிக்கைகளை அனுப்பத் தவறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
  • சட்டமன்றத் தேர்தல் பரபரப்பில் இருமொழிக் கல்விக் கொள்கையைப் பின்பற்றும் தமிழ்நாட்டுக் கட்சிகள், அப்போது அதைப் பெரிதாகக் கண்டுகொள்ளவில்லை.
  • தமிழ்நாட்டைப் பொறுத்தவரை, இந்தியை அலுவல்மொழியாக ஏற்பது மாநிலத் தன்னாட்சிக்கும் மொழியுரிமைக்கும் பெரும் அச்சுறுத்தலாகப் பார்க்கப்படுகிறது. இந்திக்குப் பதிலாக ஆங்கிலத்தை இரண்டாவது மொழியாக ஏற்றதன் வாயிலாக, உலகளாவிய வேலைவாய்ப்புகளையும் தமிழ்நாடு பெற்றிருக்கிறது.
  • எனவே, இந்தியை அலுவல்மொழியாக மட்டுமின்றி, தொடர்புமொழியாகவும் பின்பற்ற வேண்டிய தேவை இங்கு எழவில்லை.
  • மத்திய உள்துறை அமைச்சரின் சமீபத்திய உரை, அலுவல்மொழி என்பதைக் காட்டிலும் தொடர்பு மொழியாகவே இந்தியை ஏற்கச் செய்யக் கோருகிறது.
  • வெவ்வேறு இந்திய மொழிகளைத் தாய்மொழியாகக் கொண்டவர்கள், தங்களுக்கிடையில் ஆங்கிலத்துக்குப் பதிலாக இந்தியைத் தொடர்புமொழியாகப் பயன்படுத்துமாறு அவர் கோருவது, இந்தியைப் பிரதானமாகப் பேசும் வட இந்தியாவுக்குப் பொருத்தமாக இருக்கலாம்.
  • இந்திக்கு முற்றிலும் மாறுபட்ட மொழிக் குடும்பத்தைச் சேர்ந்த தென்னிந்தியாவுக்கு அது எப்படிப் பொருத்தமாகும் என்பது இயல்பான கேள்வி.
  • மத்திய உள்துறை அமைச்சரின் இந்தக் கருத்து, வழக்கமாகத் தொடர்ந்துவரும் அலுவல் மொழி தொடர்பான விவாதத்தைத் தொடர்புமொழி நோக்கிலும் விரிவு படுத்தியிருக்கிறது. அதற்கு எதிரான தீவிர விவாதங்களும் முன்வைக்கப்படுகின்றன.

நன்றி: தி இந்து (11 – 04 – 2022)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories